சி. இறையரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. இறையரசன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழகத்தின் இலக்கிய வட்டத்தில் பாவலர் இறையரசன் என்றே அழைக்கப்படுகிறார். இவர் 20 நவம்பர், 1943 ஆம் ஆண்டு, தமிழகத்தின் கரூர் மாவட்டத்தின் வட்டங்களுள் ஒன்றான, கரு(வூ)ர் வட்டத்தின் கீழ் அமைந்துள்ள, சூ. தொட்டம்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. சிவன்மலை, தாய் பொன்னம்மாள் என்ற பெற்றோருக்கு, இரண்டாம் மகனாகப் பிறந்தார். திண்ணைப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு வரைக்கக் கற்றார். எனினும், அதன்பின் தொடர்ந்து முத்தமிழ் கற்றதால், பாக்கள் எழுதும் திறன் பெற்றிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு முன்னனி இதழ்களில், இவரின் படைப்புகள் பதிந்துள்ளன. இவரின் சிந்தனை ஊற்று என்னும் பாநூலுக்கு, அமெரிக்கக் கலிபோர்னிய உலகக் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம், இலக்கிய முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும், பல இலக்கிய அமைப்புகளினால் சிறப்புப் பெயர் பட்டங்களைப் பெற்றுள்ளார். அவற்றில், பாமாமணி, குறள் படைப்புச் செம்மல், உரைப்பா ஊற்று, இன்பா ஏறு போன்றவைகள் குறிப்பிடத்தக்கன ஆகும். பாவேந்தர் நூற்றாண்டு விழாவில், தமிழக, புதுவை அரசுகளின் சான்றிதழ்களும், பரிசும் பெற்றவர். பேராசிரியர் மது ச. விமலானந்தம் தொகுத்த தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் இவரைப்பற்றிய குறிப்புரைகள் உள்ளன. உலகத்திருக்குறள் மையம், குறளாயம், அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்க்காசு இலக்கியக் குழு போன்ற பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

  1. குறளும் பொருளும்
  2. செந்நீரில் மலரும் செந்தமிழ் ஈழம்
  3. சிந்தனை ஊற்று
  4. நாலும் பொருளும்
  5. மூன்று தமிழ்க்களம்
  6. சிலம்பும் பொருளும் [புகார் காண்டம்]
  7. சிந்தனை முழக்கம்
  8. பம்பாய் இலக்கிய உலா (இவரின் முதல் உரைவடிவ நூல்)
  9. பாண்டியனார் குறள் அந்தாதி - பட்டி வீரன்பட்டி ஊ. பு. அ. சவுந்திர பாண்டியனாரின் வாழ்க்கை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._இறையரசன்&oldid=3014406" இலிருந்து மீள்விக்கப்பட்டது