அம்மன்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மன்குறிச்சி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அம்மன்குறிச்சி (Ammankurichy), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொன்னமராவதி வட்டத்திலுள்ள ஊராட்சி ஆகும்[4][5]. அம்மன்குறிச்சி ஊராட்சியில் சொக்கநாதபட்டி, கருமங்காடு, அம்மன்குறிச்சி, ஆவிங்கன்பட்டி ஆகிய ஊர்கள் அடங்கி உள்ளன.

மக்கள் தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள்.

கோவில்கள்[தொகு]

ஊர் பெயருக்கு ஏற்றபடி ஊர் நுழைவாயிலில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் பிள்ளையார் கோவில், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் இங்கு அமைந்துள்ளது. இதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்[தொகு]

அம்மன் குறிச்சி மீனாட்சி அம்மன் கோயில் இசை, ஓவியம், சிற்பம், நடனம் ஆகிய கலைகளின் பதிவுக் கூடமாக உள்ளது.

மதுரையை ஆண்ட நாயக்கர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கல்லாலும் கலையாலும் தொண்டாற்றியது போலவேதான் அம்மன் குறிச்சி மீனாட்சி அம்மனுக்கும் தொண்டாற்றியுள்ளனர். இக்கோயிலைச் சுற்றியுள்ள, "மறவா மதுரை', "சொக்கநாத பட்டி' ஆகிய ஊர்கள் மதுரையைத் தொடர்புபடுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகள். சன்னதிகளை இணைக்கும் வெளிமண்டபத்தில் வணங்கும் கோலத்தில் நாயக்க மன்னர்கள், அரசிகளின் கற்சிலைகள் பல உள்ளன. இச்சிலைகளில் ஒன்று இக்கோயிலைக் கட்டிய பூச்சி நாயக்கர் சிலை. இந்தச் சிலைகளின் கலைநயம், ஆடை அணிகலன்கள் அனைத்தும் காண்போரை கவரக் கூடியன. இதனை தொடர்ந்து ஒரு மண்டபம் உள்ளது. இது கலைக்கூடமாகக் கருதத்தக்கது. இது வெளிவாசலையும் ராஜ கோபுரத்தையும் இணைக்கிறது. நடுவில் நந்தி மண்டபம். சுற்றிலும் ஒற்றைக் கல்தூண்கள். அவற்றில் பிள்ளையார் முதல் பத்ரகாளி வரை பல ஆளுயர சிற்பங்கள்.

இக்கோயிலின் சுற்றுப் பிரகாரம் தஞ்சை பெரிய கோயில் பாணியை ஒட்டியவை. மண்டபத்துடன் கூடிய சுற்றுப் பிரகாரமாக அது விளங்குகிறது. சுற்றுப் பிரகார உள்பகுதியில் சுப்பிரமணிய சுவாமிக்குத் தனி சன்னதி உண்டு. வெளிப்புறத்தில் உள்ள வெளி மண்டபம் சிங்கங்களைத் தாங்கும் சிறப்புடையது. ஒரு பெரிய கல்வெட்டு இந்த மண்டபத்தில் நாட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் கோயில் பணியாளர்களான பண்டாரங்களுக்குத் தரப்பட வேண்டிய தர்மங்களும் கோயில் மேல்தளம் சீர் செய்யப் பெற்ற வரலாறும் குறிக்கப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் தலைப்பில் சூரிய முத்திரை உள்ளது. இக்கல்வெட்டின் காலம், கல்வெட்டை வடித்தோர் பற்றிய குறிப்புகள் அழிந்தும் அழியாமலும் உள்ளன.

இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பில் உள்ள இந்தக் கோயிலில் தேர்த் திருவிழா போன்ற திருவிழாக்களும், பிரதோஷம், மங்கல நாள் விழாக்களும் நடைபெற்று வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-08-11.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2013-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்குறிச்சி&oldid=3887536" இலிருந்து மீள்விக்கப்பட்டது