தமிழ்நாட்டில் இறைமறுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் இறைமறுப்பு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இறைமறுப்புக் கொள்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்துள்ளது. இன்று பெரும்பான்மை தமிழ்நாட்டார் சமய நம்பிக்கை உடையவர் எனினும், இறைமறுப்பாளர்களின் தொகை குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது எனலாம். காரணம் பல வகை கொள்கை உடையவர்களை முன்னோர் சமயத்தை கொண்டு இந்து என்று குடைக்குள் அடையாளப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டில் உண்டு.

பெரும்பான்மை இதர மாநிலங்கள், நாடுகள் போல் அல்லாமல் இறைமறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது மதிப்புபெற்ற ஒரு கொள்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டின் முதல்வர்களான கா. ந. அண்ணாதுரை, ம. கோ. இராமச்சந்திரன், கருணாநிதி ஆகியோர் இறைமறுப்புக் கொள்கை உடையோர். காமராஜர் அறியவியலாமைக் கொள்கை கொண்டவர். பெரியார் உட்பட பல இதர தலைவர்களும் இறைமறுப்புக் கொள்கை உடையவர்கள். மேலும் திரைப்படத்துறையைச் சாந்த எம். ஆர். ராதா, கமலகாசன், சத்தியராஜ், சீமான் போன்றோர் இறைமறுப்பாளர்கள் ஆவர்.

கொள்கையும் வரலாறும்[தொகு]

சங்க கால இலக்கியங்களில் காதல், மது, ஊன் உண்ணல், போர் ஆகியவை இயல்பாக கூறப்படுள்ளன. இது உலக உடன்பாட்டு சிந்தனை. இந்த இலக்கியங்களில் பலவற்றில் கடவுள் அல்லது சமயம் பாடு பொருளாக இருக்கவில்லை. இவற்றுக்கு ஒத்த உலாயுதக் கொள்கை அக்காலத்தில் செல்வாக்கு பெற்று இருந்தது. எனினும் சமயங்களின், குறிப்பாக இந்து சமய நம்பிக்கைகள் வலுபெற்றே இருந்தன.

பின்னர் புத்த, சமண சமயங்களின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. இந்த சமயங்கள் மனிதவுருவிலான பண்பிலான இறைபற்றிய கொள்கைகளை மறுத்தன. திருக்குறள், நாலடியார் போன்ற இக்கால படைப்புகளில் எந்தவித தீவர கடவுட் கொள்கை அல்லது வழிபாட்டு முறைகள் வலியுறுத்தப்படவில்லை. அதைப் பின் தொடர்ந்த பக்தி இயக்கம், மீண்டும் இந்து சமய நம்பிக்கைகளை மக்களிடம் பரப்புவதில் வெற்றி கண்டது. சோழர் ஆட்சி, நாயக்கர் ஆட்சி காலங்களில் இந்து சமயம் அரச ஆதரவு பெற்று வேரூன்றிக் கொண்டது. அதன் பின் ஏற்பட்ட இஸ்லாமிய மேற்குல ஆக்கிரமிப்புகள் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சமயங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி, 7-10% மக்களை கவர்ந்து கொண்டன.

இருபதாம் நூற்றாண்டில் இறைமறுப்புக் கொள்கையின் எழுச்சி பெரியார் முன்னெடுத்த சுய மரியாதை இயக்கத்தில் இருக்கிறது. அதைப் பின்வற்றி வந்த திராவிட இயக்கமும் இறைமறுப்புக் கொள்கை கொண்டது. இவ்வியக்கங்கள் சமயம் வன்முறை, மூடநம்பிக்கை. வளம் வீணாக்கலுல், சமூக பிரிவினை ஆகியவற்றுக்கு இட்டு செல்கிறது என்றும், இறைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், பகுத்தறிவும் அறிவியலுமே முன்னேற்றத்துக்கு அவசியம் என்றும் கூறின. எனினும் பிற்காலத்தில் பெரும்பான்மை மக்களிடம் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக இறைமறுப்புக் கொள்கை முன்னிறுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் இடதுசாரி இயக்கங்களும் இறைமறுப்புக் கொள்கையை கொண்டவை.

நடைமுறையில் இறைமறுப்பு[தொகு]

தமிழ்நாட்டில் 88 சதவிகிதத்தினர் இந்துக்கள். அவர்கள் இந்து கொண்டாட்டங்கள், சடங்குகளில் பங்கு கொண்டாலும், பலர் தத்துவ நோக்கில் காரியவாதிகள் எனலாம். எடுத்துக்காட்டாக பா. ராகவன் கருத்தைக் கூறலாம்: "எனக்கு கீதை சொன்ன தத்துவமும் அது காட்டிய கடவுளும் ஒன்றேதான். இரண்டே சொல்லில் அதனை முடித்துவிடலாம். வேலையப் பாருடா." [1]

அமெரிக்காவில் இருப்பது போன்று அறிவியல் சமய முரண்பாடுகள் தமிழ்நாட்டில் முதன்மையாக இல்லை. உலகின் தோற்றம், படிவளர்ச்சிக் கொள்கை போன்றவற்றைப் பற்றிய அறிவியல் விளக்கங்களை பெரும்பான்மை படித்த தமிழர் ஏற்கின்றனர் எனலாம்.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பா. ராகவன் (2008). என் மதம் என் கடவுள். [1] பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம்

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]