ராபியேல் சான்சியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபியேலோ சான்சியோ
ராபேல் தன்னைத் தானே வரைந்தது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் காணப்படவில்லை.
தேசியம்இத்தாலியர்
கல்விபெருஜினோ
அறியப்படுவதுஓவியம், கட்டிடக்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆதென்ஸ் பாடசாலை
அரசியல் இயக்கம்மறுமலர்ச்சி

பெரும்பாலும் ராபியேல் என அழைக்கப்படும் ராபியேல் சான்சியோ ( 28 மார்ச் அல்லது 6, ஏப்ரல் 1483 – ஏப்ரல் 6, 1520),[1] என்பவர் ஒரு இத்தாலிய ஓவியரும், கட்டிடக்கலைஞரும் ஆவார். மேல் மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்த இவர், கச்சிதமானதும், அழகு நிறைந்ததுமான ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி ஆகியோருடன், இவரும் சேர்ந்து ஓவியத்துறையின் மும்மூர்த்திகள் எனப்பட்டார்.[2] ராபியேல் பெருமளவான உற்பத்தித் திறன் கொண்டவர். வழமைக்கு மாறான பெரிய வேலைத்தலம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் மிக இளம் வயதான 37 வயதிலேயே இறந்துவிட்டாலும், இவரது ஓவியங்கள் பெருமளவில் உள்ளன. வாட்டிகனின் உள்ள ராபியேல் கூடங்களிலுள்ள சுவரோவியங்களே இவரது மிகப்பெரிய ஓவியங்களாகும். எனினும் இவ்வோவியங்கள் நிறைவடையும் முன்பே ராபேல் இறந்துவிட்டார்.

ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன.

இவரது தொழில் வாழ்வை மூன்று கட்டங்களாகவும் மூன்று பாணிகளாகவும் பிரிப்பது உண்டு. முதற் கட்டம் இவர் உம்பிரியாவில் இருந்த காலம். அடுத்தது 1504 முதல் 1508 வரையான காலம். ராபியேல் புளோரன்சின் கலை மரபை உள்வாங்கிக் கொண்ட காலம். இறுதியாக இவர் பாப்பரசர்களுக்கும், அவர்களுடன் நெருங்கியோருக்குமான வேலைகளைச் செய்துகொண்டு, ரோமில் மிகவும் வெற்றிகரமாக விளங்கிய 12 ஆண்டுக் காலம்.

உர்பினோ[தொகு]

ராபியேல், இத்தாலியின் மார்ச்சேப் பகுதியில் இருந்த உர்பினோ என்னும் சிறிய, ஆனால் கலை அடிப்படையில் குறிப்பிடத்தக்க ஊரில் பிறந்தார். ராபியேலின் தந்தையார், ஜியோவன்னி சான்டி அங்கிருந்த டியூக்கின் அவையில் ஓவியராக இருந்தார். உர்பினோ ஆட்சி அவையின் நற்பெயர் பெடரிகோ டா மொன்டெபெல்ட்ரோ (Federigo da Montefeltro) என்பவரால் ஏற்பட்டது. ஒப்பந்தக் கூலிப் படைத் தலைவரான பெடரிகோ பாப்பரசரினால் உர்பினோவின் டியூக் ஆக்கப்பட்டவர். உர்பினோ பாப்பக நாடுகளில் (Papal States) ஒன்றாக விளங்கிய பெடரிகோவின் அவையில் கலைத்துறையிலும் இலக்கியத்துக்கே கூடுதல் கவனம் இருந்தது.

ஜியோவன்னி சான்டி, ராபியேலின் தந்தை; இரண்டு தேவதைகளால் தாங்கப்படும் கிறிஸ்து, c.1490

ஜியோவன்னி சான்டி ஒவியர் மட்டும் அல்லாது ஒரு கவிஞராகவும் இருந்தார். இவர் பெடரிகோவின் வரலாற்றைச் செய்யுள் வடிவில் எழுதியுள்ளார். இவர் டியூக்கின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ராபியேல் பிறப்பதற்கு முதல் ஆண்டில் பெடரிகோ, காலமானபோது ஆட்சியாளராக அவரது மகனான கிடோபால்டோ டா மொன்டெபெல்ட்டோ பதவியேற்றார். அவர் மந்துவாவின் (Mantua) ஆட்சியாளரின் மகளை மணம் முடித்தார். மந்துவாவின் அவை இசை, காட்சிக் கலைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. இத்தகைய பின்னணி கொண்ட சூழலில் வளர்ந்த ராபியேலுக்கு சிறப்பான பழக்க வழக்கங்களும், சமுதாயத் திறமைகளும் வாய்க்கப் பெற்றன. இக் காலத்துக்குச் சற்றுப் பின்னர் உர்பினோவின் ஆட்சிச் சபை பால்டாசாரே காஸ்டிக்லியன் எழுதிய நூலில் கூறப்பட்ட இத்தாலிய மனித நோக்கு சார்ந்த ஒழுக்கங்களுக்கான ஒரு மாதிரி அவையாகத் திகழ்ந்தது. காஸ்டிக்லியன் 1504 ஆம் ஆண்டில் உர்பினோவில் குடியேறினார். அவ்வேளையில் ராபியேல் உர்பினோவை விட்டுச் சென்றுவிட்டார் எனினும் அங்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டு இருந்தார். இதனால் காஸ்டிக்லியனும், ராபியேலும் நண்பர்களாயினர். ஆட்சிச் சபைக்கு அடிக்கடி வருபவர்களும், பிற்காலத்தில் கர்தினால்களாக ஆனவர்களுமான பியெட்ரோ பிபியேனா, பியெட்ரோ பெம்போ ஆகியோரும் ராபியேலுக்கு நண்பர்கள் ஆயினர். ராபியேல் ரோமில் தங்கியிருந்த காலத்தில் எழுத்தாளர்களாகப் பிரபலமாகிக் கொண்டு இருந்த இவர்களும் ரோமிலேயே இருந்தனர். மேல் தட்டு மக்களுடன் கலந்து பழகுவதில் ராபியேலுக்கு எவ்வித பிரச்சினையும் இருந்ததில்லை. இதனாலேயே இவருக்கு இவரது தொழிலில் எதையும் இலகுவாக அடையக்கூடியதாக இருந்தது. எனினும் ராபியேல் மனித நோக்கு சார்ந்த கல்வியைப் பெற்றிருக்கவில்லை.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பணி[தொகு]

பதின்ம வயதில் ராபேலே வரைந்து கொண்ட சுய ஓவியம்

ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார்.

1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார். பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார். பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்புத் தாய்க்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.[3]. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்[4]. அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார். சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.

இத்தாலியில் ராபேல்[தொகு]

ரபேல் வடக்கு இத்தாலியில் உள்ள பல்வேறு மையங்களில் வேலை செய்தார். ஆனால் அவர் அங்கு ஒரு "நாடோடி" வாழ்க்கை தான் மேற்கொண்டார். 1504-8 வரை அவர் இத்தாலி,ஃப்ளாரென்சில் வசித்தார். ஆனால் ப்ளோரன்ஸில் அவர் வாழ்ந்த காலம் பற்றி பாரம்பரிய குறிப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அவர் அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார் என குறிப்புகள் கூறுகின்றது.

ரோமில் ராபேல்[தொகு]

1508 இல் ராபேல் தனது வாழ்நாள் முழுவதும் வசித்த ரோமிற்குச் சென்றார். புதிய போப் இரண்டாம் ஜுலியஸ் இன் அழைப்பில், போப்பின் வாட்டிகன் அரண்மனையில் உள்ள நூலகத்தில் சுவரோவியம் வரைந்தார். இதற்கு முன் அவர் இது போன்ற பெரிய குழுக்களில் பணியாற்றியது இல்லை. அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை மிகப் பெரிய வாய்ப்பாக அவர் கருதினார். ஆனால் அவர் அங்கு ஒரு ஓவியம் மட்டுமே வரைந்தார். பின் சிஸ்டன் சேப்பலில் கோபுர ஓவியங்களையும் வரைந்தார்.

ஓவியத்தில் வரையப் பயன்படுத்திய பொருட்கள்[தொகு]

ராபியேலின் பல ஓவியங்கள் மரப்பலகைகளின் மீதே வரையப்பட்டுள்ளது (ஓவியம்; மடோனா ஆப் த பிங்). ஆனால் அவர் ஓவியம் தீட்டத் துணிகளையும் பயன்படுத்தியுள்ளார் (ஓவியம்:சிஸ்டைன் மடோனா). மேலும் காயக்கூடிய எண்ணெய் வகைகளான ஆளிக்கொட்டை எண்ணெய் மற்றும் வாதுமை எண்ணெய்களைக் கொண்டும் வரைந்துள்ளார். அவருடைய வண்ணத்தட்டு மதிப்பு வாய்ந்த தனித்துவமான வண்ணக் கலவைகளை உருவாக்கி வரைந்துள்ளார். அவரது பல ஓவியங்களில் (ஓவியம்: அன்சிடேய் மடோனா) சிறப்பு வகை மரங்களையும் பயன்படுத்தியுள்ளார். மேலும் தனது ஓவியங்களில் தங்க உலோகப் பொடி கொண்டும் பிசுமத்தைக் கொண்டும் வண்ணம் தீட்டியுள்ளார்[6][7].

பணிமனை[தொகு]

ராபியேல் சொந்தமாக ஒரு பணிமனையைக் கொண்டிருந்ததாக வசாரி கூறுகிறார். அதில் ஐம்பது மாணவர்கள் மற்றும் உதவியாளர்கள் இருந்ததாகவும் பின்னர் அனைவரும் புகழ்பெற்ற தனிப்பெரும் ஓவியர்களாக மாறியதாகவும் வசாரி கூறுகிறார். இது மிகப்பெரிய பணிமனையாக ஒற்றை நபரால் கட்டமைக்கப்பட்டது. இத்தாலியின் பிற பகுதிகளிலிருந்தும் திறமையான ஓவியர்களைத் தங்கள் பணிமனைக் குழுவில் இணைத்துக்கொண்டு உப ஒப்பந்தங்களை அவர்கள் மூலமாகவும் தனது மாணவர்களைக் கொண்டும் ராபியேல் செயல்படுத்தினார். அவர்களுடைய பணிமனையில் உள் வேலை ஏற்பாடுகளுக்கான ஆதாரங்கள் மிகக்குறைந்த அளவே கிடைத்துள்ளன.[8]

ராபியேலிடம் பணிமனையில் மாணவர்களாக இருந்தவர்களில் ரோம் நகரிலிருந்து வந்த இளம் வயது கியுலியோ ரொமானோ (ராபியேல் இறக்கும் போது வயது இருபத்தி ஒன்று) மற்றும் ஜியான்பிரான்சிஸ்கோ பென்னி என்ற ஓவியர் இருவரும் ராபியேலின் இறப்பிற்குப் பிறகு அவரது பணிமனையை விரிவாக்கியதுடன் அவரிக் ஓவியங்களைப் படைத்து வெளியிடத் துவங்கினர். கியலியோ அளவிற்கு பென்னி சிறப்படைய வில்லை. இருப்பினும் ராபியேலின் ஓவியங்களை கிட்டத்தட்ட ஒத்த ஓவியங்களை கியுலியோ ரொமானோ படைத்து புகழ் பெற்றார். பெரியோ டி வேகா என்ற ஓவியர் மற்றும் கட்டிடப் பொருட்களை சுமக்கும் வேலை செய்தவர் பின்னாளில் ஓவியராக உயர்ந்த பொலிடோரோ டா கிராவாகியோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ஓவியர்களாவர்.[9] 1527 ல் ரோம் விலக்க யுத்தத்தின் போது ராபியேலின் மாணவர்கள் ஓவியர்கள் சிதறுண்டனர் பலர் கொல்லப்பட்டனர்.[10]

ராபியேல் மிகச்சிறந்த படைப்பாக்கம் நிறைந்த நளினமான பணிமனையை நடத்தி வந்ததாக வசாரி அழுத்திக்கூறுகிறார். அசாதாரணமான திறமைகளுடன் ராபியேல் தனது காப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் மைக்கலாஞ்சலோ மற்றும் தன்னுடைய படைப்புகளிடையே உள்ள உறவுமுறைகள் குறித்து விரிவாக விவாதம் செய்வார் என வசாரி வலியுறுத்திக் கூறுகிறார்.[11] பென்னி மற்றும் கியுலியோ ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் திறமைகளுடன் ராபியேலின் ஓவியங்களைப் போல படைத்துக்காட்டினர் [12].ராபியேலின் பல சுவர் ஓவியங்கள் சந்தேகத்துக்கிடமின்றி அவருடைய வெளிப்படுத்தும் திறனை பறைசாற்றுகின்றன. அவரது பல உருவப்படங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. அதில் அவருடைய நுணுக்கமான கை வேலைப்பாடகள் வரைதல் நுட்பம் போன்றவை வாழ்கையின் முடிவு வரையிலும் நல்ல ஓவியங்களை படைத்துக்கொண்டே இருந்தார் என்பதை விளக்குகின்றன[13].

உருவப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jones and Penny, 1 and 246. He died on his 37th birthday; according to different sources, his birth and death both occurred on Good Friday. The matter has been much discussed, as both cannot be true.
  2. See, for example Honour, Hugh; Fleming, John (1982). A World History of Art. London: Macmillan Reference Books. பக். 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780333235836. இணையக் கணினி நூலக மையம்:8828368. https://archive.org/details/worldhistoryofar0000hono_w1p9. 
  3. Vasari, at the start of the Life. Jones & Penny:5
  4. Ashmolean Museum "Image". z.about.com. Archived from the original on 2007-12-02.
  5. "Image". szepmuveszeti.hu. Archived from the original on 2012-03-14.
  6. Roy, A., Spring, M., Plazzotta, C. ‘Raphael’s Early Work in the National Gallery: Paintings before Rome‘. National Gallery Technical Bulletin Vol 25, pp 4–35
  7. Italian painters at ColourLex
  8. Jones and Penny:146–147, 196–197, and Pon:82–85
  9. Jones and Penny:147, 196
  10. Vasari, Life of Polidoro online in English பரணிடப்பட்டது 2008-04-17 at the வந்தவழி இயந்திரம் Maturino for one is never heard of again
  11. Vasari:207 & 231
  12. See for example, the Raphael Cartoons
  13. Jones & Penny:163–167 and passim
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபியேல்_சான்சியோ&oldid=3739605" இலிருந்து மீள்விக்கப்பட்டது