மிங் அரசமரபு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிங் அரசமரபு மங்கோலியர்களின் யுவான் அரசமரபின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, 1368 முதல் 1644 வரை சீனாவை ஆண்ட ஒரு அரசமரபு ஆகும். மிங் அரசமரபுபே, சீனாவின் மிகப்பெரிய இனமான ஆன் இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். இது லீ சிசெங்கின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சியடைந்தது. பின்னர் மாஞ்சுக்களின் தலைமையிலான சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644 ல் வீழ்ச்சியடைந்தபோதும், மிங் அரசமரபுபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662 ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் எனப்படுகின்றன.
மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. இவற்றுள், பெரும் கால்வாய், சீனப் பெருஞ் சுவர் ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்ஜிங்கில் பேரரண் நகரம் அமைக்கப்படமை என்பன அடங்கியிருந்தன. மிங் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் மக்கள்தொகை 160 தொடக்கம் 200 மில்லியன்கள் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிட்டு உள்ளனர். கல்காரிப் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, உலக வரலாற்றில் ஒழுங்கான அரசு, சமூக உறுதிப்பாடு என்பவற்றைக் கொண்ட சிறப்பான காலப் பகுதியொன்றை மிங் அரசு உருவாக்கியிருந்தது.
யுவான் அரசின் அழிவும் மிங் அரசின் தோற்றமும்[தொகு]
மங்கோலியர்களின் கீழ் அமைந்த யுவான் வம்சம் (1271-1368) மிங் வம்சத்துக்கு முன்னராக சீனாவை ஆண்டு வந்தது. யுவான் வம்சம் ஹான் சீனர்களுக்கு இழைத்த கொடுமைகள், இன பாகுபாடுகள், அதிக வரி வதிப்பு, நீர்ப்பாசனத் திட்டங்களை கவனிக்காமல் விட்டது, அதனால் மஞ்சள் ஆற்றில் வந்த வெள்ளம் போன்றவை மக்கள் மத்தியில் யுவான் அரசு தொடர்பாக அதிருப்தியை ஏற்படுத்தின. இதனால் வேளாண்மை சார் மக்கள் அரசிற்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கினர். அதில் ஹான் சீனர்களும், சிவப்பு டர்பன்களும் அதிகம் இணைந்தனர்.
சிவப்பு டர்பன்கள் வெள்ளைத்தாமரை என்ற பௌத்த இரகசிய அமைப்பின் துணையோடு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சிவப்பு டர்பன்கள் குழுவில் இணைந்த சூ யுவான்சாங்க் புரட்சிக்குழுவின் தலைவனின் மகளை மணந்தார். சூவின் கீழ் புரட்சிக்குழு நாஞ்சிங் என்னும் நகரை ஆக்கிரமித்தது. பிற்பாடு இதுவே மிங் பேரரசின் தலைநகராக அமைந்தது குறிப்பிடத்தக்கது. யுவான் வம்சத்தில் நடக்கும் குழப்பங்களை பயன்படுத்தி தங்களுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என ஹான் அரசர்களை வற்புறுத்தினர். கி.பி. 1363 ல் போயாங் ஏரியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க போரில் 6,50,000 கடற்படை வீரர்களைக் கொண்ட சூ புரட்சிக்குழு ஹான் கடற்படைத் தளபதியின் கீழ் அமைந்த 20 லட்சம் கடற்படை வீரர்களைக் கொண்ட ஹான் அரசிடம் தோற்றது.அ தனால் சூ போயாங் ஏரியின் வடக்குப் பகுதிகளை விட்டுவிட்டு தெற்குப் பகுதிகளை மட்டும் பிடித்துக் கொண்டார். கி.பி. 1367ல் சிவப்பு டர்பன்களின் தலைவன் ஐயமான முறையில் இறந்து போக ஹான் அரசின் தலைநகரான தாடுவை (தற்போதைய பெய்ஜிங்) நோக்கி சூ தன் படையை அனுப்பினார். ஹான் அரசின் கடைசி அரசனான சாங்டு வட சீனப்பகுதிக்கு தப்பிச் சென்றார். பிற்பாடு சூ மிங் அரசராக பதவியேற்றதும் அல்லாமல் தாடுவை பெய்பிங் எனப் பெயர் மாற்றி மிங் அரச மரபை தோற்றுவித்தார்.
மிங் அரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்[தொகு]
மிங் அரசமரபில் மூன்றாவது அரசராக பதவியேற்ற சூ டி என்பவர் யாங்குல் பேரரசை தோற்றுவித்தார். இவர் தன் முந்தைய இரண்டு தலைமுறைகளிலும் மிங் அரசின் தலைநகராக இருந்த நாஞ்சிங்கு நகரத்தை துணைத் தலைநகரமாக்கினார். இவரது ஆட்சியில் தற்போதைய பெய்ஜிங் தலைநகரானது. இவர் தன் முந்தைய தலைமுறையினர் ஏற்படுத்திய கொள்கைகளில் பல்வேறு கொள்கைகளை திருத்தி அமைத்தார். மிங் அரச மரபில் 17 அரசர்கள் கி. பி. 1367 முதல் கி. பி. 1644 வரை அரசாண்டனர். கி. பி. 1630களில் மிங் அரசமரபு மேற்கு சாங்சி பகுதியுடனான கடல் வணிகத்தை மிங் அரசு நிறுத்தியது. இதனால் அப்பகுதியில் இருந்த புரட்சிக்குழுக்கள் லீ சீசெங்கின் கீழ் சீனப் பெருஞ்சுவரை கடந்ததிலிருந்து மிங் அரசு அழிவை நோக்கிச் செல்லத் துவங்கியது.
- முதன்மைக் கட்டுரை - சீனப் பெருஞ்சுவர்
சீனப் பெருஞ்சுவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அதை பல்வேறு காலக்கட்டங்களில் இருந்த சீன அரசுகள் பேணியும் விரிவுப்படுத்தியும் வந்தன. அதில் மிங் வம்சமும் ஒன்று. மிங் வம்சப் பெருஞ்சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங் டாவோவில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ்சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. மிங் அரசர்கள் அதன் பின் சிற்றரசர்கள் ஆனாலும் தென் மிங் அரசு என்னும் சிற்றரசை ஏற்படுத்தி 7 அரசர்கள் கி. பி. 1644 முதல் கி. பி. 1662 வரை அரசாண்டனர்.
இவற்றையும் பார்க்க[தொகு]