பார்பரா கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

பார்பரா கோடு (Barbara Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கிலிருந்து இரண்டாவதாக இருந்தது பார்பரா கோடு. இது வல்ட்டூர்னோ கோட்டிலிருந்து வடக்கே 10-20 மைல் தூரத்திலும், குசுத்தாவ் கோட்டுக்குத் தெற்கே கிட்டத்தட்ட அதே தூரத்திலும் அமைந்திருந்தது. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இது கிழக்கு ஓரத்தில் டிரிக்னோ ஆற்றை ஒட்டி அமைந்திருந்தது. இதில் பெருவாரியாக அரணாக்கப்பட்ட குன்றுஉச்சி படைநிலைகள் இடம் பெற்றிருந்தன.

வல்ட்டூர்னோ கோட்டிலிருந்து பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் அக்டோபர் 12 ம் தேதி பார்பரா கோட்டினை அடைந்தன. அவற்றைப் பின் தொடர்ந்து வந்த அமெரிக்க 5வது ஆர்மியும் பிரித்தானிய 8வது ஆர்மியும் மூன்று வாரங்கள் கழித்து பார்பரா கோட்டை அடைந்தன. இத்தாலியப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அவை வேகமாக முன்னேறி வந்ததால், அவற்றின் தளவாட வழங்கலை சீரமைக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இதற்கும் சிதறியிருந்த படைப்பிரிவுகளை ஒருங்கிணைக்கவும் இக்கால அவகாசம் தேவைப்பட்டது. நவம்பர் முதல் வாரத்தில் 5வது ஆர்மி மேற்கிலும் 8வது ஆர்மி கிழக்கிலும் பார்பரா கோட்டைத் தாக்கின. திட்டமிட்டபடி ஜெர்மானியப் படைகள் மேற்கில் பெர்னார்ட் கோட்டிற்கும் கிழக்கில் குசுத்தாவ் கோட்டிற்கும் பின் வாங்கின.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பரா_கோடு&oldid=3589791" இலிருந்து மீள்விக்கப்பட்டது