தெற்கு யேமன்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
யேமன் மக்கள் சனநாயகக் குடியரசு (People's Democratic Republic of Yemen), அல்லது தெற்கு யேமன் (South Yemen) என்பது சோசலிசக் குடியரசாக இருந்த ஒரு நாடாகும். இது 1990, மே 22 ஆம் நாள் வடக்கு யேமனுடன் இணைந்து யேமன் குடியரசு என்ற ஒன்றிணைந்த நாடானது. இது யேமனின் தற்போதைய தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆகும். 1994 இல் நடந்த உள்நாட்டுப் போரின் போது வடக்கு யேமன் இராணுவம் இரு நாடுகளுக்கும் இடையில் உருவான இணைப்பை உறுதிப்படுத்தும் முகமாக தெற்கு யேமனை முற்றுகையிட்டு முழு நாட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தெற்கு யேமன் தலைவர் தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்கிறார். 200 ஆம் ஆண்டில் இருந்து தெற்கு யேமன் விடுதலைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.
வரலாறு [தொகு]
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவுக்கு செல்லும் தமது கப்பல்கள் தரித்துச் செல்லவென ஏடென் துறைமுகத்தை பிரித்தானியா 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் கைப்பற்றியது. 1937 ஆம் ஆண்டு வரையில் ஏடென் பிரித்தானிய இந்தியாவினால் ஆளப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஏடென் குடியேற்றம் என்ற பெயரில் தனிக்குடியேற்ற நாடாக்கப்பட்டது.
1963 ஆம் ஆண்டில், ஏடெனும் அதனைசூழ்ந்த பிரதேசமும் தெற்கு அரேபியக் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தோற்றுவித்தன.
1963, அக்டோபர் 14 இல் இருந்து பிரித்தானியரிடம் இருந்து விடுதலையை வேண்டி அங்கு தேசியவாதிகள் இணைந்து ஆயுத நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தனர். 1967 இல் சூயஸ் கால்வாய் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து பிரித்தானியர் படிப்படியாக வெளியேற ஆரம்பித்தனர். தெற்கு யேமன் நவம்பர் 30, 1967 இல் முழுமையாக விடுதலை அடைந்தது.
