தலையில் தேங்காய் உடைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலையில் தேங்காய் உடைத்தல் என்பது பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதாகும். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் இந்த நேர்த்திக்கடன் நடத்தப்படுகிறது.

தேங்காய் உடைத்தல்[தொகு]

பல கோயில்களில் பூசாரி அருள்வந்து பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பார். பூசாரி இல்லாத கோயில்களில் பக்தர்களே தங்கள் தலையில் தாங்களே தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழா காலங்களில் மட்டுமே தேங்காய் உடைத்தல் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. கோவில் முன்பு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஈர உடையுடன் வரிசையில் அமர்ந்திருக்கின்றனர். கோவில் பூசாரி ஆணி செருப்பை அணிந்துகொண்டு அருள் வந்து ஆடிக்கொண்டே பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கிறார்.[1]

புகழ்பெற்ற கோயில்கள்[தொகு]

தலையில் தேங்காய் உடைத்தல் நேர்த்திக்கடன் பல்வேறு கோயில்களில் நடைபெற்றாலும் சில கோயில்களில் அதிகபடியான கவனம் பெற்று புகழ்பெற்றுள்ளன. அவ்வகையில் மகாதானபுரம் கோயிலும் ஒன்றாகும்.

  • கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடி பதினெட்டு அன்று கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். இந்தக் கோயிலில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது புகழ்பெற்றதாக இருக்கிறது.[2]
  • கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் உள்ள சிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, தொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி கோவிலில் திருவிழாவின் போது பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் சடங்கு நடைபெறுகிறது.[3]
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.[4]
  • வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தில் பழங்குடியின மக்கள் கவுரி அம்மனுக்கு கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.[5]

எதிர்ப்பு[தொகு]

வழக்கு[தொகு]

மகாலட்சுமி மும்முடியார் குல நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேட்டு மகாதானபுரத்தில், மகாலட்சுமி அம்மன் கோயிலில் நடைபெறும் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டி வழக்கு தொடுக்கப்பட்டது.[2]

"கடவுள் வழிபாட்டில், பூஜைக் காரியங்களில் இந்த நீதிமன்றம் எந்தக் கொள்கையையும் பரப்பவில்லை. தலையில் தேங்காய் உடைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக பக்தர்கள் தரப்பில் எந்த புகாரும் வரவில்லை.எனவே பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறையை நிறுத்தும்படி உத்தரவிடுவது தேவையற்றது; நியாயமற்றது; மத சுதந்திரத்தில் தேவையின்றி குறுக்கிடுவது போலாகி விடும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்". Daily Thanthi. 20 பிப்., 2023. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 "நேர்த்திக்கடன் என்ற பெயரால் தலையில் தேங்காய் உடைப்பதை ஆதரிப்பதா? - தீர்ப்பை உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; கி.வீரமணி". இந்து தமிழ் திசை.
  3. மலர், மாலை (26 ஏப்., 2022). "சிக்கம்மா தொட்டம்மா கோவில் தேவர்கள் வழியனுப்பும் விழா". Maalaimalar. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "ஒட்டன்சத்திரம் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்". Maalaimalar. 20 பிப்., 2023. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "கவுரி அம்மன் கோயில் திருவிழாவில் பழங்குடியின மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்". ithutamilnews.com.