தந்திவர்மன்
தந்திவர்மன் (கி.பி 777 - 830) தென்னிந்தியாவை ஆண்ட பல்லவ மன்னன் ஆவான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவர்ன் பாரத்துவாச கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவர் தந்திவர்மன் எனவும் " கோவிசைய தந்திவிக்கிரமவர்மன் " எனவும் கல்வெட்டுகளினல் குறிக்கப்பட்டுள்ளான்.[1] தந்திவர்மனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும் வைரமேகன் என்னும் வேறு பெயரும் உண்டு. இவன் கடம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்ன்னும் பெண்ணை மணந்துகொண்டவன். திருச்சிராப்பள்ளி வட்டத்தில் இன்று ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளான். இங்கு ஏரி ஒன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி எனப்பெயரும் வைத்துள்ளான். புதுக்கோட்டையில் குளத்தூர் வட்டத்தில் இக்காலம் மலையடிப்பட்டனம் என்று வழங்கும் திருவாலத்தூர் மலைக்கோயில் இவன் காலத்தில் விடேல்விடுகு முத்தரையனாகிய குவாவன் சாத்தனால் கட்டப்பட்டது. திருச்சிக்கு வடக்கே திருவெள்ளறை எனும் ஊரிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணறும் செங்கற்பட்டு வட்டத்தில் உத்தரமல்லூரிலுள்ள வைரமேகத் தடாகமும் இவன் காலத்தே வெட்டப்பட்டவை. தந்திவர்மனுக்கு இராட்டிரகூட அரசன் கோவிந்தனும், பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் வரகுண மகாராசனும் பகைவர்களாயிருந்தனர்.[2]