செங்கடல்
செங்கடலை கிரேக்க மொழியில் Erythra thalassa (எரித்ர தலசா) என்றும், இலத்தின் மொழியில் Mare Erythraeum (மரே எரித்ரயம்) என்றும் குறிப்பிடப்படுவதால் முன்பு இதனை எரித்ரயன் சீ (Erithreyan sea) என்று அழைப்பர். இச்சொல் தமிழ் மொழியில் இருந்து வந்திருக்கக் கூடும். எரி + திரை - எரிதிரை என்பது திரிந்து எரித்ரயன் சீ என்றாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
செங்கடல் (Red Sea) ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. செங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் தெற்கே பாப்-எல்-மாண்டெப் நீரிணையும் ஏடென் வளைகுடாவும் இணைக்கின்றன. வடக்கே சினாய் குடா, அக்காபா வளைகுடா, சூயெஸ் வளைகுடா ஆகியன இணைக்கின்றன.
செங்கடலின் மொத்தப் பரப்பு ஏறத்தாழ 174,000 சதுர மைல்களாகும். கிட்டத்தட்ட 1,900 கிமீ நீளமும், 300 கிமீ அகலமும் கொண்டது. இதன் அதிகூடிய ஆழம் 2,500 மீட்டர்கள் ஆகும்.