சுபாஷிணி கனகசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாஷிணி கனகசுந்தரம் (Subashini Kanagasundaram) மலேசிய எழுத்தாளரும், தமிழ் ஆய்வாளரும், தமிழ் ஆர்வலரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், அதன் நிறுவனர்களில் ஒருவரும் ஆவார்.[1].

வாழ்க்கை[தொகு]

பிறப்பு[தொகு]

சுபாஷிணி மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவர். பெற்றோர் கனகசுந்தரம், மறைந்த ஜனகபூஷணி ஆவர். தாயார் ஜனகபூஷணி, ஜனகாசுந்தரம் என்ற பெயரில் மலேசிய சூழலில் எழுத்தாளராக விளங்கினார். செருமனியில் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

கல்வி[தொகு]

சுபாஷிணி மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தனது இளமைக் காலக்கல்வியைத் தொடங்கி, பின்னர் ஆத்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள தெற்கு குவின்சுலாந்து பல்கலைக்கழகத்தில் கணினித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி சென்று எசுலிங்கன் பல்கலைக்கழகத்தில் கணினி இயந்திரவியல் துறையில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இங்கிலாந்தின் வார்ன்பாரோ கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

பணி[தொகு]

பினாங்கு மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சில ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மலேசிய இந்து சங்கம், பினாங்கு பயனீட்டாளர் சங்கம், பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றில் சமூகப்பணி ஆற்றி வந்ததோடு இளம் சிறார்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வகுப்புக்களை ஏற்படுத்தி தமிழ், தேவாரப் பாடல்கள் பயிற்சி, தமிழ்க்கணினி ஆகியன பயிற்றுவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். செருமனியில் மேற்படிப்பு முடித்த பெற்ற பின்னர் அங்குள்ள இயூலெட் பக்கார்டு நிறுவனத்தில் பணியைத் தொடங்கினார்.

கணினித்தமிழ் வளர்ச்சியில் பங்காற்றல்[தொகு]

தமிழ் கணினித்துறை ஆய்வுகளுக்காக உருவான உத்தமம் என்ற அமைப்பில் அதன் தொடக்கம் முதல் பங்களித்து வருகின்றார். உத்தமத்தின் செயற்குழுவில் தொடர்ச்சியாக 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

தமிழ் மரபு பாதுகாக்கும் செயல்பாடுகள்[தொகு]

2000ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை என்னும் அமைப்பை முனைவர். நா. கண்ணனுடன் இணைந்து ஏற்படுத்தி இணைய வெளியில் தமிழர் வரலாற்றையும், புராதனச் சின்னங்களையும், அரிய தமிழ்ச்சுவடி ஆவணங்களையும், சிற்பங்களையும் பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்கினார். இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தமிழ் ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. சுபாஷிணி பலமுறை தமிழகம் சென்று அங்கே களப்பணிகளை மேற்கொண்டு வாய்மொழி இலக்கியங்கள், சிற்பங்கள், கோயில் கட்டுமானங்கள், கல்வெட்டுக்கள், பண்டைய வழிபாட்டு முறைகள், தமிழர் பண்டைய வாழ்வியல் கூறுகள் என பலதரப்பட்ட தகவல்களை எண்ணிம வடிவில் சேகரித்து ஆய்வுகள் செய்து தொடர்ந்து மின்வெளியில் வெளியிட்டு வருகின்றார். இந்த முயற்சியின் வழி இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தின் அரிய தமிழ் நூல்கள் சிலவும் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் இவர் டென்மார்க், கோப்பன்ஹாகன் அரச நூலகத்தின் சேகரிப்பில் இருக்கும் லூத்தரன் பாதிரிமார்களின் 300 ஆண்டுகள் பழமையான முப்பத்தெட்டு தமிழ் கையெழுத்து ஓலைச்சுவடி நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார்.[2][3]

சுபாஷிணி தமிழ் மரபு, தமிழிலக்கியம், கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.[4][5] இந்த ஓலைச்சுவடிகளை தமிழிணையக் கல்விக்கழகத்தின் இணைய தளம் தமிழ் ஆய்வாளர்கள் பயன் பெறும் வகையில் தங்கள் இணையதளத்தின் வழி அடைய வழி செய்துள்ளனர்.[6][7]

பதவிகள்[தொகு]

  • தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவர்
  • இந்தியாவிலிருந்து வெளிவரும் கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர்
  • உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் துணைச்செயலாளர்

எழுதிய நூல்கள்[தொகு]

  • Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..!
  • பயணங்கள் தொடர்கின்றன - தென்கொரியா..!

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகக் குழுவினர்
  2. டென்மார்க் அரசு நூலகத்தில் தரங்கம்பாடி வரலாறு... ஆவணப்படுத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை!, [1], by Oneindia-Tamil. (Monday, July 4, 2016).
  3. தமிழ் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்து வரும் சுபாஷினி, [2][தொடர்பிழந்த இணைப்பு].விடுதலை (செவ்வாய், 22 நவம்பர் 2016).
  4. அறிவுமதியின் தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்’- ஃபெட்னா விழாவில் வெளியீடு!, [3] by Oneindia-Tamil. (Monday, July 4, 2016).
  5. ஜெர்மனியில் 'கபாலி' - பெருமை கொள்ளும் மலேசியத் தமிழ் ஆய்வாளர்!, [4] by Film-Beat. (Tuesday, August 2, 2016).
  6. த. ம. அ. ஓலைச் சுவடிகள் தேடும் பணி
  7. தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி [5] பரணிடப்பட்டது 2017-09-25 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷிணி_கனகசுந்தரம்&oldid=3379514" இலிருந்து மீள்விக்கப்பட்டது