எம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதராசு குண்டுத் தாக்குதல்
முதலாம் உலகப் போரின் பகுதி

எம்டன்
நாள் செப்டம்பர் 22, 1914
இடம் மதராசு, இந்தியா, வங்காள விரிகுடா
செருமனியர் வெற்றி, எண்ணெய்த் தாங்கிகள் மீதான செருமனிய முற்றுகை முடிவு
பிரிவினர்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரித்தானிய இந்தியா செருமானியப் பேரரசு செர்மனிப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தெரியவில்லை கார்ல் வான் முல்லர்
பலம்
coastal artillery எஸ்எம்எஸ் எம்டன்
இழப்புகள்
5 பேர் இறப்பு,
26 பேர் காயம்,
1 சரக்குக் கப்பல் மூழ்கடிப்பு
எவருமில்லை

மதராசு குண்டுத் தாக்குதல் (Bombardment of Madras) என்பது முதலாம் உலகப் போரில் இந்தியாவின் மதராஸ் (இன்றைய சென்னை) நகரம் மீது இடம்பெற்ற தாக்குதலைக் குறிக்கும். எம்டன் என்ற ஜெர்மனிய போர்க்கப்பல் இத்தாக்குதலை ஆரம்பித்தது.

தாக்குதல்[தொகு]

கடற்படைக் கப்பல் கப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் 1914, செப்டம்பர் 22 ஆம் நாள் இரவு இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரமாக மதராஸ் நகரை அண்மித்தது எம்டன். மதராஸ் துறைமுகப் பகுதியை அண்மித்தவுடன், சிறிது நேரம் நிலைமையை கண்காணித்த பின்னர் சரியாக இரவு 09:30 மணிக்கு தாக்குதலை நடத்த வான் முல்லர் ஆணையிட்டார். மின்சார பயன்பாடு இல்லாத காலம் என்பதால் சென்னை நகரமே இருளில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத அந்தநேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது எம்டன். முதலில் எம்டன் பர்மா எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மீது குண்டுகளை வீசியது. முதல் 30 சுற்றுத் தாக்குதல்களில் பல தாங்கிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அடுத்ததாக எம்டன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். குறைந்தது 5 மாலுமிகள் உடனேயோ அல்லது காயமடைந்த பின்னரோ உயிரிழந்தனர். இரவு 10:00 மணி வரை இத்தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னரே பிரித்தானியக் கரையோரக் காவல் படையினர் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனாலும், அதற்குள் வெற்றிகரமாக தனது தாக்குதலை முடித்தவுடன் எம்டன் திரும்பி விட்டது. மொத்தம் 125 குண்டுகளை "எம்டன்" அன்றையை இரவு வீசியிருந்தது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த தாக்குதலால் அப்போதைய மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. எம்டன் மீண்டும் தாக்கும் என்ற அச்சத்தில் நகரை விட்டு பலர் வெளியேறினார்கள். இத் தாக்குதலில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்த வெள்ளையர்களின் கவுரவத்துக்கு கிடைத்த பேரிடியாக இது அமைந்தது. முதலாம் உலகப் போரின் போது இந்தியாவில் மதராஸ் நகரம் மட்டுமே மைய சக்திகளின் தாக்குதலுக்கிலக்கான நகரம் ஆகும்[1].

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Naval Battles of the First World War, Capt. Geoffrey Bennet, Penguin Books, reprint 2001

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
SMS Emden (1906)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.