மாத்தளை கார்த்திகேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தளை கார்த்திகேசு
பிறப்புகா. கார்த்திகேசு
(1939-01-01)சனவரி 1, 1939
மாத்தளை, இலங்கை
இறப்புஆகத்து 6, 2021(2021-08-06) (அகவை 82)
மாத்தளை
அறியப்படுவதுநாடக எழுத்தாளர்

மாத்தளை கார்த்திகேசு என அழைக்கப்படும் கா. கார்த்திகேசு (சனவரி 1, 1939 – ஆகத்து 6, 2021) ஈழத்து எழுத்தாளரும், இலங்கை நாடகக் கலையுலகின் முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். சிறுகதைகள், இலக்கிய, சமயக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். அவள் ஒரு ஜீவநதி என்ற திரைப்படத்தைத் தயாரித்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கார்த்திகேசு இலங்கை, மலையகத்தில் மாத்தளையில் பிறந்தார். மாத்தளை விஜே கல்லூரியிலும், கிறித்தவத் தேவாலயக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[1]

நாடகப் பங்களிப்பு[தொகு]

மாத்தளை கார்த்திகேசு 1958 முதல் கலைத்துறையில் ஈடுபட்டு வந்தார்.[2] ஏராளமான மேடை நாடகங்களை எழுதி மேடையேற்றியுள்ளார்.[1] இவரது முதல் நாடகம் தீர்ப்பு. பல நாடகங்களில் அவர் நடித்தும் உள்ளார். களங்கம் (1974), போராட்டம் (1975), ஒரு சக்கரம் சுழல்கிறது (1976) ஆகிய இவரது நாடகங்கள் தேசிய நாடக விழாக்களில் பரிசு பெற்றுள்ளன.[1] இவர் எழுதிய காலங்கள் அழிவதில்லை என்ற நாடகம் 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மேடையேற்றப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.[1] 15 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டது.[2] இதே நாடகம் பின்னர் காலங்கள் என்னும் பெயரில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வறுமையையும் விவரிக்கும் நாடகமாக இது அமைந்தது.[1] குடும்பம் ஒரு கலைக்கதம்பம் என்ற நாடகத்தையும் இவர் தொலைக்காட்சிக்காக எழுதியுள்ளார்.[1] மலையகத்தின் பாரம்பரிய காமன் கூத்தையும் தொலைக்காட்சிக்காக அமைத்திருந்தார்.[1]

மலையக எழுத்தாளர் மன்றத்தின் செயலாளர், இலங்கைக் கவின் கலை மன்றத் தலைவர், இந்து சமயக் கலாசார அமைச்சின் நாடகக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார்.[3]

திரைப் பங்களிப்பு[தொகு]

1980 ஆம் ஆண்டில் கார்த்திகேசு அவள் ஒரு ஜீவநதி என்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்றைத் தானே கதை, வசனம் எழுதித் தயாரித்திருந்தார்.[1] டீன்குமார், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் கார்த்திகேசுவும் கதாநாயகியின் தந்தையாக நடித்திருந்தார்.[2] சில பாடல்களையும் எழுதியிருந்தார்.[2] பெரிய அளவில் இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை.[1]

வெளியிட்ட நூல்கள்[தொகு]

  • வழி பிறந்தது (புதினம், குறிஞ்சி வெளியீடு)

பட்டங்களும் விருதுகளும்[தொகு]

  • 1993 சாகித்திய விழாவில் கலாஜோதி என்ற விருதை இந்து சமயக் கலாசார அலுவல்கள் அமைச்சு வழங்கிக் கௌரவித்தது.[1]
  • இலங்கை மத்திய வங்கி நடத்திய நாடகப் போட்டியில் காலங்கள் நாடகத்திற்கு சிறந்த நாடகம், சிறந்த நடிப்பு, சிறந்த நாடகப் பிரதி ஆகிய பரிசுகள் வழங்கப்பட்டன.[1]
  • தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய போட்டியில் இவரது சுட்டும் சுடர்கள் என்ற திரைக்கதைப் பிரதிக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 தெளிவத்தை ஜோசப் (சூன் 1995). "கலை இலக்கியத் துறையில் துணிவுடன் பணியாற்றும் மாத்தளை கார்த்திகேசு". மல்லிகை. 
  2. 2.0 2.1 2.2 2.3 தேவதாஸ், தம்பிஐயா (2007). இலங்கை திரையுலக சாதனையாளர்கள்.
  3. அமிர்தபாரதி (மார்ச் 1992). ஆசிரியரும் ஈழத்து அறிமுகமும். p. 2-3. {{cite book}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

தளத்தில்
மாத்தளை கார்த்திகேசு எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தளை_கார்த்திகேசு&oldid=3281959" இலிருந்து மீள்விக்கப்பட்டது