கே. எஸ். பாலச்சந்திரன்
கே. எஸ். பாலச்சந்திரன் (பிறப்பு - 10, ஜூலை, 1944 கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர். எழுத்தாளர். உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்தவர்.புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
பொருளடக்கம் |
[தொகு] வானொலி நடிகர்
இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.
[தொகு] தொலைக்காட்சி நடிகர்
இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.
[தொகு] மேடை நடிகர்
1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய "புரோக்கர் பொன்னம்பலம்" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர்.
[தொகு] திரைப்பட நடிகர்
இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.
[தொகு] எழுத்தாளர்
[தொகு] வானொலி நாடகங்கள்
இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.
கனடாவில் சி.எம்.ஆர் வானொலியில் "மனமே மனமே" என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழ்ங்கியிருக்கிறார்.
[தொகு] தொலைக்காட்சியில்
இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவில் TVI க்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இருந்து TVI, 125 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிய் 'Wonderful Y.T.Lingam Show' இவரது படைப்பே. எம்மிடையே முதலாவது TV Show நிகழ்ச்சி இதுவேயாகும். TVI யில் முதலாவது தமிழ் Sitcom நாடகம் என்ற வகையில் "நாதன், நீதன்,நேதன்" என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்பச் செய்தார்.
[தொகு] மேடை நாடகங்கள்
கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.
[தொகு] சிறுகதைகள்,கட்டுரைகள்
தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் 'மலர் மணாளன்' என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல 'சிரிகதை'களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் 'ஒரு பேப்பர்' என்ற பத்திரிகையில் 'கடந்தது..நடந்தது' எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் "தாய் வீடு" பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், "தமிழ் ரைம்" சஞ்சிகையில் "என் கலைவாழ்வில்" என்ற அனுபவத்தொடரையும் எழுதியவ்ர். த்ற்போது தாய்வீடு பத்திரிகையில் , "வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை" என்ற தொடரையும், "தூறல்" என்ற காலாண்டு சஞ்சிகையில் "என் மனவானில்" என்ற தொடரையும் எழுதி வருகிறார்.
[தொகு] திரைப்பட இயக்குனர்
இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர்
[தொகு] இயக்கிய குறும்படங்கள்
- தாகம் (குறும்படம்)
- வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது)
- உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது)
[தொகு] நேர்முக வர்ணனையாளர்
1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.
[தொகு] வானொலித் தயாரிப்பாளர்
இலங்கை வானொலியில், 'கலைக்கோலம்' சஞ்சிகை நிகழ்ச்சியையும், 'விவேகச் சக்கரம்' என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.
[தொகு] தனி நடிப்பு
1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய 'அண்ணை றைற்' இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.
அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன
[தொகு] வெளியிட்ட நூல்கள்
- கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்), (புதினம், 2009, வடலி வெளியீடு)
- நேற்றுப் போல இருக்கிறது, (கட்டுரைத் தொகுப்பு, 2011,கனகா பதிப்பக வெளியீடு)
[தொகு] விருதுகள்
- கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது.
[தொகு] சுவையான தகவல்
ஒரே காலத்தில், ஒரே பெயரில் இரு கலைஞர்கள் அதுவும் ஒரே இடத்தில் இருப்பது சிக்கல்களைத் தரக்கூடியது. அந்த சிக்கல்களுக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர்களும், இலங்கை வானொலியின் நேயர்களும் ஆளாகும் வகையில் கே. எஸ். பாலச்சந்திரனும் மெல்லிசைப் பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரனும் இருந்தார்கள். நாடு போற்ற வாழ்க படத்தில் இருவருமே பங்களித்து இருந்தமையால் மெல்லிசைப்பாடகரை சுண்டிக்குளி பாலச்சந்திரன் என அடையாளப்படுத்தியிருந்தனர்.
[தொகு] வெளி இணைப்புகள்
- கே. எஸ். பாலச்சந்திரனின் வலைப்பதிவு
- நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன் - மடத்துவாசல் பிள்ளையாரடி, வலைப்பதிவுக் குறிப்பு.
- அண்ணை றைற் நாடகம் - மடத்துவாசல் பிள்ளையாரடி, வலைப்பதிவுக் குறிப்பு.
- கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்", கே.எஸ்.பாலச்சந்திரனுடன் கானா பிரபா உரையாடல்
- கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு சுயம்பு - பி.எச்.அப்துல் ஹாமீட்
- கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய ஆங்கில கட்டுரை - The Hindu பத்திரிகையில்- எம்.எல்.நரசிம்ஹன்
- எழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு