வெம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெம்மை என்பது பண்பினைக் குறிக்கும் பண்புப்பெயர். இந்தப் பண்பின் அடியில் பிறந்த பல சொற்கள் சங்க நூல்களில் பயின்று வந்துள்ளன.

  • வெம்பு என்பது இதன் வினைச்சொல். வெம்பும் [1] என்பது இதன் வினைமுற்று. வெம்மைய என்பது இதன் குறிப்பு வினைமுற்று. இதன் வழியில் தோன்றி ஆட்சிக்கு வந்துள்ள சொற்களில் சில இவை. வெம்ப [2], வெம்பி [3] [4], வெம்பிய [5] [6],
  • வெய்து [7] [8] , வெந்தை [9] [10] என்பன இதன் வழியே தோன்றிய வினையாலணையும் பெயர்கள்.
  • வெப்பு [11] [12],வெப்பம் [13], வெப்புள் [14] [15], வெப்புநோய் [16] [17] வெப்பர் [18] [19] என்பன இப் பண்புடையனவற்றால் தோன்றிய பெயர்ச்சொற்கள்.
  • வெம்மையள் [20] [21]. வெய்யார் [22], வெய்யன் [23], வெய்யள் [24], வெய்யோன் என்பன இப் பண்புள்ளவர்களைக் குறிக்கும் உயர்திணைச் சொற்கள்.
  • வெம்மணல் [25], வெம்மலை [26], வெம்முலை [27], [28], வெந்திறல் [29] [30], வெந்துப்பு [31], வெந்நாற்று [32], வெந்நீர் [33], வெந்நெய் [34], வெந்நோக்கம் [35], வெந்நோய் [36], வெம்பசி [37] - என்பன இப் பண்பினைக் கொண்ட சில பொருள்கள்.

இப்படிப் பல சொற்கள் விரும்பும் தன்மையையும், கொடுமையையும் உணர்த்துவனவாக உள்ளன.

வெய்யோன்[தொகு]

வெம்மைப் பண்பு உடையவன் வெய்யோன். வெய்யோன் என்னும் சொல் விரும்புபவன் என்னும் பொருளைத் தருகிறது.

  • என் துணைவன் என்னால் பெரிதும் விரும்பத் தக்கவன். [38]
  • அவன் கள் வெய்யோன். [39]
  • அந்த வீரன் சாதல் வெய்யோன். [40]
  • நம்பி நெடுஞ்செழியன் புகழ் வெய்யோன். [41]
  • வல்வில் ஓரி ஈகை-விறலை [42] விரும்புபவன் எனக் குறிப்பிடப்படுகிறான். [43]
  • செங்குட்டுவன் போர் வெய்யோன் எனக் குறிப்பிடப்படுகிறான். [44]
  • முருகப் பெருமான் விறல்-பெருமிதத்தை விரும்புபவன். [45]
  • கதிரவன் பகல் வெய்யோன் எனக் குறிப்பிடப்படுகிறான். [46] [47]
  • வெய்யோன் என்னும் சொல் கதிரவனை உணர்த்தும். [48]

வெய்ய என்னும் சொல் கொடுமையையும் உணர்த்தும். ஐயை என்னும் கொற்றவையின் வாள் கொடியது. [49]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி, வெம்பும்மன் - அகநானூறு 183
  2. எதிர்கால வினையெச்சம்
  3. கானம் வெம்பி - அகநானூறு 189
  4. இறந்தகால வினையெச்சம்
  5. பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் - அகநானூறு 185
  6. பெயரெச்சம்
  7. சூடான உணவு
  8. நெஞ்சத்தார் காதலவராக, வெய்து உண்டல்
    அஞ்சுதும், வேபாக்கு அறிந்து. திருக்குறள் 1128
  9. வெந்த உணவு
  10. வேளை வெந்தை, வல்சி -புறநானூறு 246
  11. கொடுமை நிறைந்த, சூடு பறக்கும்
  12. வெப்பு உடைய அரண் கடந்து,- புறநானூறு 11
  13. ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
    அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
    சேமச் செப்பில் பெறீஇயரோ, - குறுந்தொகை 277
  14. சுடுமண் நிலம்
  15. வெப்புள் விளைந்த வேங்கை - புறநானூறு 120
  16. சூட்டால் தோன்றும் அம்மைநோய்
  17. அன்றுதொட்டு, பாண்டியன் நாடு மழை வறம் கூர்ந்து, வறுமை எய்தி, வெப்பு-நோயும் குருவும் தொடர, - சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை
  18. சூடான குடிநீர்
  19. புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர்
    ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை - புறநானூறு 269
  20. வெதுவெதுப்பானவள்
  21. அலங்கு வெயில் பொதிந்த தாமரை
    உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே. - குறுந்தொகை 376
  22. கலித்தொகை 78-25
  23. கலித்தொகை 75-10
  24. குறுந்தொகை 51-4
  25. ஏலாதி 67
  26. வெம்மலை அருஞ்சுரம் - அகநானூறு 143-8
  27. சிறுபாணாற்றுப்படை 26
  28. வெம்முனை வெம்முனைச் சீறூர் - நற்றிணை 3
  29. வெந்திறல் எஃகம் - புறநானூறு 303
  30. வெந்திறல் நாகம் - புறநானூறு 37
  31. திருக்குறள் 895
  32. பரிபாடல் 20-13
  33. பெரும்பாணாற்றுப்படை 281
  34. சிலப்பதிகாரம் 15-79
  35. பரிபாடல் 9-15
  36. கலித்தொகை 146-32
  37. மணிமேகலை 17-73
  38. எம் கேள் வெய்யோன் - புறநானூறு 144-7,
  39. காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. - புறநானூறு 258
  40. கொன்னும் சாதல் வெய்யோன் - புறநானூறு 291
  41. புகழ் வெய்யோன் தலையே - புறநானூறு 239
  42. பெருமிதத்தை
  43. ஓம்பா ஈகை விறல் வெய்யோனே - புறநானூறு 152-32
  44. பொன் தாழ் அகலத்துப் போர் வெய்யோன் - சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை 113
  45. விறல் வெய்யோன் - புறநானூறு 56-6, பரிபாடல் 8-67,
  46. ஆழி ஆள்வான், பகல் வெய்யோன் அருளே; வாழி, காவேரி! - சிலப்பதிகாரம், கானல்வரி
  47. பகல் வெய்யோன் - சிலப்பதிகாரம், கால்கோள் காதை 88
  48. வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய - கம்பராமாயணம்
  49. ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கை - சிலப்பதிகாரம், வேட்டுவ வரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெம்மை&oldid=1549629" இலிருந்து மீள்விக்கப்பட்டது