பைரவேஸ்வரர் கோயில், சோழபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைரவேஸ்வரர் கோயில், இந்தியாவின் தமிழ்நாட்டில் சோழபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். [1][2] [3]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கும்பகோணம்-சென்னை நெடுஞ்சாலையில் 13 கிமீ. தொலைவில் உள்ள சோழபுரத்தில் அமைந்துள்ளது. சோழபுரம் முன்னர் பைரவபுரம் என்றழைக்கப்பட்டது. [1]

அமைப்பு[தொகு]

பழமை வாய்ந்த சோழர் காலக் கோயிலான இக்கோயிலுக்கு முகப்பு எதுவும் இல்லை. உள்ளே முகப்பு மண்டபத்தின் அடித்தளம் மட்டுமே உள்ளது. கருவறை வாயிலின் இரு புறமும் விநாயகர் உள்ளனர். அருகில் முருகன் உள்ளார். இறைவி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார்.[1]

மூலவர்[தொகு]

இத்தலம் பைரவர், சிவனாகத் தோன்றிய தலம் என்ற பெருமையுடையது. இக்கோயிலின் மூலவர் பைரவேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். லிங்கத் திருமேனியாக உள்ள மூலவர் நான்கடி உயரமுள்ள ஆவுடையார் மீது இரண்டடி உயரமுள்ள பாணத்துடன் உள்ளார். இத்தலம் 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலமென்றும், பைரவேஸ்வரர் ஆதிமூலம் என்றும் கூறுவர். அம்மன் சன்னதியில் ஒரு பீடத்தில் அம்மனின் திருமுகம் மட்டும் காணப்படுகிறது.[4] இக்கோயிலில் அஷ்ட புஜ பைரவர் உள்ளார். இங்கு 64 பீடங்கள் உள்ளன. இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூசையும், தியானமும் செய்வதாக நம்பப்படுகிறது.[1]

பிற தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் அர்த்தநாரீசுவரர், அஷ்டபுஜ துர்க்கை, தட்சிணாமூர்த்தி, கங்காளர், கல்யாணசுந்தரர் ஆகியோர் உள்ளனர்.[4]

பூசை[தொகு]

அஷ்டமி திதியில் மூலவருக்கு மஞ்சட்பொடி, மாப்பொடி, எலுமிச்சம்பழம், நார்த்தம்பழம், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.[4] சனிக்கிழமை வழிபாடு இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]