பேச்சு:ஜேன் குட்டால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் விலங்குரிமை
WikiProject iconஜேன் குட்டால் என்னும் கட்டுரை விலங்குரிமை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் விலங்குரிமை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
 

கேள்வி[தொகு]

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் புரவுக்காடு என்பதன் பொருள் என்ன?--சிவகுமார் \பேச்சு 14:08, 1 பெப்ரவரி 2008 (UTC)

தேசியப் பூங்கா (National Park) என்பதையே புரவுக்காடு என மொழிப்பெயர்த்துள்ளனர் போலும். காண்க: அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஆங்கிலப்பெயர். βινόδ  வினோத் 14:19, 1 பெப்ரவரி 2008 (UTC)

நாட்டுப் புரவுக்காடு என்று உள்ளதே. புரவு->புரவலர் ஏதேனும் தொடர்பு இருக்குமா? --சிவகுமார் \பேச்சு 14:25, 1 பெப்ரவரி 2008 (UTC)

புரவு என்ற சொல்லுக்கு பாதுகாப்பு, கொடை என இரு வித பொருட்கள் உள்ளன. காக்கப்பட்ட காடு என்பதால் புரவுக்காடு என கட்டுரை இயற்றியவர் அழைத்துள்ளாரோ என்னவோ βινόδ  வினோத் 14:30, 1 பெப்ரவரி 2008 (UTC)

சரியாகப் பொருந்துகிறது. கட்டுரையாளர் வேறு யாருமல்ல, செல்வா தான்!--சிவகுமார் \பேச்சு 14:40, 1 பெப்ரவரி 2008 (UTC)

நான் புரவுக்காடு என்றால் சரணாலயமோ என்று நினைத்தேன். அதற்கும் பயன்படுத்தலாமோ? IT park போன்று park வரும் எல்லா இடங்களிலும் பூங்கா என்றே அழைப்பது சரியா--ரவி 11:03, 2 பெப்ரவரி 2008 (UTC)

சரணாலயம் என்பதை புகலிடம் என்றும் அழைக்கலாம். -- சுந்தர் \பேச்சு 13:02, 4 பெப்ரவரி 2008 (UTC)

புரத்தல் என்றால் பாதுகாத்தல். புரவலர் என்றால் காவலர் (அரசர்/அரசி). காப்பு அளிக்கப்பட்ட காடு என்னும் பொருளில் புரவுக்காடு என்று எழுதியிருந்தேன். சரணாலயம் என்பதற்கும் பயன்படுத்தலாம். புரவகம், புரவு இடம், என்று தேவைக்கேற்ற வாறு பயன்படுத்தலாம். IT Park என்பதற்கு இது பொருந்தாது. தகவல் தொழில்நுட்ப சிறப்பிடம்/ஒதுக்கிடம்/ஒதுக்ககம் போன்ற ஏதேனும் வேறு ஒரு சொல்லாட்சி தேவை. Steven Pinker கூறியது போல் ஆங்கிலத்தில் People park their car in a driveway and drive their car on a parkway. அதாவது Park என்னும் சொல் பல இடங்களில் பல பொருட்களில் பயன்படுகின்றது. தமிழில் அதற்கு இணையான சொல்லாட்சி தேவைப்படும் பொழுது இடத்திற்கு ஏற்றாற்போல ஆள்தல் வேண்டும்.--செல்வா 14:40, 2 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி செல்வா. புரவகம் நல்ல சொல். இது IT parkக்குப் பொருந்தாது என்று அறிந்தே இருக்கிறேன். சிறப்பிடம், ஒதுக்கிடம், ஒதுக்ககம் - எதுவுமே இந்த இடத்தில் நிறைவு அளிக்கவில்லை. park என்று வரும் எல்லா இடங்களிலும் பூங்கா என்று மொழிபெயர்ப்பது குறித்தே கேட்டிருந்தேன். --ரவி 16:41, 2 பெப்ரவரி 2008 (UTC)

conservation[தொகு]

தமிழ்ச்சொல் தேவை.--சிவகுமார் \பேச்சு 13:16, 12 பெப்ரவரி 2008 (UTC)

சிவகுமார், இச்சொல் பல இடங்களில் பல பொருள் கொள்ளும். அறிவியல் விதிகளில் "மாறாமை" (ஆற்றல், நிறை முதலியன). ஆனால் சூழலியலில், செழுமை கெடாமை, மண்-செடி-கொடி, உயிரினம்-நீர்நிலைகள் தன் உள் ஊறவாட்டங்களைக் குலைக்காமை. பாதுகாத்தல்,சீர்காத்தல், தன்நிறைவு காத்தல் ஆகும். ஓரிடத்தை எல்லை வகுத்து அதனை இப்படி பாதுகாத்த நிலமாக/பகுதியாக வைத்தால் அதனை சீர்கா நிலம் (அல்லது சீர்கா), சீர்பா நிலம் எனலாம். பா என்றாலே தமிழில் காத்தல் என்று பொருள். "பாதுகாத்தல்" என்பதில் உள்ள பாது என்பது "காவலைக் குறிக்கும் சொல்". (அன்பளிப்பு என்பதில் அளி என்றாலே அன்புடன் தருவது, அன்பளிப்பு என்பது இரட்டை வலுதரும் சொல் அது போல பாதுகாவல்). பா என்றால் பகுப்பது என்றும் பொருள். பகுப்பது பா (பகு, பக --> பா). எனவே பா என்னும் சொல் காவல், பகுத்தல் என்னும் இரு பொருளும் கொண்டுள்ளதால். பாநிலம் என்றால் conservation area என்னும் பொருள் வரும். ஒரு பகுதியைப் பிரித்து சூழலைக் காக்கும் பொருட்டு விடுவது பா என்னும் எளிய சொல்லால் குறிக்கலாம். தேவைக்கேர்ப்ப பாநிலம், பாநீர், பாகாடு (பாதுகாக்கப்பட்ட காடு, புரவுக்காடு) எனலாம்.--செல்வா 16:48, 19 மார்ச் 2008 (UTC)
பாவுக்கான ஏற்பாடு
எங்கள் ஊரில் கைத்தறி நெசவிற்காக இழைகளை ஒரு மூன்றடி அகலம் முழுத்தெரு நீளம் என்ற அளவில், தரையில் ஊன்றிய கம்பிகளில் கட்டைகளை இடையில் நிறுத்தி, அதில் அழுத்தத்துடன் இறுக்கிக் கட்டியிருப்பார்கள். இவ்வமைப்பை பாவு என்பர். பின் இந்த இழைகளை பசை பாவுதல் என்ற முறையில் பக்குவப்படுத்துவர். இப்போது இவ்வாறு செய்யப்படுவதில்லை. நான் சிறு வயதில் (கண்டது) கேட்டதால் தகவல் பிழையிருக்கலாம். அப்பா சிறு வயதில் பசை பாவியிருக்கிறார், கேட்டுச் சொல்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:19, 19 மார்ச் 2008 (UTC)
பின்வருவது எவ்வளவு சரியெனத் தெரியவில்லை, ஆனால் ஆவல் துண்டுவது. (இராம.கி. அவர்களது வளவிலிருந்து) -- சுந்தர் \பேச்சு 17:35, 19 மார்ச் 2008 (UTC)

சுந்தர், பா என்றாலும் பாவு என்றாலும் நெட்டிழையாகிய நூலுக்கு நன்றாக அறியப்பட்ட பெயர். குறுக்கே செல்லும் நூலுக்கு ஊடு (weft or woof) என்று பெயர். விரிக்கும் பாயின் நெட்டிழையாக இருப்பின் கண் என்றும் கூறுவர். அகராதிகள் தறிபடுகு, நூற்படுகு என்பன பரவலாக அறிந்த பா (பாவு)க்கு மறுபெயர்கள் என்று குறிக்கின்றன. ஓதப்புரோதம் என்பது warp and woof என்றும் தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகின்றது, ஆனால் இவற்றை நான் கேள்விப்பட்டதில்லை. பா அல்லது பாவு என்பதும், ஊடு என்பதும் கேள்விப்பட்டுள்ளேன். நெசவுத்தொழில் சொற்கள் நூற்றுக்கணக்கில் வழக்கு அருகியோ அற்றோ வருகின்றது. இராம. கி அவர்களின் "திரியீடு" = thread என்பதெல்லாம் ஒலி ஒப்புமை காட்டவே என்று நினைக்கிறேன். ஆனால் பாவாணர் மிக அழகாக எப்படித் தமிழிலும் ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகளிலும், பஞ்சு நூல் (text) என்பதும், நூல் (புத்தகம்) = text என்பதுவும் ஒரே சொல் இருவேறு பொருளுக்கு அமைந்துள்ளது என்பது பற்றி விரிவாக எழுதியுள்ளார். பா என்னும் சொல்லுக்கு, "அழகு, பா என்னும் எழுத்து, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், நெசவுப்பா, பஞ்சுநூல், பரப்பு, பரவுதல், பாட்டு, பா என்று ஏவல், பிரபை, வெண்பா முதலிய ஐந்து பா, தூய்மை, காப்பு, தேர்த்தட்டு, கைமரம், பூனைக்காலி, பாம்பு" என 19 பொருட்கள் தமிழிக் கழக அகராதி தருகின்றது. ஒவ்வொன்றையும் விரித்துப் பொருள் கூறமுடியும் (ஏன் எப்படி என்று. "பிரிதல்" என்பது அடிப்படைக் கருத்து). நிழல் பொருளில் இருந்து பிரிந்து விலகி உள்ள ஒளியற்ற இடம். கைமரம் என்பது வீட்டுக் கூரையின் கை, அதாவது கூரையின் உச்சியில் இரண்டு "கை"கள் கூடும் இடம் (rafter, பார்க்கவும் படத்தில் 2 என்னும் எண் உடையது ) இரண்டு கைகள் உச்சியில் இருந்து பிரிந்து, கிளைத்து நிற்பது, கடிகார ஊசி, பிரிந்து, விரிந்து நகர்வதால், இரு கைகள் போல் இருப்பதால் பா; அழுக்கைப் பிரித்து நீக்குவது தூய்மை, நெட்டிழைகளாகிய பா, பாவு பிரிந்து, விலகி ஊடு நூல்களுக்கு வழிவிடுவதால் பா..இப்படி எல்லாச் சொற்களுக்கும் விரிவாக பொருள் சொல்லலாம்). எனவே சுந்தர் பா அல்லது பாவு என்பது நெட்டிழை. ஊடு என்பது குறுக்கு இழை. இது பற்றி ஒரு விக்கிக் கட்டுரை எழுதவேண்டும். ஆங்கில விக்கியில் சுருக்கமாகத்தான் உள்ளது. இங்கே பார்க்கவும்.--செல்வா 22:42, 19 மார்ச் 2008 (UTC)

அப்பப்பா, இவ்வளவு பொருள் செறிவா? இப்போதுதான் நினைவிற்கு வந்தது, நான் முன்னர் கூறியது நெட்டிழைதான். அவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட இழைகளைச் சுருட்டி தறியில் பயன்படுத்துவர். அப்போதும் அதைப்பாவு என்றே அழைப்பர் என்று நினைவு. தவிர, தறியில் நீங்கள் குறிப்பிட்டபடி இழைகள் பிரிந்து ஊடு இழைகளுக்கு வழிவிடுவதைக் கண்டுள்ளேன்.
ஊடு நூல் வேறுவிதமாகப் பண்படுத்தப்பட்டு நூற்கண்டுகளில் இராட்டை (?) கொண்டு காந்தித் தாத்தா போல் சுற்றுவார்கள். இது பாவைக்காட்டிலும் எளிது. நான் கூட சிறுவயதில் இதில் எனது பாட்டிக்கு உதவியிருக்கிறேன். :-)
கொசுறாக ஒரு தகவல். கணினியில் பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட துளையிடப்பட்ட அட்டைகள் தறிகளில்தான் முதலில் பயன்படுத்தியவை. -- சுந்தர் \பேச்சு 03:52, 20 மார்ச் 2008 (UTC)
செல்வா, சுந்தர், சுவையும் செறிவும் மிக்க விளக்கங்களுக்கு நன்றி. ஊடு, பாவு, இழை (ஈரிழைத்துண்டு எங்கள் ஊரில் பரவலாக நெய்யப்படும், பயன்படுத்தப்படும் ஒன்று.) என்பனவற்றை நானும் கேட்டுள்ளேன். --சிவகுமார் \பேச்சு 07:31, 20 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜேன்_குட்டால்&oldid=3859307" இலிருந்து மீள்விக்கப்பட்டது