தோடா எருமை
தோடா எருமை என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடி மக்களால் வளர்க்கப்படும் எருமை இனமாகும். இந்த எருமைகள் படுகர், கோத்தர் போன்ற பழங்குடிகளும் வளர்க்கின்றனர். என்றாலும் தோடர் இனமக்களின் வாழ்வில் மிக இன்றியமையாத விலங்காக இவை உள்ளன.[1] இவர்கள் தங்கள் வீடுகளில் ஆண் எருமைகளை பெரும்பாலும் வளர்ப்பதில்லை. அவை ஊர்திரி உயிரினமாக காட்டில் அலையும். 1848 ஆம் ஆண்டில் 2,171 தோடா எருமைகளும், 1994 ஆம் ஆண்டு 3,531 என்றும் 2013 ஆம் ஆண்டு 3,003 எருமைகள் இருந்ததாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
விளக்கம்
[தொகு]இவை கனத்த உடலும், வேகமாக ஓடுவதற்குத் தேவையான குளம்புகளுடன், மூர்க்கத்தனம் கொண்டவையாக எப்போதும் அலைந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை. இவை பெரும்பாலும் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்துடன் காணப்படும். இவற்றின் உடலில் அடர்த்தியான ரோமங்கள் இருப்பதால்[2], இவை அதிக மழையும் அதிக வெப்பமும் கொண்ட பகுதிகளில் வாழும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இவற்றின் கொம்புகள் பிறைநிலாபோல அரைவட்ட வடிவில் சுமார் 62 செ.மீ. நீளத்துக்கு அமைந்திருக்கும். பெண் எருமைகள் தங்களின் முதல் ஈனுதலுக்கு நான்கு ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன. அதன்பிறகு ஒவ்வொரு 14 மாதங்களுக்கு ஒருமுறை அவை கன்றுகளை ஈனுகின்றன.
பால்
[தொகு]இந்த எருமைகளின் ஆண்டு பால் உற்பத்தி 500 கிலோ. இவற்றின் பால் அதிக கொழுப்புச் சத்துக்காகப் பெயர் பெற்றவை. இந்தப் பாலில் 8 சதவீதக் கொழுப்புச் சத்து உண்டு.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குள.சண்முகசுந்தரம் (9 சூலை 2014). "எருமைகளைக் காக்க 8 ஆண்டு போராட்டம்- தோடர்களுக்கு வழிகாட்டிய வாசமல்லி". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 7 ஏப்ரல் 2018.
- ↑ "எருமை மாட்டினங்கள்". அறிமுகம். agritech.tnau.ac. Retrieved 7 ஏப்ரல் 2018.
- ↑ ந. வினோத் குமார் (7 ஏப்ரல் 2018). "பழங்குடிகள் பராமரிக்கும் எருமையினம்". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 7 ஏப்ரல் 2018.