தருமபுரி சீதாராமதாச ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தருமபுரி சீதாராமதாச ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரி நகரில் அரியரநாதர் கோயில் தெருவில் உள்ள ஒரு கோயிலாகும்.

கோயில் வரலாறு[தொகு]

இக்கோயில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கம்பைநல்லூர் மிட்டார் மரபினரால் கட்டப்பட்டு, அவர்களது குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் பக்த இராமதாசர் கட்டிய கோயிலையடுத்து சிறப்பான கோயிலாக இக்கோயில் கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வழிபாட்டுக்காக வருகின்றனர்.[1]

கோயிலமைப்பு[தொகு]

இக்கோயில் திருவுண்ணாழி, மகாமண்டபம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு திருச்சுற்றுகொண்ட கோயிலாகும். திருவுண்ணாழியில் சிறுமேடையில் இராமர், சீதை ஆகியோர் அமர்ந்த நிலையில் இருக்க இராமனின் ஒரு கை அபய முத்திரையுடனும் மறுகை சீதையை அணைத்தும் உள்ளது. சீதை ஒரு கையில் தாமரை மலரை ஏந்தியும் இன்னொரு கையை தொங்கவிட்டபடியும் உள்ள வடிவில் உள்ளார். சீதாராமரின் காலடியில் அனுமான் வணங்கிய நிலையில் நின்றக் கோலத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. இராமகிருட்டிணன் (2016). தகடூர் நாட்டுத் திருக்கோயில்கள். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். பக். 126.