ஜி. வெங்கடசாமி
ஜி. வெங்கடசாமி | |
---|---|
![]() மருத்துவர் ஜி.வெங்கடசாமி | |
பிறப்பு | கோவிந்தப்பா வெங்கடசாமி அக்டோபர் 1, 1918 அயன்வடமலாபுரம், எட்டயபுரம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | ஜூலை 7, 2006 மதுரை தமிழ்நாடு, இந்தியா |
ஜி. வெங்கடசாமி (Govindappa Venkataswamy) (அக்டோபர் 1, 1918 – ஜூலை 7, 2006) என்பவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆவார். 1918ம் ஆண்டு எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் ஊரில் பிறந்தவர்.[1]
கல்வி[தொகு]
எட்டையபுரத்தில் ஆறாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த பின் கோவில்பட்டியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றார். பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மருத்துவப் படிப்பு முடித்தவுடன் பிரித்தானியா இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
இராணுவ சேவை[தொகு]
மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய நாடுகளில் யுத்த களங்களில் மருத்துவப் பணியாற்றினார். பர்மா காடுகளில் முகாமிட்டிருந்தபோது விஷப் பூச்சிகள் கடித்ததால், தீராத சரும நோய்க்கு ஆளானார். முடக்குவாதமும் தாக்கியது. ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மகப்பேறு மருத்துவக் கல்வி பயின்றார். எழும்பூர் மருத்துவமனையில் பயிற்சி மருத்தவராகவும் பணிபுரிந்தார். மீண்டும் தாக்கிய முடக்குவாதம் இந்த முறை இவரது கைவிரல்களைக் கடுமையாக பாதித்தது, பேனாகூட பிடிக்க முடியாத நிலை. எழுந்து நடமாடகூட முடியாமல் போனது.
கண் மருத்துவம்[தொகு]
ஓரளவு குணமடைந்து எழுந்த இவரிடம் ஒரு நண்பர், இந்தக் கைகளை வைத்துக்கொண்டு மகப்பேறு மருத்துவம் செய்ய முடியாது. எனவே, கண் மருத்துவம் பயிலும்படி ஆலோசனை கூறினார். கண் மருத்துவத்தில் முதுகலை பட்டயப் பட்டமும், கண் அறுவை மருத்துவத்தில் முதுநிலைப் (எம்.எஸ்.) பட்டமும் பெற்ற ஐந்து மருத்துவர்களில் இவரும் ஒருவர். 1956ஆம் ஆண்டில் மதுரை அரசு மருத்துவமனையில் புதிதாகத் தொடங்கப்பட்ட கண் மருத்துவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்.
அரவிந்த் கண் மருத்துவ மனை[தொகு]
1976ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் அரவிந்த் கண் மருத்துவமனையை மதுரையில் 11 படுக்கை வசதியுடன் தொடங்கினார். ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். இன்று இந்த மருத்துவமனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி உலகப் புகழ்பெற்ற கண் மருத்துவமனையாக விளங்கியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் இலவசப் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது.
கல்வித் தகுதிகள்[தொகு]
- 1938ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேதியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்
- 1944ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் படித்தார்
- 1951ல் சென்னை அரசு கண் மருத்துவனையில் கண் மருத்துவத்தில் பட்டம் பெற்றார்
விருதுகள்[தொகு]
- பத்ம ஸ்ரீ விருது பெற்றார் - 1973[2].
- 1985ல் இலினாய் பல்கலைக் கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம்
- சர்வதேச பார்வைக்குறைவு தடுப்பு விருது, அமெரிக்கக் கண் மருத்துவக் கழகம் - 1993
- ஹெலன் கெல்லர் சர்வதேச விருது - 1987
- மருத்துவர். பி. சி. ராய் விருது – 2001
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சர்வதேச கண் மருத்துவ நிபுணர்
- ↑ "Padma Awards Directory (1954–2009)" (PDF). உள்துறை அமைச்சகம் (இந்தியா). 2013-05-10 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2013-10-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)