சிறுகிழங்கு
சிறுகிழங்கு | |
---|---|
![]() | |
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
சிறுகிழங்கு, (ஆங்கிலம்: Coleus parviflorus அல்லது Plectranthus rotundifolius) லேபியேட்டே என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது கேரளா, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கிழங்கு வகைப்பயிராகும். இது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை,ஆப்ரிக்கா போன்ற வெப்பமண்டலப்பகுதிகளில் காணப்படுகிறது. இது பலவகையான உணவுகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் மணமும், சுவையும் நுகர்வோரைக் கவரக்கூடியது. இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால், சந்தையில் இதன் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.
சிறுகிழங்கில் 14.7- 20.8% மாவுச்சத்தும், 0.04-0.31% புரதச்சத்தும், 0.57-0.96% சர்க்கரையும் உள்ளது.[1] வடிக்கும் திறனுள்ள செந்தோமிலி மண் இச்சாகுபடிக்கு ஏற்றது. இப்பயிருக்கு நீர் அதிகம் தேவைப்படுகிறது. ஈரப்பதமுள்ள சூழ்நிலை ஏற்றது.
நாற்றங்கால்[தொகு]
ஓர் எக்டரில் நடவு செய்ய 500-600 ச.மீ.நாற்றங்கால் தேவை. 125-150 கி.கி. மட்கிய தொழுஎரு இட்டு உழ வேண்டும். நிலத்தைச் சமப்படுத்தியபின் இதன் கிழங்குகள் 30x15 செ.மீ. என்ற இடைவெளியில் பார்களில் நடப்படுகின்றன. விதைக்க 170-200 கி.கி. கிழங்குகள் தேவை.
நடவு[தொகு]
நிலத்தை நன்றாக உழுதபின், கடைசி உழவிற்கு முன்பு 10 டன் மட்கிய தொழுஎரு இட்டு சமப்படுத்த வேண்டும். 15-20 செ.மீ. நீளமுள்ள முளைத்து வரும் தண்டுகள் நடவுவயலில், பார்களில் 30x15 செ.மீ.இடைவெளியில் நடப்படுகின்றன. மார்ச் – ஏப்ரல் மாதங்கள் நடவுக்கு ஏற்றவை. கோ-1, ஸ்ரீதாரா,நிதி போன்றவை சாகுபடிக்கேற்ற இரகங்களாகும்.மண் பரிசோதனை செய்து உரமிடலாம். மண் ஆய்வு செய்யாத பட்சத்தில், அடியுரமாக 30:60:50 கி.கி. த:ம:சா/எக்டர் மண்ணில் இட வேண்டும்.மேலுரமாக, நட்ட 45 நாட்களில் 30:0:50 கி.கி. த:ம:சா /எக்டர் இட வேண்டும்.[1]
இது நட்ட 4-5 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். செடிகளை கிழங்குகளோடு அகழ்ந்தெடுத்து, கிழங்குகளைப் பிரித்து எடுக்க வேண்டும். 15-20 டன்/ எக்டர் மகசூல் கொடுக்கக்கூடியது.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ 1.0 1.1 [Rajmohan K 2007. Coleus(Coleus parviflorus Benth.) In.Underutilised and Underexploited Horticultural Crops, 2007, K.V.Peter(ed.) P:29-36]
- ↑ "Chinese potato (Coleus parviflorus L.)". பார்த்த நாள் 16 ஆகத்து 2017.