சிரோய் ஆம்பல் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரோய் ஆம்பல் திருவிழா (Shirui Lily Festival என்பது ஆண்டுதோறும் மணிப்பூர் மாநில அரசாங்க சுற்றுலா துறையினரால் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படும் கலாச்சார திருவிழாவாகும். 2016 க்கு முன்னதாக மணிப்பூர் மாநில உக்ருள் மாவட்டத்தில் உள்ள சிரோய் கிராமத்தின் உள்ளூர் மக்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த விழாவானது, 2017 ஆம் ஆண்டு முதல் மாநில அரசாங்கத்தால் அரசு விழாவாக .[1] அறிவிக்கப்பட்டு ஐந்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் கோவிட் தொற்று காரணமாக இவ்விழா கொண்டாடப்படவில்லை.

வரலாறு[தொகு]

மணிப்பூரில் மட்டுமே காணக்கூடிய அரிய மற்றும் அழிந்துவரும் மலரான சிரோய் ஆம்பல் மலரானது மணிப்பூரில் உள்ள சிரோய் மலைகளின் உச்சியில் மட்டுமே வளரும், உலகில் வேறு எங்கும் மீண்டும் நடவு செய்ய முடியாது. சிரோய் ஆம்பல் அல்லது லிலியம் மேக்லினே என்றும் அழைக்கப்படும் ஒரு அரிய இளஞ்சிவப்பு வெள்ளை மலர், மணிப்பூரின் இம்பாலில் இருந்து சுமார் 83 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள சிரோய் மலைத்தொடரில் மட்டும் காணப்படுகிறது. 1946 ம் ஆண்டு தாவரவியல் மாதிரிகளைச் சேகரிக்கும் போது இம் மலரைக் கண்டறிந்த டாக்டர் ஃபிராங்க் கிங்டன் வார்டின் மனைவி ஜீன் மாக்லின் நினைவாக இந்தப் பூவுக்குப் பெயரிடப்பட்டது. உலகின் முன்னணி தோட்டக்கலை அமைப்புகளில் ஒன்றான ராயல் தோட்டக்கலை சங்கம் 1948 இல் லண்டனில் நடந்த மலர் கண்காட்சியில் சிரோய் ஆம்பல் மலருக்கு அதன் மதிப்புமிக்க தகுதி விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. மேலும் இந்த மலரின் நினைவாக இந்திய அஞ்சல் துறையால் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

சிரோய் ஆம்பல் செடி சுமார் ஒரு அடி உயரம் கொண்டதாகும். அதன் பூ மணியின் வடிவத்தை ஒத்திருக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் மட்டுமே பூக்கும். உக்ருல் மாவட்டத்தின் சிரோய் மலையின் பரந்து விரிந்த மலைத்தொடரில் இந்த ஆம்பல் பூக்கும் காலங்களில் பிரகாசமான ஆம்பல் மலர்களால் சூழப்பட்ட அழகிய காட்சி காண்போரின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

அழிந்மு வரும் பட்டியலில் உள்ள இம்மலர்கள் பூக்கும் மாதங்களில், மணிப்பூர் மாநில மலர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இம்மலரைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதையும் அதை அழிந்து விடாமல் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு இவ்விழா முதன்மையாக அனுசரிக்கப்படுகிறது. இந்த திருவிழா பல்வேறு சமூகங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் ஒன்று கூடுவதற்கும், மணிப்பூரின் மிக உயரமான மலைவாசஸ்தலமான, அழகிய உக்ருல் மாவட்டத்தை ஆராய்வதற்கும், இங்கு வசிக்கும் தங்குல் நாகா பழங்குடியினரைப் பற்றிய ஆழமான பார்வைகளைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சிரோய் மலைகளில் ஏறுவது மணிப்பூரின் மிகவும் சுவாரஸ்யமான மலையேற்றங்களில் ஒன்றாகவும் அரிய ஆம்பல் மலரைக் காணும் வாய்ப்பாகவும் இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களின் கண்களுக்கு விருந்தாகவும் உள்ளது..

திருவிழா நடைபெறும் இடங்கள்[தொகு]

மாநில அரசாங்கத்தால் அரசு கலாச்சார விழாவாக அறிவிக்கப்பட்ட பின்பு மூன்று இடங்கள் இவ் விழாக்களை கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிகழ்வுகள்[தொகு]

முதலாம் நிகழ்வு[தொகு]

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்விழாவின் முதல் நிகழ்வு, மே 16 முதல் 20 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. நேரடி இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறப் பாடல்கள், பாரம்பரிய நடனம், உள்நாட்டு விளையாட்டுகள் மற்றும் போட்டிகள், கலை மற்றும் கைவினைக் கண்காட்சிகள், இன உணவுக் கடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனையாளர்கள் என விதவிதமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டாடப்பட்டது.

இரண்டாம் நிகழ்வு[தொகு]

2018 ஆம் ஆண்டில், ஆம்பல் திருவிழாவின் இரண்டாவது நிகழ்வு ஏப்ரல் மாதத்தில் 24 முதல் 28 ஆம் தேதி வரை மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. முதல் நாளில் சிரோய் குழுவின் தி ஷிருய் லில்லி(சிரோய் ஆம்பல்) பாடலுடன் இது வாங்கயன் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது. Tingtell திரைப்படத்தின் 'HaoLaa' நிகழ்ச்சி, ஷிருய் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி, டவுன்ஹில் ரேஸ் டிராபி, கிராஸ் கன்ட்ரி எண்டிரோ ரேஸ் மற்றும் மிஸ் ஸ்பிரிங் போட்டி ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாக நடந்தது. மலர் கண்காட்சி, ஷுமாங் லீலா, கபுய் நடனம், மாவோ நடனம், தங்குல் நடனம், மணிப்பூரி மெல்லிசை, மலையேற்றப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவின் இறுதி நாள் வரை உயர்ப்புடன் வைத்திருந்தன. ஷிராக் இசைக்குழு போட்டியில் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இருந்து பல இசைக்குழுக்கள் பங்கேற்றன. அமெரிக்காவில் இருந்து குயின்ஸ்ரிச் மற்றும் ஸ்டீல் ஹார்ட் ஆகிய இரண்டு சர்வதேச இசைக்குழுக்களும் இவ்விழாவில் உள்ளூர் குழுக்களுடன் போட்டி போட்டது இவ்விழாவின் வெற்றிக்கு நல்லதொரு சான்றாகும்..[2]

முன்றாம் நிகழ்வு[தொகு]

தொடர்ந்த இரண்டு நிகழ்வுகளின் பெரிய வெற்றிகளுக்கு பிறகான மூன்றாம் நிகழ்வு 2019 ம் ஆண்டு அக்டோபர் 16 முதல் 19 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. ராக் இசைக்குழுக்கள், பாஸ்டன், மாசசூசெட்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸில் இருந்து எக்ஸ்ட்ரீம் மற்றும் ஸ்காட்லாந்தின் டன்ஃபெர்ம்லைனில் இருந்து நாசரேத் ஆகியவை சிரோக்கின் ஆம்பல் விழாவில் பங்கெடுத்தன. ஷிராக்கில் தலையிடுகின்றன. இந்த ஆண்டு திருவிழா பல்வேறு பிரபலமான இசைக்குழுவினர்களின் பங்களிப்போடு ஒரு பெரிய மைல்கல்லை அடைந்தது.

நான்காம் நிகழ்வு[தொகு]

கோவிட் பெருந்தொற்றின் காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் நடத்தப்படாமலிருந்த இவ்விழா நான்காம் நிகழ்வாக 2022ம் ஆண்டு மே 25 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இசைக்கலைஞர்களுக்கான சி-ராக் [3][4][5] சமையல் கலைஞர்களுக்கான சி-செஃப் [6] மற்றும் அழகுப்போட்டியான மிஸ் ஸ்பிரிங் பேஜண்ட் [7] போன்ற வாடிக்கையான நிகழ்ச்சிகளோடு கலை மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சிகள், இன உணவு உணவகங்கள் மற்றும் முகாம், பைக்கிங் மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ideas behind Shirui Lily Festival celebration". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  2. [http:https://utsav.gov.in/view-event/shirui-lily-festival-1 "Shirui Lily Festival"]. {{cite web}}: Check |url= value (help)
  3. "Platform for International rock bands". e-Pao. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  4. "ShiRock". e-Pao. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  5. "Nazareth and Extreme bands". Times of India. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  6. "ShiChef". e-Pao. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  7. "Shirui Lily Festival Miss Spring". North East Now. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோய்_ஆம்பல்_திருவிழா&oldid=3652726" இலிருந்து மீள்விக்கப்பட்டது