கல்லச்சுக்கலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

கல்லச்சுக்கலை (Lithography) என்பது எண்ணெயும், நீரும் கலக்காமல் இருக்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைக்கலை முறையாகும். இது பெரும்பாலும் கற்களிலோ அல்லது உலோகத்திலோ மென்மையான பகுதியின்மேல் வரையப்படும். இதனை சுண்ணாம்பு அச்சுக்கல் என அழைப்பர். இந்த அச்சுக்கலைப் பாணியை முதன்முதலில் 1796இல் கண்டுபிடித்துச் செயலாக்கியவர் செருமனி நாட்டைச் சார்ந்த நடிகர் அலோய்சு செனெஃபெல்டர் (Alois Senefelder) என்பவர். இவர் மேடை நாடக விளம்பரத்திற்காக மலிவான முறையில் படங்களை அச்சிடுவதற்கு இக்கலைப் பாணியைப் பயன்படுத்தினார்.
கல்லச்சுக்கலையின் தத்துவம்[தொகு]
கல்லச்சுக்கலை ஓர் எளிய வேதியியல் தத்துவத்தின் அடிப்படையில் படிமங்களை ஆக்கிட உருவாக்கப்பட்டது. ஒரு படிமத்தின் நேர்முகப் பகுதி நீர் எதிர்ப்பு (hydrophobic) பண்புடையது என்றால், அதன் எதிர்முகப் பகுதி நீர் ஈர்ப்பு (hydrophilic) பண்புடையதாகும். பொருத்தமான அச்சு மையும் நீர்க் கலவையும் படிமத் தட்டில் வைக்கப்படும்போது, மை நேர்முகப் பகுதியில் ஒட்டிக்கொள்ளும், நீர் எதிர்முகப் பகுதி படிமத்தை அகற்றும்.
இதைக் கண்டுபிடித்த அலோய்சு செனெஃபெல்டெர் முதலில் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தினார். இதிலிருந்து "கல்லச்சுக்கலை" என்னும் பெயர் எழுந்தது. கிரேக்க மொழியில் "லித்தோசு" ("lithos" = λιθος) என்றால் "கல்" என்று பொருள்.

தற்காலத்தில் கல்லச்சுக்கலை[தொகு]
இன்று செய்தித் தாள்கள், விளம்பரச் சுவரொட்டிகள் போன்றவை ஆப்செட் முறையில் கல்லச்சுக்கலையின் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்றி பெருமளவில் அச்சிடப்படுகின்றன. அதோடு கணிணி தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது.