கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில்[1]
பெயர்
பெயர்:கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில்[1]
அமைவிடம்
ஊர்:கருங்குழி (வடலூர் அருகில்)
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:லட்சுமி நாராயணப் பெருமாள் (திருமார்பில் ஸ்ரீமகாலட்சுமி, இடதுமடியில் ஸ்ரீ ராஜ்ஜியலட்சுமி)
உற்சவர்:லட்சுமி நாராயணன்
வரலாறு
தொன்மை:2000 ஆண்டுகள்
தொலைபேசி எண்:04142-259685[1]

கருங்குழி லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள கருங்குழியில் அமைந்துள்ள பழைமையான திருக்கோயில். ராமானுஜரால் வழிபடப்பெற்ற திருக்கோயில், வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவருட்பாவில் பாடிய திருத்தலம், விஜயநகர் மாமன்னர் அச்சுதப்ப நாயக்கரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில், மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பெற்ற) சிதம்பரம் ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமான் திருக்கோயில் தாக்கப்பட்ட சமயம் அத்திருக்கோயில் உற்சவமூர்த்தி பாதுகாக்கப்பட்ட திருக்கோயில் எனப் பல விதங்களில் புகழ்பெற்ற திருக்கோயில்.[1]

ராமானுஜர் தரிசனம் செய்தமை[தொகு]

ஒரு காலகட்டத்தில் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் இடிக்கப்பட்ட சமயம் உற்சவமூர்த்தியைப் பாதுகாக்க முயன்ற திருமால் அடியார்கள் கருங்குழி திருக்கோயிலுக்கு கொணர்ந்து பாதுகாத்து வந்தனர். பின்னர் இதனை அறிந்த ராமானுஜர் இப்பெருமாளைப் பெற்றுக்கொண்டு கள்ளக்குறிச்சி வழியே திருப்பதி அடைந்து அங்கு பிரதிஷ்டை செய்தார். [1]

வள்ளலார்[தொகு]

இத்தல பெருமாளிடம் பக்தி கொண்டவர் வள்ளலார். இதனாலேயே வடலூர் தைப்பூச திருவிழாவில் திருஅறை ஜோதி தரிசனத்திற்குச் செல்லும் போது இத்திருக்கோயில் தீபாராதனை கண்டபின்னரே சித்திவிளாக திருமாளிகைக்குச் செல்கிறார். பாலு ரெட்டியார் எனும் செல்வந்தர் வயிற்றுவலியால் அவதிப்பட்ட சமயம் அவருக்கு திருநீறு வழங்கி வயிற்று வலியைப் போக்கியதற்காக வள்ளலாருக்கு அளித்த நிலத்தை வள்ளலார் இத்திருத்தலத்திற்கே அளித்தார். [1]

கல்யாண சீனிவாசன்[தொகு]

இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீனிவாசன், பாண்டவர்கள் வனவாச சமயம் நடந்து நடந்து புண்ணான திருப்பாதங்கள் கொண்ட கண்ணபிரானாக உள்ளார். இவர் கல்யாண சீனிவாசனாக திருமணத் தடை அகற்றுபவராகவும் உள்ளார்.

புனர்நிர்மாணம்[தொகு]

அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் ராஜகோபுரம் அமைக்க அஸ்திவாரம் எழுப்பப்பட்டு திருப்பணிகள் தொடராது நின்றுவிட்டன. சிதிலமடைந்த இத்திருக்கோயில் திருப்பணிகள் பக்தர்களால் செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இத்திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஏராளம் இருந்தும் அவை மற்றவர்கள் வசம் அகப்பட்டு விட்டதால் பக்தர்கள் மூலமாகவே தினசரி வழிபாடுகள் நடைபெறும் திருக்கோயில்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குமுதம் ஜோதிடம்; 14.03.2008;கருணைக்கு ஒரு கருங்குழி கார்மேக கண்ணன் கட்டுரை; பக்கம் 4-6;