எயிற்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிபளஸ் குறிப்பிடும் சோபட்மா SOPATMA

வங்கக்கடல் விழுங்கிய சங்ககாலத் துறைமுகங்களில் எயிற்பட்டினமும் ஒன்று. இதை பிற்காலத்தில்மரக்காணம் என்று பெயர்பெற்றது.[1]

காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, பாண்டிய-நாட்டுத் தொண்டி ஆகியவை சங்க-இலக்கியம் காட்டும் வங்கக்கடல் துறைமுகங்கள். கடல்-மல்லை பல்லவர் காலத்துக்குப் பின் கடலால் கொள்ளப்பட்டது.

  • சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [3]
நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [4]


எயிற்பட்டினம் – சிறுபாணாற்றுப்படை என்னும் நூல் இந்தத் துறைமுகம் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறது.[5] சிறுபாணாற்றுப்படை நூலைப் பாடியவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். பாடப்பட்ட அரசன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன். இந்த நூல் இந்த ஊரை ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ எனக் குறிப்பிடுகிறது. மதில் என்னும் சொல்லுக்கு எயில் என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே இது எயிற்பட்டினம் என ஆகிறது. பெருப்ளஸ் இதனைச் சோபட்மா எனக் குறிப்பிடுகிறார்.[6] சோ என்னும் சொல் மதிலரணைக் குறிக்கும்.[7]

இக்காலத்தில் ஆலம்பரக்கோட்டை [8] எனப்படும் ஊர் கோட்டைக் கொத்தள இடிபாடுகளுடன் உள்ளதை முனைவர் இளங்கோவன் [9] குறிப்பிடுகிறார். இது பிற்காலக் கோட்டை என்றாலும் இங்குதான் எயிற்பட்டினம் இருந்தது எனலாம்

இவ்வூரில் தாழம்பூ அன்னப்பறவை போல் பூத்ததாம். செருந்திப் பூக்கள் பொன் போலப் பூத்தனவாம். முண்டகப் பூக்கதிர்கள் மணிநிறம் கொண்டனவாம். புன்னைப் பூக்கள் முத்துகள் போல் கொட்டினவாம். இப்படிக் கடலோரக் கானல் வெண்மணலால் விம்மிக் கிடந்ததாம். இப்படிப்பட்ட நெய்தல் நெடுவழியில் சென்று புலவர் எயிற்பட்டினத்தை அடைந்தாராம். இந்தப் புலவரால் ஆற்றுப்படுத்தப்படும் சீறியாழ்ப் பாணன் எயிற்பட்டினம் சென்றால் விரைமரங்கள் (விரைந்து செல்லும் மரக்கலங்கள்) ஒட்டகம் தூங்குவது போல் நிற்பதைக் காணலாமாம் என்றும், அங்கே தின்னுவதற்குச் சுட்ட மீனும், பருகுவதற்கு பழம்படு தேறலும் (பழச்சாற்றுக் கள்) விருந்தாகப் பெறலாமாம். என்றும், இந்த விருந்தினை நுளைமகள் என்னும் பரதவப் பெண் படைப்பாள் என்றும், இந்தப் பட்டினம் கிடங்கிற்கோமானாகிய நல்லியக்கோடனுக்கு உரியது என்றும் குறிப்பிடுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

ஆழ்கடல் புதையல்[தொகு]

மதில் என்றால் 'எயில்’என்று பெயர் ஆகும். அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. சங்ககாலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். இந்த ஊரை கிரேக்கர்கள் ‘சோபட்மா’(சோ பட்டினம்) என்று குறிப்பிட்டுள்ளனர், ‘சோ’என்னும் பொருள் உண்டு.[10]

மேற்கோள்[தொகு]

  1. பழங்காலத் தமிழர் வாணிகம்,மயிலை சீனி வேங்கடசாமி. பக்.75
  2. சோபட்மா
  3. அடி 146-163
  4. அடி 311-345
  5. அடிகள் 146-163
  6. 60. Among the market-towns of these countries, and the harbors where the ships put in from Damirica [=Limyrike] and from the north, the most important are, in order as they lie, first Camara, then Poduca, then Sopatma; in which there are ships of the country coasting along the shore as far as Damirica; and other very large vessels made of single logs bound together, called sangara: but those which make the voyage to Chryse and to the Ganges are called colandia, and are very large. There are imported into these places everything made in Damirica, and the greatest part of what is brought at any time from Egypt comes here, together with most kinds of all the things that are brought from Damirica and of those that are carried through Paralia. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant.
  7. சோ அரணும் போர் மடிடியத் தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் - சிலப்பதிகாரம் 17 பாடல் 35
  8. ஆலம்பரக்கோட்டை
  9. முனைவர். இளங்கோவன்
  10. புதையுண்ட சங்கத் தமிழ் சரித்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எயிற்பட்டினம்&oldid=2755593" இலிருந்து மீள்விக்கப்பட்டது