ஈஸ்வரி பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஸ்வரி பாய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஐதராபாத் இராச்சியம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியக் குடியரசுக் கட்சி
பிள்ளைகள்ஜே. கீதா ரெட்டி, (மகள்)
வேலைஅரசியல்வாதி

ஜெட்டி ஈஸ்வரி பாய் (Jetti Eshwari Bai) (1 திசம்பர் 1918-25 பிப்ரவரி 1991) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவர். இவர் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் உயர்சாதியினரால் தலைமுறை தலைமுறையாக அடிமைத்தனம் மற்றும் சாதி பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மேம்பாட்டிற்காக உழைத்தார்.

வாழ்க்கை[தொகு]

ஈஸ்வரி பாய் 1 திசம்பர் 1918இல் பிறந்தார்.[1] சிக்கந்தராபாத்திலுள்ள பரோபரகரணி பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சில்காகூடாவில் கீதா வித்யாலயா என்ற பள்ளியைத் தொடங்கி அந்த பகுதியில் உள்ள ஏழைப் பெண்களுக்கான பட்டறைகளை நடத்தினார்.

இவர் 1950இல் சிக்கந்திராபாத் நகராட்சி கழகத்தின் உறுப்பினராக பணியாற்றினார். இவர் 1960களில் குடிமக்கள் உரிமைக் குழுவை நிறுவி ஐதராபாத்து நகராட்சி தேர்தலில் ஒரு அரசியலற்றக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் கட்சி நான்கு இடங்களை வென்றது.

அம்பேத்காரால் ஈர்க்கப்பட்டு, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் சேர்ந்தார். மேலும், 1958 இல் கூட்டமைப்பு இந்தியக் குடியரசுக் கட்சி என மறுபெயரிடப்பட்டபோது, இவர் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் தலைவரானார். 1962 பொதுத் தேர்தல்களில் இவர் யெல்லரெட்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இந்தியக் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1967 தேர்தலில் வெற்றி பெற்றார். [1] இவர் தெலங்கானா பிரஜா சமிதியின் துணைத் தலைவராக இருந்தார். மேலும், 1972 தேர்தலில் யெல்லரெட்டி தொகுதியிலிருந்து இந்தியக் குடியரசுக் கட்சி -தெலங்கானா பிரஜா சமிதி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.  

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் தலைவராக, உயர் கல்வி வரை பெண் மாணவர்களின் இலவசக் கல்விக்கான சட்டத்தை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். இவர் இந்திய சமூக நல மாநாட்டின் செயலாளராகவும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1969இல் தெலங்கானா தனி மாநிலத்திற்காக போராடினார். இதற்காக சிறையிலும் அடைக்கப்பட்டார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். புனேவைச் சேர்ந்த பல் மருத்துவர் ஜெட்டி இலட்சுமிநாராயணனை 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவரது மகள், ஜெ. கீதா ரெட்டி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாவார்.[3]

இறப்பு[தொகு]

ஈஸ்வரி பாய் 25 பிப்ரவரி 1991 இல் இறந்தார்.[4] ஈஸ்வரி பாய் நினைவு விருது இவரது நினைவாக நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 V6 News Telugu (2015-12-02), Special Discussion On Biography of Eshwari Bai | 7PM Discussion – V6News, பார்க்கப்பட்ட நாள் 2017-07-18{{citation}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. . 2017-06-01. 
  3. . 27 April 2007. 
  4. . 25 February 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்வரி_பாய்&oldid=3296488" இலிருந்து மீள்விக்கப்பட்டது