இடித்துரைப்பாளர்கள்
இடித்துரைப்பாளர்கள் அல்லது ஊழலை அம்பலப்படுத்துபவர்கள் (ஆங்கிலம்:Whistle blowers) பார்வையில் தென்படும் அநீதிகள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்பவர்கள். உலகம் முழுவதும் மக்கள் நலத்திற்கு எதிராக செயல்படுகிறவர்களின் மற்றும் மக்களை ஏமாற்றுகிறவர்களின் முகத்திரையைக் கிழிக்கவும், அவர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை அரசு மற்றும் நீதித்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்பவர்களையும், அரசின் காதில் விழும்படியாக கூவி போராட்டங்களில் ஈடுபடுகிறவர்களையும் இடித்துரைப்பாளர்கள் என்றழைப்பர்.
இடித்துரைப்பாளர்களின் முக்கியப் பணிகள்[தொகு]
உறுதியான தகவல்களுடன் அல்லது ஆவணங்களுடன் இடித்துரைப்பாளர்கள் கீழ்கண்ட விடயங்கள் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வார்கள்.
- சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறிய செயல்பாடுகள்
- நிர்வாகச் சீர்கேடுகள்
- நிதி முறைகேடுகள்
- அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்
- பொதுசுகாதாரத்திற்கு தீங்கிழைக்கும் செயல்கள்
- பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தீங்கிழைக்கும் செயல்கள்
இடித்துரைப்பாளர்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை எனில் அரசு மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு போராட்டங்கள் நடத்துவர்.
இந்தியாவில் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம்[தொகு]
சமூக விரோதிகளிடமிருந்து இடித்துரைப்பாளர்களைக் காக்கும் பொருட்டு, இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா 2011, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் (லோக் சபை) 28-12-2011-இல் நிறைவேற்றப்பட்டது.[1] இதே சட்ட மசோதா நாடாளுமன்ற மேலவை (ராஜ்ஜிய சபை)யில் 21-02-2014-இல் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் பொருந்தாது[2][3] இந்தியக் குடியரசுத் தலைவர் இம்மசோதாவுக்கு 09-05-2014-இல் ஒப்புதல் அளித்ததின் காரணமாக, இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் அரசின் நடைமுறைக்கு வந்துவிட்டது.[4]
பாதுகாப்பு சட்டத்தின் நன்மைகள்[தொகு]
ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிக்கொணர்வதால், இடித்துரைப்பாளர்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவிய சூழ்நிலையை அகற்றவும், அச்சமின்றி ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக்கொணர ஊக்குவிக்கவும் இடித்துரைப்பாளர்களுக்கான பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் தவறான தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 30,000/- அபராதமும் விதிக்கப்படும் என்பது இச்சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.prsindia.org/billtrack/the-public-interest-disclosure-and-protection-of-persons-making-the-disclosures-bill-2010-1252/
- ↑ http://timesofindia.indiatimes.com/india/After-2-years-and-no-changes-Whistleblowers-Bill-cleared/articleshow/30815449.cms
- ↑ http://www.thehindu.com/news/national/whistleblowers-protection-bill-passed/article5717263.ece
- ↑ http://epaper.dinamani.com/272189/Dinamani-Madurai/14-05-2014#page/11/2