அ. கி. பரந்தாமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. கி. பரந்தாமனார்
பைந்தமிழ்ப் பாவலர்
பைந்தமிழ்ப் பாவலர்
பிறப்பு'(1902-07-05)சூலை 5, 1902
வேப்பேரி, சென்னை
இறப்பு1986
சென்னை
தொழில்தமிழ்ப்பேராசிரியர்
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை (தமிழ்)
வகைஇலக்கணம், வரலாறு
குறிப்பிடத்தக்க படைப்புகள்நல்ல தமிழ் எழுதுவது எப்படி?
பிள்ளைகள்அ. ப. சோமசுந்தரன்

அல்லிக்குழி கிருட்டிணசாமி பரந்தாமனார் [1] என்னும் அ. கி. பரந்தாமனார் எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்ப்பேராசிரியராக உயர்ந்தவர் ஆவார். எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் வரலாற்று ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

பிறப்பு[தொகு]

அ. கி. பரந்தாமனார் 1902 சூலை 15 ஆம் நாள் சென்னையில் வாழ்ந்த கிருட்டிணசாமி – சிவக்கியானம் இணையரின் நான்காவது மகவாகப் பிறந்தார்.[2]

கல்வி[தொகு]

சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் (செயின்ட் பால்) உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவரை பயின்றார். பணியிலிருந்து விடுப்புபெற்று சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இடைக்கலை (Intermediate) நிலையையும் அரசியல், வரலாறு ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்று இளங்கலை (Bachelor of Arts) பட்டத்தையும்[3] 1949 ஆம் ஆண்டில் முதுகலை (Master of Arts) பட்டத்தையும் பெற்றார்..[2]

பணி[தொகு]

அ. கி. பரந்தாமனார் பள்ளிப் படிப்பினை முடித்ததும் ஓராண்டு சென்னை கர்னாடிக் பஞ்சாலையில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தூய பவுல் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 24 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1950 சனவரி 8 ஆம் நாள் மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு 17ஆண்டுகள் பணியாற்றி 1967 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்..[2]

பாராட்டுகள்[தொகு]

அ. கி. பரந்தாமனாருக்கு 60 ஆம் அகவை நிறைந்ததும் மதுரை திருவள்ளுவர் கழகம் அவருக்கு மணிவிழா கொண்டாடியது. அப்பொழுது மதுரை எழுத்தாளர் மன்றம் அவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்னும் பட்டத்தை வழங்கியது..[2]

தஞ்சையில் 1981ஆம் ஆண்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. அவ்விழாவில் அ. கி. பரந்தாமனாருக்கு தமிழக அரசின் திரு. வி. க. விருது வழங்கப்பட்டது..[2]

படைப்புகள்[தொகு]

  1. காதல்நிலைக் கவிதைகள் (1954)
  2. எங்கள் தோட்டம் (1964) - சிறுவர் பாடல்
  3. பரந்தாமனார் கவிதைகள்
  4. கவிஞராக
  5. நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
  6. தமிழ் இலக்கியம் கற்க
  7. திருக்குறளும் புதுமைக் கருத்துக்களும் (1963)
  8. பன்முகப் பார்வையாளன் பாரதி
  9. பேச்சாளராக
  10. மதுரை நாயக்கர் வரலாறு
  11. திருமலை நாயக்கர் வரலாறு
  12. தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்
  13. வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும்
  14. வாழ்க்கைக்கலை
  15. கோமஸ்

மறைவு[தொகு]

அ. கி. பரந்தாமனார் 1986 ஆம் ஆண்டில் சென்னையில் மரணமடைந்தார்.

அ. கி. ப. வைப் பற்றிய நூல்கள்[தொகு]

  1. பல்துறை வித்தகர் பரந்தாமனார், அ. ப. சோமசுந்தரன் (பதி)
  2. பரந்தாமனார் கவிதைகள் ஓர் ஆய்வு, எஸ். பிரேமகுமாரி
  3. பல்துறை வித்தகர் அ.கி.ப., மறைமலை இலக்குவனார், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அ.கி.ப. ஆய்வுக் கருத்தரங்கில் ஆற்றிய தலைமையுரை

சான்றடைவு[தொகு]

  1. மறைமலை இலக்குவனார், பல்துறை வித்தகர் அ.கி.ப., மின்னூல் பக்.2
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 பரந்தாமனார் அ. கி., பேச்சாளராக, அல்லி நிலையம் 28/19 முத்துமுதலி தெரு வேப்பேரி சென்னை, 2011
  3. மறைமலை இலக்குவனார், பல்துறை வித்தகர் அ.கி.ப., மின்னூல் பக்.8
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கி._பரந்தாமனார்&oldid=1963820" இலிருந்து மீள்விக்கப்பட்டது