மகாத்மா காந்தி நூல் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாத்மா காந்தி நூல் நிலையம் (Mahatma Gandhi Library) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோயில் தெருவில் அமைந்துள்ள தனியார் நூலகமாகும்.

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கு.மகாலிங்கம் (87) என்பவரால் இந்நூலகம் நிர்வகிக்கப்படுகிறது. இவருடைய பெற்றோரான மு.குப்புசாமி-கன்னியம்மாள் காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடு கொண்டதன் விளைவாக அதில் ஈடுபாடு ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் 1946இல் மகாத்மா காந்தியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்த இவர் காந்தியின் ஆளுமையால் கவரப்பட்டுள்ளார். மக்களுக்கு உதவ நூலகம் ஆரம்பிக்க எண்ணி, நண்பர்கள் உதவியுடன் 2.11.1952ஆம் ஆண்டில் துவங்கி நடத்தி வருகிறார். [1] பரலி சு. நெல்லையப்பரால் துவங்கி வைக்கப்பட்ட இந்நூலகம் தற்போதுள்ள முகவரியில் இயங்கிவருகிறது. துவக்கவிழாவின்போது அப்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சி.ஆர்.இராமசுவாமி தலைமை வகித்துள்ளார். [2]

வளர்ச்சி[தொகு]

நூல் நிலையம் தொடங்கிய காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் நூல்கள் இருந்துள்ளன. பின்னர் அவர் அரிதின் முயன்று, நண்பர்களின் உதவியுடன் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்துள்ளார். இவருடைய முயற்சிக்கு ராஜாஜி மற்றும் அவரது மகன் சி. ஆர். நரசிம்மன், கண்ணதாசன் , காந்தி கண்ணதாசன், அகிலன், அகிலன் கண்ணன், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் மற்றும் பலர் ஊக்கம் தந்துள்ளனர். வாடகை இடத்தில் இந்நூலகத்தை நடத்திவரும் சொந்த இடத்தில் இறுதி வரை நூலகம் நடத்த வேண்டும் என்ற இலக்கில் தன் பணியைத் தொடர்கிறார். [1] மக்களுக்காக மக்களால் என்ற நன்னோக்கில் இந்நூலகம் செயல்படுகிறது. [3]


நூல்கள்[தொகு]

இந்நூலகத்தில் 30,000 நூல்கள் உள்ளன. [2] அவற்றுள் 100க்கும் மேற்பட்டவை காந்தி தொடர்பானவையாகும். [1] 1935இல் வெளியான மகாகவி காளிதாசர் எழுதிய ரகு வம்சம், தமிழின் முதல் துப்பறியும் நாவல், வாரியார் நடத்திய திருப்புகழ் அமிர்தம் என்கிற ஆன்மிக இதழின் 1937 முதல் 1952 வரையிலான தொகுப்பு, சங்க இலக்கிய நூல்கள் முதல் நவீன இலக்கிய நூல்கள் வரை பல துறையைச் சார்ந்த நூல்கள் இங்கு உள்ளன. [3]

விருதுகள்[தொகு]

இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]