நிபா தீநுண்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Henipavirus
Colored ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கி of a Hendra virion (ca. 300 nm length)
தீநுண்ம வகைப்பாடு
குழு:
Group V ((-)ssRNA)
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Henipavirus
மாதிரி இனம்
Hendra henipavirus
இனம் (உயிரியல்)

Cedar henipavirus
Ghanaian bat henipavirus
Hendra henipavirus
Mojiang henipavirus
Nipah henipavirus

எனிபா தீநுண்மம் (ஆங்கிலம்: Henipavirus) அல்லது நிபா தீநுண்மம் இரைபோ கருவமில தீநுண்மம் ஆகும். இது ஐந்து இனங்களைக் கொண்டுள்ளது. இந்த தீநுண்மங்கள் இயற்கையாக பழ வௌவால்களில் காணப்படுகின்றது. பழ வவ்வாலின் பறக்கும் நரி, குறுவௌவால் என பல இனங்களிலும் காணப்படுகின்றது.[1] நிபா தீநுண்மங்கள் அவற்றின் நீளமான மரபணுத்தொகைகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன. அண்மைக்காலங்களில் விலங்குகளிலிருந்து மனிதருக்குப் பரவும் நோய் உயிரிகளாக உருவாகி வருகின்றன; இதனால் வீட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நோயும் உயிரிழப்பும் ஏற்படுவது கவலைக்குரியதாக உள்ளது.[2]

வரலாறு[தொகு]

முதன்முதலில் 1998-ம் ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் இருக்கும் ஈப்போவின் அருகிலிருக்கும் பன்றிப் பண்ணையில்தான் இந்த தீநுண்மம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பண்ணையில் வேலைபார்த்த தொழிலாளர்கள்தான் இதனால் முதலில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், அது  நிபா வைரஸ் எனத்  தெரியாமல், இது ஜப்பானீஸ் என்செபாலிடிஸ் (Japanese encephalitis) என்று நினைத்திருந்தார்கள். பிறகு, மலேசியா முழுக்க பல மனிதர்களும் விலங்குகளும் பாதிக்கப்பட்டு, பலியான  பின்னரே, இது  `நிபா தீநுண்மம் ’ என 1999-ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டது. இது, `சுங்கை நிபா’  (Sungai Nipah) என்ற இடத்திலிருந்த ஒருவரின் உடலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. இது மலேசியாவில் மட்டுமின்றி, அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்களாதேசையும் அதனருகிலிருக்கும் சில இந்தியப் பகுதிகளையும் பாதிக்க ஆரம்பித்தது. இந்தியாவில் 2001-ம் ஆண்டு சிலிகுரியிலும், 2007-ம் ஆண்டு நாடியாவிலும் நிபா வைரஸால் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

பண்புகள்[தொகு]

பழந்தின்னி வௌவால்களால் (Pteropus) பரவும் இந்த நிபா தீநுண்மம் `பாராமிக்ஸோவிரிடே’ (Paramyxoviridae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இது முதலில் பன்றியிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவியது என்றாலும், இது நாய், ஆடு, குதிரை போன்ற சில வளர்ப்புப் பிராணிகளிலும் காணப்படுகிறது.

பரவும் வழிகள்[தொகு]

விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த தீநுண்மம் மனிதர்களுக்குள்ளும் பரவும். ஆனால், நம்மைத் தாக்கும் இந்த தீநுண்மத்தால், இதைப் பரப்பும் வௌவாலுக்கு எந்த ஆபத்தும் வராது. இந்த வௌவால்கள் பனம்பழத்தை உணவாகச் சாப்பிடும். இந்த வௌவால் கடித்த பனம்பழத்தையோ பனைமரக் கள்ளையோ குடித்தால் நாமும் இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோம். இந்த தீநுண்மத்தால் பாதிக்கப்பட்ட வௌவால்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் இது பரவும். வௌவால்களின் எச்சில் மற்றும் சிறுநீர் மூலமும் பரவுகிறது.

நோய் தொற்று அறிகுறிகள்[தொகு]

  • கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி
  • மூளை வீக்கம்
  • உடல் சோர்வு
  • சுவாசப் பிரச்சனைகள்
  • என்சிஃபாலிடிஸ் (Enciphalitis) எனப்படும் மனக்குழப்பம்
  • உளறல்
  • தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சுயநினைவில்லாமல் போய் விடுவார்கள்
  • கடைசி கட்டமாக, மூளை காய்ச்சல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்

நிபா தீநுண்மம் தாக்கிய 5 - 14 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்குத் தொடுதல், தும்மல், இருமல் போன்றவற்றால் பரவும். நிபா தீநுண்மம் நம் உடலுக்குள் புகுந்து, அதன் தாக்கத்தை வெளிப்படுத்தும் காலம் மூன்று நாள்களிருந்து, சில சமயங்களில் மூன்று வாரங்கள்வரை  இருக்கும்.  

மருத்துவ பாதுகாப்பு மற்றும் சிகிச்சை முறைகள்[தொகு]

  • விலங்குகள் மற்றும் பறவைகள் கடித்த பழங்களை உண்ணக்கூடாது.
  • வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.
  • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது முகமூடி மற்றும் கையுறை அணிய வேண்டும்.
  • பழந்தின்னி வவ்வால்கள் அதிகமுள்ள பகுதிகளில் கள் அருந்தக்கூடாது.

நிபா தீநுண்மம் தாக்கியவர்களுக்கு பேரியர் நர்ஸிங் (Barrier Nursing) மற்றும் ஐசோலேசன் (Isolation)  முறைப்படி சிகிச்சை அளிக்கப்படும். இன்றுவரை நிபா தீநுண்மதிற்கு பிரத்யேக மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  பொதுவாக ரைபாவாரின் (Ribavarin) மாத்திரைகளும், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுமே அளிக்கப்படுகின்றன. உணவு உண்ண முடியாதவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தும், நீர்ச்சத்தும் டிரிப்ஸ் (IV drips) மூலமாக அளிக்கப்படும். சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், முழுதாகத் தங்களை மூடியிருக்கும் சிறப்பு உடைகளையே அணிய வேண்டும். தலைக்கு தொப்பி, கண்களை முழுதாக மூடிய கண்ணாடிகளை அணியவேண்டியது அவசியம். இவர்கள் கைக்கு கையுறையும், காலில் செருப்புகளையும் சேர்த்து மூடும் வகையிலான உறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும். இவர்கள் கட்டாயமாக `n95’ முகமூடியை காற்றுப் புகாத வண்ணம் அணிந்திருக்க வேண்டும். இவர்கள், இந்த வைரஸ் தாக்கிய நோயாளிகளைப் பரிசோதித்துவிட்டு வெளியே வந்தவுடன், அனைத்தையும் கழற்றி சுத்தம் செய்வததற்கு அனுப்பிவிட வேண்டும். அதே மருத்துவமனையிலிருக்கும் மற்றவர்கள் தற்காப்புக்காக மூன்று அடுக்குள்ள அறுவைசிகிச்சை முகமூடியை (Triple layered surgical mask) அணிந்துகொள்ளலாம்.

எனிபா தீநுண்மம் திடீர் தோற்றமும் (சிவப்பு குறிகள்–என்ட்றா தீநுண்மம்; நீல குறிகள்–நிபா தீநுண்மம்) பழ வௌவால் எனிபா தீநுண்ம தொகுதிகளின் பரவலும் (சிவப்பு நிழற்கோடு–என்ட்றா தீநுண்மம் ; நீல நிழற்கோடு–நிபா தீநுண்மம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. Li, Y; Wang, J; Hickey, AC; Zhang, Y; Li, Y; Wu, Y; Zhang, Huajun; Han, Zhenggang et al. (December 2008). "Antibodies to Nipah or Nipah-like viruses in bats, China [letter"]. Emerging Infectious Diseases 14 (12): 1974–6. doi:10.3201/eid1412.080359. பப்மெட்:19046545. 
  2. Sawatsky (2008). "Hendra and Nipah Virus". Animal Viruses: Molecular Biology. Caister Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-904455-22-6. http://www.horizonpress.com/avir. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிபா_தீநுண்மம்&oldid=2749657" இலிருந்து மீள்விக்கப்பட்டது