குழலி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழலி அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். [1] இவருக்கு கோயில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் என்று கிராமத்தில் அமைந்துள்ளது. வயலின் அறுவடைக் காலத்தில் இரவுக் காவலுக்கு இருந்து, அங்கு கொள்ளையடித்த இருவரால் படுகொலை செய்யப்பட்ட பெண்ணை குழலி அம்மன் என்று வழிபடுகின்றனர்.

தொன்மம்[தொகு]

வேலங்காடு எனும் ஊரைச் சேர்ந்த பெரியமாடன் - மாடத்தி தம்பதிகள் செய்துங்கநல்லூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அய்யர் எனும் நிலக்கிழாருக்கு வேலை செய்து வந்தனர். அறுவடைக்காலத்தில் வயலுக்கு காவலுக்கு செல்லும் பெரியமாடன் உடல்நலமில்லாமல் இருந்தார், அதனால் அவரை மட்டும் தனியே அனுப்பாது, தானும் வேல்கம்புடன் காவலுக்கு வந்தாள் மாடத்தி. பெரியமாடன் உறங்கிவிட்டான். அவனை தொந்தரவு செய்யாமல் தனியாக காவல்காத்தாள் மாடத்தி. நள்ளிரவில் கதிரருக்கும் சத்தம் கேட்டு, அத்திசைக்கு வந்தாள். அங்கு பலவேதம், செல்லையா என்ற இருவர் கதிரை அறுத்துக் கொண்டிருந்தனர். அதனை கண்டித்தாள். மாடத்தி நாளைக்கு பஞ்சாயத்தில் தங்களை திருடர்கள் என பிடித்துக் கொடுத்துவிடுவாள் என பயந்து மாடத்தியை தள்ளிவிட்டு கழுத்தினை அறுத்தனர்.

மாடத்தி தலையை வயலிலும், முன்டத்தினை வாய்க்காலிலும் போட்டு சென்றனர். காலையில் மேகலிங்க மூப்பனார் மனைவியுடன் அறுவடை செய்யும் போது, குலவை சத்தம் கேட்டது. அவர்கள் மாடத்தியின் தலையைக் கண்டு பயந்தார்கள். சீவலப்பேரி ஊரில் குறி கேட்டபோது நிகழ்ந்தவைகள் அனைத்தும் தெரிந்தன. மேகலிங்க மூப்பனார் தன்னுடைய சொந்தங்களான ஐந்து குடும்பத்தினருடன் இணைந்து மாடத்தி அம்மனுக்கு கோயில் எழுப்பினார்கள். குலவை ஓசை கேட்டமையால் குலவை அம்மன் என்று அழைத்தனர். பின்நாட்களில் அது குழலி அம்மன் என்று மறுவியது.

ஆதாரங்கள்[தொகு]

  1. தினகரன் ஆன்மிக மலர் 05-03-2016 குறைகளை நிவர்த்தி செய்வாள் குழலி அம்மன் பக்கம் 10-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழலி_அம்மன்&oldid=3847209" இலிருந்து மீள்விக்கப்பட்டது