துலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லால் கட்டப்பட்ட ஆடுகாலின்மீது தாங்கப்பட்டுள்ள பனை மரத்தாலான துலா.

துலா அல்லது ஏற்றம் என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும்.

அமைப்பு[தொகு]

இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும்.

அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு அல்லது மூங்கில் கம்பை ஒன்றை ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலா&oldid=2893078" இலிருந்து மீள்விக்கப்பட்டது