ரைரங்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரைரங்பூர் என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநில தலைநகர் புவனேசுவரத்தில் இருந்து சுமார் 287 கிலோமீட்டர் தொலைவிலும், பாரிபாடா மாவட்ட தலைமையகத்திலிருந்து 82 கிலோமீட்டர் தொலைவிலும், ஜம்சேத்பூரில் இருந்து 73 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கட்காய் (சுலைபத்) அணை மற்றும் சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் ஆகியவை நகரிற்கு அருகில் காணப்படும் இடங்களாகும். இவ்விடங்கள் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ரைரங்பூர் ஒடிசாவின் குறிப்பிடத்தக்க சுரங்கப் பகுதியாகும். இங்கு கோருமாஹிசானி, படம்பஹார், சுலைபட் சுரங்கங்கள் இரும்புத் தாதுக்களைக் கொண்டுள்ளன.

புவியியல்[தொகு]

ரைரங்க்பூர் 22.27 ° வடக்கு 86.17 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 248 மீ (814 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

ரைரங்க்பூர் பாமங்காட்டி மன்னர் மாதப்தாஸ் நரேந்திர மொஹாபத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. 1878 ஆம் ஆண்டில் பாமங்காட்டி மன்னர் கிருஷ்ணா சந்திர பஞ்ச்தியோவின் ஆட்சியில் இருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1918 ஆம் ஆண்டில் ரைரங்பூர் அதிகாரப்பூர்வமாக ரைரங்க்பூர் கார் எனப் பெயரிடப்பட்டது.

1960 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று 15 வார்டுகளுடன் ரைரங்க்பூர் கவுன்சில் (என்ஏசி) உருவாக்கப்பட்டது.

மேலும் 2014 ஆம் ஆண்டு மே 1 அன்று ஒடிசா அரசாங்கத்தால் ரைரங்பூர் நகராட்சி உருவாக்கப்பட்டது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி   ரைரங்க்பூரில் 47,294 மக்கள் வசிக்கின்றனர். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 52% வீதமாகவும், பெண்கள் 48% வீதமாகவும் காணப்படுகின்றனர். ரைரங்க்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 72% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 79% வீதமாகவும், மற்றும் பெண்களின் கல்வியறிவு 65% வீதமாகவும் காணப்படுகின்றது. ரைரங்பூரின் மக்கட் தொகையில் 12% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[2]

பொருளாதாரம்[தொகு]

ஜார்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் (டாடானகர்), மேற்கு வங்காளத்தின் துர்காபூர், கோருமஹிஷானி, பதம்பஹார் மற்றும் சுலைபாட்டில் உள்ள இரும்பு தாது சுரங்கங்களுக்கு இடையிலான தொடர்பு மையமாக ரைரங்க்பூர் செயற்படுகின்றது. இரும்பு தாது கனிமங்கள் நிறைந்த மலைகளால் ரைரங்க்பூர் சூழப்பட்டுள்ளது. ஆசியாவின் முதல் இரும்புத் தாது சுரங்கங்களான கோருமாஹிசானி, சுலைபட் மற்றும் பதம்பஹார் (டாடா ஸ்டீலின் தாய் சுரங்கங்கள்) இங்கு உள்ளன. பெரோவனேடியம் ஆலை அமைப்பதற்கான முதல் சோதனை சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் மயூர்பஞ்சு மகாராஜாவால் செய்யப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான தொன் இரும்பு தாது மாநிலத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெரும்பான்மையான மக்கள் நெற்பயிர்ச் செய்கையை சார்ந்துள்ளனர். வேளாண்மை அவர்களின் முக்கிய ஆதாரமாக அல்லது மாற்று வருமான ஆதாரமாக காணப்படுகின்றது. கராக்காய் (சுலைபட்) அணை மற்றும் பாங்க்பாத் அணை ஆகியவை சாகுபடி செய்யும் சில நிலங்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு உதவுகின்றன. ரைரங்க்பூரில் பழமையான மற்றும் மிகப்பெரிய சால் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை அமைந்துள்ளது. இது பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. சால் விதைகள் உள்ளூரில் காடுகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Kuchaiburi, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
  2. "Census of India". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்[தொகு]

இணையத்தளத்தில் ரைரங்பூர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைரங்பூர்&oldid=3588062" இலிருந்து மீள்விக்கப்பட்டது