ரா. கனகலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரா. கனகலிங்கம்

ரா. கனகலிங்கம், மகாகவி பாரதியாரின் அன்புக்கு பாத்திரமானவர். ஆதி திராவிடர் வகுப்பில் பிறந்த கனகலிங்கத்திற்கு, 1908-இல் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த போது அறிமுகம் ஆனார். பாரதியார் கனகலிங்கத்திற்கு காயத்திரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவித்தார். பாரதியாரின் மறைவிற்குப் பின் அவரது வாழ்க்கை குறிப்புகள் கொண்ட என் குருநாதர் பாரதியார் எனும் நூலை ரா. கனகலிங்கம் எழுதி 1947-இல் வெளியிட்ட்டார். இந்நூலுக்கு எஸ். வையாபுரிபிள்ளையும், பி.ஶ்ரீ. ஆசார்யாவும் முன்னுரை எழுதியுள்ளனர்.[1]

பாரதியார் குறித்த கனகலிங்கத்தின் சில குறிப்புகள்[தொகு]

முதலாம் உலகப்போரின் போது கனகலிங்கம் எழுத்தர் வேலைக்காக மெசொப்பொத்தேமியாவிற்கு சென்று விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதியார் சென்னைக்குப் போய் விடுகிறார். பணிக்காலம் முடிந்து புதுச்சேரி திரும்பிய கனகலிங்கம் தானும் சென்னைக்குப் போய் விடுகிறார். சென்னையில் அக்காலத்தில் ஹரிஜனங்களிடையே ‘திராவிடர்’, ‘ஆதி திராவிடர்’ அரசியல் மும்முரமாக இருந்ததையும் அக்கூட்டங்களுக்குத் தான் போனதையும், அங்கு எங்குமே பாரதியாரைக் காணாததையும் கனகலிங்கம் பதிவுச் செய்கிறார். ஒரு சமயம் பாரதியாரை கனகலிங்கம் கண்டு பிடித்து விடுகிறார். சில சந்திப்புகளுக்குப் பிறகு கனகலிங்கம் தன் நண்பர் சார்பில் பாரதியிடம் “எங்கள் சமூகத்தாரை திராவிடர் என்று அழைப்பதா, ஆதிதிராவிடர் என்றழைப்பதா” என வினவுகிறார். பாரதி அதற்கு, “அடேய் எனக்கு ஜாதியும் கிடையாது, சுண்டைக்காயும் கிடையாது. என்னிடம் ஆதித்திராவிடர், அநாதித்திராவிடர் என்று விவகாரத்தை ஏன் கொண்டு வந்தாய்” என்றாராம், ‘வேடிக்கையாக’. இல்லை ஏதாவது சொல்லுங்கள் என்று அழுத்திக் கேட்டதற்குப் பாரதி தனக்கு “திராவிடர், ஆதி திராவிடர், ஆரியர், என்ற வேற்றுமையும் பிடிக்காது; எல்லா மக்களும்” சமம் என்று சொல்லச் சொல்கிறார்.

பாரதியார் எழுதுவதற்குக் காகிதம் வாங்க தன்னிடம் உள்ள பழைய செய்தி தாள்களை விற்று விடுவாராம். வீட்டு மாடியில் வெற்று மேல் உடம்போடு தலைமுடி காற்றில் அசைய சக்தி பூஜை செய்தோ அல்லது பிரமைப் படித்து உலவியோ அயலாரை பாரதி பயமுறுத்தியிருக்கிறார்.

புதுச்சேரி தேர்தல் காலத்தில் தோட்டி இனத்தைச் சேர்ந்த தம்பலாவின் வீடு தேடிப் போய்ப் பாரதி இரண்டு வார்த்தைகள் பேசுகிறான். “யாரையும் ஒதுக்குதல் கூடாது. முரடராயிருந்தாலும். பேசினால் தான் அவர்களை நம் பக்கம் இழுக்க முடியும்” என்று கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்கிறார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._கனகலிங்கம்&oldid=3087095" இலிருந்து மீள்விக்கப்பட்டது