மணிமுத்தாறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமுத்தாறு அணை என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. மழைக்காலத்தில் பெருவெள்ளமாக இது பாய்கிறது.

இந்த நீர் மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது, சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணை. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.

அணையில் தேக்கப்படும் நீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் பெருங்கால் பாசனம் மூலம் சுமார் 2600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. அவை வைராவிகுளம் ஜமீன் சிங்கம்பட்டி அயன் சிங்கம்பட்டி தெற்கு பாப்பான்குளம் பொட்டல் மூலச்சி ஆகும். அணை கட்டும் முன்பு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசிற்கு நன்கொடையாகவும் கொடுத்தனர். இந்தபெருங்கால் பாசன கால்வாய் மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உட்பகுதியிலிருந்து ஆரம்பமாகிறது.ஜூன் 1ஆம் தேதி கார் சாகுபடி செய்ய தண்ணீர் திறக்கப்படும் . தவிர மேற்கண்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அ.அருள்தாசன் (20015 ஆகத்து 19). "பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு: படியளக்கும் அணைகள் பாதுகாக்கப்படுமா?". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமுத்தாறு_அணை&oldid=2930478" இலிருந்து மீள்விக்கப்பட்டது