மகாபலி சக்கரவர்த்தி
மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். இந்து புராணங்களின்படி இவர் பக்த பிரகாலதனின் பேரன் ஆவார். மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு முதல் இரண்டடியால் பூமியையும், வானத்தையும் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து பூமியில் அமிழ்த்தி அவரை வதம் செய்தார். மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.