பிரான்சிஸ்கோ கோயா
| பிரான்சிஸ்கோ கோயா Francisco Goya |
|
கோயா தன்னைத்தானே வரைந்தது. |
|
| இயற்பெயர் | பிரான்சிஸ்கோ ஜோஸ் டி கோயா y லூசியெண்ட்ஸ் |
| பிறப்பு | மார்ச்சு 30, 1746 ஸ்பெயின் |
| இறப்பு | ஏப்ரல் 16 1828 (அகவை 82) பொஹுடூ, பிரான்ஸ் |
| நாடு | ஸ்பானியர் |
| துறை | ஓவியம், அச்சாக்கம் |
| படைப்புகள் | La maja desnuda, 1800 La maja vestida, 1803 The Second of May 1808, 1814 |
பிரான்சிஸ்கோ கோயா (Francisco Goya, மார்ச் 30, 1746 - ஏப்ரல் 16, 1828) ஸ்பெயினின் அரகன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஓவியர். கோயா ஸ்பானிய அரண்மனை ஓவியராக இருந்ததுடன் ஒரு வரலாற்று எழுத்தாளராகவும் இருந்தார். இவர் பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. இவ்வாறாக இவருடைய ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களில் மனே, பிக்காசோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
[தொகு] வரலாறு
[தொகு] இளமைக்காலம்
கோயா, அரகோன் இராச்சியத்தில் இருந்த, ஸ்பெயினின் ஃபியுவெண்டிட்டொடொஸ் என்னுமிடத்தில், 1746 ஆம் ஆண்டில் ஜோஸ் பெனிட்டோ டி கோயா என்பவருக்கும், கிரேசியா டி லூசியெண்ட்ஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் தனது இளமைக் காலத்தில் ஃபியுவெண்டிட்டொடொஸ்சில் உள்ள தனது தாயாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இவரது தந்தையார் [[[தங்கம்|தங்க]] முலாம் பூசும் தொழில் புரிந்து வந்தார். 1749 ஆம் ஆண்டளவில் சரகோசா என்னும் நகரில் ஒரு வீட்டை வாங்கிய இவரது குடும்பத்தினர் சில காலத்தின் பின் அங்கே குடிபுகுந்தனர். கோயா அங்கே எஸ்க்கியுவெலாஸ் பியாஸ் என்னும் இடத்திலுள்ள பள்ளியில் பயின்றார். இவர் அங்கே மாட்டின் சப்பேட்டர் (Martin Zapater) என்பவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவருடன் கோயா பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த கடிதப் போக்குவரத்துக்கள், கோயாவின் வரலாற்றை எழுதுவதற்கான பெறுமதி மிக்க சான்றுகளாகத் திகழ்கின்றன. 14 ஆவது வயதில் கோயா, ஜோஸ் லூஜான் என்னும் ஓவியரிடன் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார்.
இவர் பின்னர் மாட்ரிட்டுக்குச் சென்று அங்கே ஓவியம் பயின்றார். ஸ்பானிய அரச குடும்பத்தினரின் விருப்பத்துக்குரியவரான அன்டன் ராபேல் மெங்ஸ் என்னும் ஓவியரும் இவருடன் கூடப் படித்தார். கோயா தனது ஆசிரியருடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை, பரீட்சையிலும் போதுமான அளவு வெற்றிபெறவில்லை. 1763 இலும் 1766 இலும் ராயல் அக்கடமி ஒப் பைன் ஆர்ட்ஸ் க்கு அநுமதிக்காக விண்ணப்பித்தும் இவருக்கு அங்கே இடம் கிடைக்கவில்லை.
பின்னர் அங்கிருந்து ரோமுக்குப் பயணப்பட்ட கோயா, 1771 ஆம் ஆண்டில் பார்மா (Parma) நகரம் ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வாண்டிலேயே அவர் சரகோசாவுக்குத் திரும்பினார்.