பிரசிடென்ட் நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரசிடென்ட் நாயனார் (1889-1954) குமரிமாவட்டத் தலைநகர் நாகர்கோவிலின் வடசேரி பகுதியில் ஆறுமுகப்பெருமாள்-கேசவம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தமது 14 வயதில் பள்ளிபடிப்பை சிறப்பாக முடித்து, திருவனந்தபுரத்தில் கல்லூரிப் படிப்பினைத் தொடர்ந்தார்கள். பட்டப் படிப்பினை முடித்து பின் சட்டப் படிப்பினையும் முடித்தார். அப்போதைய திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் உயர்பதவியில் அமர்ந்தார். நூலகங்களை நன்கு பயன்படுத்தி தன் அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார். இந்த காலத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது.அவரது மணவாழ்க்கை சிறிது காலமே. துணை இழந்த அவர் தமது பதவியை விடுத்து நாகர்கோவிலுக்கே வந்து மறுமணம் செய்து கொள்ளா மலே பொது வாழ்வில் தம்மை அர்பணித்துக் கொண்டார். அவர் பிறந்த வடசேரிப் பகுதியில் தொடக்கப்பள்ளிகூடம் இல்லாத நிலை.பள்ளிக்கூடம் அமைக்க ஒருகுழு அமைக்கப்பட்டது. அதற்கு தலைவராக இருந்து,பல எதிர்ப்புகளுக்கிடையே இன்று சிறப்பாக நடைபெறும் எஸ்.எம்.ஆர். வி.மேல்நிலைப் பள்ளி உருவாக பெரிதும் காரணமாக இருந்தார். இப்பள்ளி 1919 ல் தொடங்கப்பட்டது முதல் 1943 வரை அதன் மேலாளராக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். அவர் பெயரில் பெரிய நினைவுக் கட்டிடம் ஒன்று எழுப்ப பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாகர்கோவில் பகுதியினை சிறப்பாக நடத்த அரசு நகர மேம்ம்பாட்டுக் குழுவினை ஏற்படுத்தியது.அதன் தலைவராக நீதிபதி திரு.சிவசங்கரன் பிள்ளையும் துணைத் தலைவராக திரு.நாயனார் அவர்களும் அரசால் நியமிக்கப் பட்டார்கள். தலைவர் மாற்றலாகி செல்லவே நாயனார் அவர்களே பொறுப்பினை ஏற்றார். 1920-ல் நகரசபையாக ஆனது .நடைபெற்ற தேர்தலில் போட்டி இன்றி தலைவரானார்.அவரது பணியினைக் கண்ட மக்கள் மூன்றுமுறை அவரை தலைவராக தேர்ந்து எடுத்தனர். அப்போது தலைவர் பதவி பிரசிடென்ட் என்று அறியப்பட்டது.அதுமுதல் பிரசிடென்று நாயனார் என்றே அறியப்படலானார். அவரது பணிகாலத்தில் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது.வடசேரி பகுதியில் குழந்தைகள் நல மையத்தினை ஏற்படுத்தினார்கள். சாலைகளிலும் வீதிகளிலும் தெருவிளக்கு அமைத்தார்கள். நகரைச் சுத்தமாக வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பலசமயங்களிலும் தன் கைப்பொருளை செலவிட்டார். அனைத்து இன மக்களிடமும் நல்லுறவு நிலவியது. கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவரது நண்பராவார். தனது விடாமுயற்சியால் பொதுமக்களின் ஒத்துளைப்புடன் அவருக்கு வடசேரிப்பகுதியில் ஒரு மணிமண்டபம் அமைத்தார்கள். இன்று அது மாவட்ட மைய நூலகமாக சிறப்பாக செயல் படுகிறது. கல்விப் பணிக்காகவும் பொது நலனுக்காகவும் தன் வாழ்க்கையை ஒப்படைத்தவர். ஓசையில்லாமல் பணியாற்றிய அவரை இன்று பலர்அறியமாட்டார்கள்.

ஆதாரம் வெள்ளிவிழா மலர்-சாலியர் மகாஜன சங்கம், நாகர்கோவில் 1999 அவரை நேரில் அறிந்தவர்கள் மூலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசிடென்ட்_நாயனார்&oldid=1427541" இலிருந்து மீள்விக்கப்பட்டது