பிக்ராமி நாட்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிக்ராமி மற்றும் தேசி ஆண்டு ( Bikrami) என்பது விக்கிரமாதித்ய மன்னர் பெயரால் தொடங்கும் நாட்காட்டி ஆண்டு ஆகும். தேசி ஆண்டுகள் அல்லது பஞ்சாபி மகினி என்ற பெயர்களாலும் அறியப்படும் இவ்வாண்டு கி.மு 57 இல் தொடங்குகிறது. சூரியன், சந்திரன் என்ற இரண்டு கூறுகளால் இந்த நாட்காட்டி ஆக்கப்பட்டுள்ளது. சந்திர மாதமான சேட்டாரில் (சைத்ரா) இந்நாட்காட்டி ஆண்டு தொடங்கி 365 நாட்களைக் கொண்டிருக்கிறது. சேட்டார் மாதம் என்பது மார்ச்சு மாதம் அல்லது வசந்தகாலத்தில் தொடங்கும் ஒரு மாதமாகும். இந்தியாவின் பல மாநிலங்களில் சேட்டார் மாதத்தின் தொடக்கத்தை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். சிந்து மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் புத்தாண்டு சேட்டார் மாதத்தில் தொடங்குகிறது.

ஏப்ரல் மாத காலத்தில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் சூரிய ஆண்டு தொடங்குகிறது. இந்தியாவின் சில மாநிலங்களின் நாட்காட்டி சூரியப் புத்தாண்டில் இருந்து ஆரம்பமாகிறது. பஞ்சாபில் வைசாக் மாதத்தின் முதல் நாளான வைசாக்கி நாளில் பஞ்சாபின் சூரியப் புத்தாண்டு ஆரம்பமாகிறது. வங்காளத்திலும் இதே நாளில் போக்லாபோசாக் என்ற பெயரில் புத்தாண்டு ஆரம்பமாகிறது.

ஒன்பது சூரிய மாதங்கள் ஒவ்வொன்றும் 30 நாட்களால் ஆனவையாகும். வைசாக் மாதம் 31 நாட்களையும் யெத், அசதா மாதங்கள் 32 நாட்களையும் கொண்டிருக்கின்றன. இந்நாட்காட்டி பாரம்பரியமாக இந்தியா மற்றும் பாக்கித்தானில் பயன்பாட்டில் இருந்தது. பிற்காலத்தில் இப்பயன்பாடு இசுலாமிய நாட்காட்டி, நானாக்சாகி நாட்காட்டி மற்றும் கிரிகோரியன் நாட்காட்டி உள்ளிட்ட மற்ற நாட்காட்டிகளுக்கு மாற்றமடைந்தது[1]

சூரிய நாட்காட்டி[தொகு]

கீழே உள்ள அட்டவணையில் சூரிய மாதமான வைசாக் மாதத்தில் இருந்து நாட்காட்டி தொடங்குகிறது. மாதங்களின் பெயர்கள் வரிசையாக உள்ளன.

வ.எண். சூரிய மாதத்தின் பெயர் கால அளவு
1. வைசாக் (பேசாக்) ஏப்ரல் நடுவிலிருந்து மே நடு வரை
2. யேத் மே நடுவிலிருந்து சூன் நடு வரை
3. அர் சூன் நடுவிலிருந்து சூலை நடு வரை
4. சாவன் சூலை நடுவிலிருந்து ஆகத்து நடு வரை
5. பாதோன் (பத்ரே) ஆகத்து நடுவிலிருந்து செப்டம்பர் நடு வரை
6. அசூய் (அசுன்) செப்டம்பர் நடுவிலிருந்து அக்டோபர் நடு வரை
7. கட்டேக் (கட்டூன்) அக்டோபர் நடுவிலிருந்து நவம்பர் நடு வரை
8. மகர் நவம்பர் நடுவிலிருந்து திசம்பர் நடு வரை
9. போ திசம்பர் நடுவிலிருந்து சனவரி நடு வரை
10. மாக் சனவரி நடுவிலிருந்து பெப்ரவரி நடு வரை
11. பகன் பெப்ரவரி நடுவிலிருந்து மார்ச் நடு வரை
12. சேடார் மார்ச் நடுவிலிருந்து ஏப்ரல் நடு வரை

ஒரு நாள் என்பது 8 பகற் ( சாமம் ) களைக் கொண்டது. ஓவ்வொரு பகற்றும் தற்கால நேரங்காட்டியின்படி மூன்று மணி நேரத்திற்குச் சமமானது ஆகும். இப்பகற்களின் பெயர்கள் பின்வரும் வரிசையில் அமைகின்றன.

  1. .சாயர் வேளை அல்லது சிவர் வேளை: காலை 6 மணி முதல் 9 மணி வரை
  2. .தாம்மி வேளை: முற்பகல் 9 மணி முதல் 12 மணி வரை
  3. .பாய்சீ வேளை: பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை
  4. .தீகர் வேளை: பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை
  5. .நிமாசீன் அல்லது நமாசன் வேளை: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
  6. .குப்டெயின் வேளை: இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
  7. .ஆத் ராத் வேளை: நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை
  8. .சார்கீ வேளை : விடியலுக்கு முன்னரான அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை

வேளா என்ற சொல் பஞ்சாபி மொழியில் வைலா என்று உச்சரிக்கப்படுகிறது. இதனுடைய பொருள் நாளின் நேரம் என்பதாகும். அதேபோள ஆத் என்றால் அரை என்பது பொருளாகும். தௌபகற் என்பது பிற்பகலையும் மற்றும் சிகார்தௌபகற் என்பது சூரியன் தலைக்கு மேலாக உள்ள உச்சிப் பொழுதையும் குறிக்கின்றன.

சந்திர நாட்காட்டி[தொகு]

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்த நாளில்[2] தொடங்கும் 2015/2016 ஆம் ஆண்டின் சந்திர நாட்காட்டி பஞ்சாபி நாட்காட்டியில்[3] உள்ளவாறு கீழே தரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அமாவாசை நாட்காட்டியில் ஒரு புதிய சந்திர ஆண்டு சேடார் மாதத்தின் அமாவாசைக்கு அடுத்தநாளில் தொடங்குகிறது என்ற அடிப்படையில் அமைக்கப்படுகிறது. 2015/2016 ஆம் ஆண்டிற்கான புதிய மாதங்களுக்கான தேதிகள் அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வ,எண். சந்திர மாதத்தின் பெயர் தேதி
1. சேடார் 17 மார்ச்சு 2014
2. வைசாக் (பேசாக்) 16 ஏப்ரல்l 2014
3. யேத் 15 மே 2014
4. அர் 14 சூன் 2014
5. சாவன் 13 சூலை 2014
6. பாதோன் (பத்ரே) 11 ஆகத்து 2014
7. அசூய் (அசுன்) 10 செப்டம்பர் 2014
8. கட்டேக் (கட்டூன்) 9 அக்டோபர் 2014
9. மகர் 7 நவம்பர் 2014
10. போ 7 திசம்பர் 2014
11. மாக் 6 சனவரி 2015
12. பகன் 4 பிப்ரவரி 2015

ஒரு சந்திர ஆண்டு என்பது 12 மாதங்களைக் கொண்டது ஆகும். ஒரு சந்திர மாதத்தில் இரண்டு அரை மாதங்கள் உண்டு. மங்கலகரமான அரை மாதம் அமாவசைக்கு அடுத்தநாள் தொடங்குகிறது. இக்காலத்தை சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை என்கிறார்கள். அமங்கலமான[4] அரை மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்குகிறது[5]. இதை கிருட்டிண பட்சம் அல்லது தேய்பிறை என்கிறார்கள். ஒவ்வொரு சந்திர நாளும் திதி என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 30 திதிகளால் ஆனவை. இவை 20 முதல் 27 மணி வரை மாறுபடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "NanakShahi Calendar Controversy". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  2. http://moongiant.com/Full_Moon_New_Moon_Calendar.php
  3. http://www.drikpanchang.com/faq/faq-ans8.html
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
  5. Mughal, Muhammad Aurang Zeb (2014-10-20). "Calendars Tell History: Social Rhythm and Social Change in Rural Pakistan". History and Anthropology 25 (5): 592–613. doi:10.1080/02757206.2014.930034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0275-7206. http://dx.doi.org/10.1080/02757206.2014.930034. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்ராமி_நாட்காட்டி&oldid=3638601" இலிருந்து மீள்விக்கப்பட்டது