திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்த கட்டிடங்களில் தூண்கள், அமைப்பியல் அடிப்படையிலும், அழகியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புக்களாகும். திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் இதற்கு விதிவிலக்கானவை அல்ல.

இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் திராவிடக்கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பொதுவாக கி.பி 600 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டவை ஆகும். தமிழகத்தில் கற்களால் கட்டிடங்கள் அமைக்கத் தொடங்கிய காலப்பகுதியுடன் இது ஒத்திருக்கின்றது எனலாம். இதற்கு முன்னர் கட்டிடங்கள் மரம், செங்கல், சுதை முதலியவற்றால் அமைந்திருந்தன. இக்கட்டிடங்களில் தூண்கள் பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்டிருக்கக்கூடும். கட்டிடங்கள் கற்களால் அமைக்கத் தொடங்கியபோது, மரத்தில் அமைக்கப்பட்டிருந்தவாறே கல்லிலும் பிரதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே திராவிடக் கட்டிடக்கலைப் பாணியின் அடிப்படைகள், சிறப்பாகத் தூண் வடிவமைப்புக்கள், கட்டிடங்கள் மரத்தினால் கட்டப்பட்ட காலங்களிலேயே உருவாகியிருக்கக்கூடும்.

கால அடிப்படையில் தூண்களின் வடிவமைப்புக்கள்[தொகு]

பல்லவர் காலச் சிம்மத்தூண், மாமல்லபுரம்

திராவிடக் கட்டிடக்கலை தோன்றி வளர்ந்த காலகட்டம், கி.பி 600 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 17 ஆம் நூற்றாண்டின் முடிவுவரை எனக் கூறலாம். இதன் வளர்ச்சிக் கட்டங்களைப் பல்வேறு வம்சங்களின் ஆட்சிக் காலங்களோடு தொடர்புபடுத்தி வகைப்படுத்துவது வழக்கம். இக்கட்டங்கள்:

  1. பல்லவருக்கு முந்திய காலம்,
  2. பல்லவர் காலம்,
  3. சோழர் காலம்,
  4. பாண்டியர் காலம்,
  5. விஜயநகரக் காலம்,
  6. நாயக்கர் காலம்
கி.பி 600 க்கு முன்.

கி.பி 600 - 900
கி.பி 900 - 1150
கி.பி 1150 - 1350
கி.பி 1350 - 1565
கி.பி 1600 க்குப் பின்னர்

என்பனவாகும். தூண்களின் வடிவமைப்பும் இக் காலகட்டங்களினூடாக வளர்ச்சியடைந்து வந்ததை அவதானிக்கலாம். கட்டிடங்களின் காலத்தைக் கணிப்பதற்குத் தூண்களின் வடிவமைப்புப் பெரிதும் உதவுகின்றது.

தூண்களின் உறுப்புக்கள்[தொகு]

தூண்களும் பல்வேறு உறுப்புக்களால் ஆனவை. தமிழ் நாட்டில், மாதிரிக்காகக் கிடைக்கக்கூடிய மிகப் பழைய திராவிடக் கட்டிடக்கலைத் தூண்கள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. இத்தொடக்ககாலக் கற்றூண்கள் மிகவும் எளிமையானவை. மிகவும் அடிப்படையான குறைந்த அளவு உறுப்புக்களையே கொண்டிருந்தன. காலப் போக்கில் திராவிடக் கட்டிடக்கலை முதிர்ச்சியடைந்தபோது தூண்கள் சிக்கலானவையாகவும், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாகவும், பல உறுப்புக்களை உடையவையாகவும் காணப்பட்டன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]