சாம் பிரதீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியநாயகம் சாம் பிரதீபன் இலங்கையில் நாடக, மற்றும் ஊடகக் கலைஞர் ஆவார். இவர் நாடகம், கூத்துக்கலை, இலக்கியம், விமர்சனம், ஆய்வு, கவிதை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு, தொலைக்காட்சி நாடக இயக்கம், நடிப்பு, என பல துறைகளிலும் பன்முக ஆளுமை கொண்டவர்.

யாழ் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவரான சாம் பிரதீபன் இலங்கைத் திருமறைக் கலாமன்றத்தின் முன்னாள் பிரதி இயக்குனராகப் பணியாற்றினார். நவீன நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், வார்த்தைகளற்ற நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், தெருவெளி நாடகங்கள், ஓராள் நாடகங்கள், சுத்துருவ நாடகங்கள், நாட்டுக் கூத்துக்கள் எனப் பலவற்றை எழுதி நெறிப்படுத்தியுள்ளதோடு புலம் பெயர் வாழ்வை மையப்படுத்தியதாக 250 இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.

"ஆதாரம்" "கலைமுகம்" போன்ற பொருளாதார கலை இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் "ஏர்முனை" "உழைப்போம் உயர்வோம்" என்ற பொருளாதார மேம்பாடு சார்ந்த வானொலி நிகழ்ச்சிகளையும் சமுக விழிப்புணர்வு சார்ந்த வானொலி நாடகங்களையும் 90 களின்நடுப்பகுதிகளில் எழுதி தயாரித்துள்ளார்.

ஜேர்மனிய நாடகவியலாளரான "கிறிஸ்ரல் ஹொப்வ்மன்" மற்றும் லண்டன் மஞ்சஸ்ரர் பல்கலைக்கழக நாடக அரங்கியல் பீடாதிபதி "ஜேம்ஸ் தொம்சன்" ஆகியோரிடம் நாடகப் பிரதியாக்கம் மற்றும் பிரயோக அரங்க முறைமை போன்ற  நாடகவியல் நுட்பங்களை கற்றுத் தேர்ந்துள்ளார்.

திருமறைக் கலாமன்றத்தினூடாக இலங்கையின் நாடளாவிய ரீதியில் பல நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நவீன நுட்பங்களோடு பயிற்றுவித்து பல இளைஞர்களை நாடக ஈடுபாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றார்.

90களின் இறுதிப் பகுதியில் இருந்து  நாடு கடந்த ரீதியில் சர்வதேச அளவில் பயணம் செய்து தனது பல கலை வெளிப்பாடுகளை அவைக்காற்றுகைகளாக நிகழ்த்தியிருக்கிறார். பிரான்ஸ் ஜேர்மனி நெதர்லாந்து டென்மார்க் நோர்வே லண்டன் இத்தாலி சுவிற்சலாந்து கனடா அமெரிக்கா அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் நாடகக் கலையினையும் கூத்துக் கலையினையும் காவிச் சென்று அவைக்காற்றுகை செய்துள்ளதோடு நாட்டுக் கூத்தின் தேசிய மயப்படுத்தல் பற்றியதான பல பரீட்சாத்த முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

சாம் பிரதீபன் படைப்புகள் :

சாம் பிரதீபன் கவிதைகள்

சாம் பிரதீபன் கட்டுரைகள்

விருதுகள்[தொகு]

"நீதியின் இருக்கைகள்" என்ற இவருடைய கவிதை நாடகத் தொகுப்பு நூலுக்கு 2000ம் ஆண்டு இலங்கை சாகித்திய விருது கிடைத்திருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_பிரதீபன்&oldid=2712741" இலிருந்து மீள்விக்கப்பட்டது