குறை ஒன்றும் இல்லை (பாடல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறை ஒன்றும் இல்லை என்பது திருவேங்கடக் கடவுள் மீது பாடப்பட்ட ஒரு தமிழ்ப்பாடல். இப்பாடலை எழுதியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆவார். தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், ராக மாலிகையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது.

வரலாறு[தொகு]

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியால் எழுதப்பட்ட ஒரே ஒரு பாடல் இதுவாகும். தமிழறிஞர் மீ.ப. சோமசுந்தரம் ( மீ.ப.சோமு) அவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட இந்தப் பாடல் 1967-இல் ‘கல்கி’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தப் பாடலுக்கு இசை வடிவம் தந்தவர் கடையநல்லூர் வெங்கட்ராமன் ஆவார். மறைந்த இசை மேதை பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியால் 1979/80 -இல் முதலில் பாடப்பட்ட இப்பாடல், பிறகு இசையுலகில் மிகப் பிரபலமானது.[1]

பாடல் வரிகள்[தொகு]

பல்லவி (ராகம்: சிவரஞ்சனி)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

அனுபல்லவி (ராகம்: சிவரஞ்சனி )

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்1 (ராகம் சிவரஞ்சனி)

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சரணம்2 (ராகம்: காபி)

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சரணம்3 (ராகம்: சிந்துபைரவி)

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

மேற்கோள்கள்[தொகு]

  1. AstroVed. "குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்". www.astroved.com/articles/kurai-ondrum-illai-song-lyrics-tamil (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.

வெளி இணைப்புகள்[தொகு]