உள்ளிக்கோட்டை கோவில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உள்ளிக்கோட்டை கோவில்கள், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உள்ளிக்கோட்டையில் கீழ்காணும் கோவில்கள் உள்ளன

• அருள்மிகு சிந்தாமணி விநாயகர் கோவில்

• அருள்மிகு சிவன் கோவில்

• அருள்மிகு குழந்தாயி மாரியம்மன் கோவில்

• அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்

• அருள்மிகு காளியம்மன் கோவில்

• அருள்மிகு சேத்து மாரியம்மன் கோவில், மற்றும்

• அவரவர்களின் குலதெய்வக்கோவில்கள்

அருள்மிகு சிந்தாமணி விநாயகர் கோவில்[தொகு]

இக்கோவில் உள்ளிக்கோட்டையின் நடுத்தெவில் உள்ளது. கோவிலின் தோற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றவில்லை. நெடுநாட்களாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவில் 1988-ம் ஆண்டு, சூன் மாதம் 5-ம் திகதி உள்ளிக்கோட்டை இளைஞர் நற்பணிமன்றத்தின் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.இதன் பின்னர் உள்ளிக்கோட்டை கிராமவாசிகள் மற்றும் சிங்கையில் உள்ள பக்தகோடிகள் துணையுடன் திருப்பணி செய்யப்பட்டு 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் திகதி அன்று குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் சுமார்  பதினான்கு ஆண்டுகளுக்குப்பின்  2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் திகதி அன்று குடமுழுக்கு நடைபெற்றது.

விநாயகப்பெருமானின் முக்கிய பண்டிகையான விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது.

அருள்மிகு குழந்தாயி மாரியம்மன் கோவில்[தொகு]

இக்கோவில் உள்ளிக்கோட்டையின் கீழத்தெருவில் உள்ளது. கோவிலின் தோற்றம் 1930-ம் ஆண்டு என்று அறியப்படுகிறது . இக்கோவிலின் ஓட்டுக்கட்டடம் கட்டப்பட்டபொழுது உள்ளிக்கோட்டைக்கும் அருகில் உள்ள பரவாக்கோட்டைக்கும் ஊர்ச்சண்டை நடைபெற்றதாகவும், அதுபொழுது அருகில் உள்ள ஊரைச் சார்ந்தவர்கள் கோவிலையும், சிலைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து அவர்கள் மீளாத்துயரருற்றதாகவும், அதிலிருந்து விடுபட அவர்கள் தங்கள் செலவிலேயே சேதப்படுத்தியவற்றை மீளமைத்துக்கொடுத்ததாகவும் செவிவழிச்செய்திகள் கூறப்படுகின்றன.

Arulmigu Kuzhanthayi Mariyamman Temple-1, This photograph was taken in the morning from South east side of the temple- அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் கோவில்,உள்ளிக்கோட்டை- இந்த ஒளிப்படம் காலை நேரத்தில் கோவிலின் தென் கிழக்கு திசையில் இருந்து எடுக்கப்பட்டது
Arulmigu Kuzhanthayi Mariyamman Temple(Front view), அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் கோவில்,உள்ளிக்கோட்டை- முகப்புத்தோற்றம்
Arulmigu Kuzhanthayi Mariyamman Temple(Inside view),அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் கோவில்,உள்ளிக்கோட்டை- உட்புறத்தோற்றம்

குடமுழுக்கு[தொகு]

நெடுநாட்களாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவில் உள்ளிக்கோட்டை இளைஞர் நற்பணிமன்றத்தின் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டு 1988-ம் ஆண்டு, சூன் மாதம் 5-ம் திகதி குடமுழுக்கு நடைபெற்றது.இதன் பின்னர் உள்ளிக்கோட்டை கிராமவாசிகள் மற்றும் சிங்கையில் உள்ள பக்தகோடிகள் துணையுடன் ஓட்டுக்கட்டிடம் மாற்றியமைக்கப்பட்டு அவ்விடத்திலேயே தற்போதுள்ள பிரம்மாண்டமான கோவில் கட்டப் பெற்று 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ம் திகதி அன்று குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் சுமார்  பதினான்கு ஆண்டுகளுக்குப்பின்  2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ம் திகதி அன்று குடமுழுக்கு நடைபெற்றது. எல்லா விசேட நாட்களிலும் சிறப்பு பூசைகளும் வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

குளம்(தீர்த்தம்).[தொகு]

கோவிலின் மேற்கே ஆனையன் குளம் அமைந்துள்ளது.

வைகாசிப்பெருவிழா[தொகு]

ஆண்டுதோறும் வைகாசிப்பெருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாப்படுகிறது. உள்ளிக்கோட்டை வைகாசிப்பெருவிழா சுற்றுப்புறக்கிராமங்களில் வெகுப்பிரசித்தமான விழாவாகப் பார்க்கப்படுகிறது. வைகாசி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்பட்டு காப்பு கட்டப்படுகிறது. மறு ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இவ்வூரைச்சார்ந்த அனைவரும் குடும்பத்துடன் வந்து திருவிருவிழாவில் கலந்துகொள்கின்றனர். அபோது தங்கள் பால்யவயது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து அளவளாவுவது வழக்கம்.

அம்மன் வீதியுலா[தொகு]

திருவிழாவிற்கு முதல் நாள்(சனிக்கிழமை ) இரவு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு குழந்ததாயி மாரியம்மன் மேளதாளத்துடன் வீதியுலா பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வீதியுலாவின் போது உள்ளிக்கோட்டையிலுள்ள அனைத்து வீதிகளிலும் சென்று தன்னை தரிசிக்க, கோவிலுக்கு வர இயலாத வயதானவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் சிறு குழந்தைக்களுக்கு அவரவர் வீட்டின் முன்னே அவர்கள் வேண்டியதை அருளிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கோவிலில் எழுந்தருளி பக்தர்களின் நேர்த்திக்கடன்களை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்கிறார்.

காவடிகள்[தொகு]

திருவிழாவின்போது பக்தர்கள் விரதமிருந்து காவடிகள் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். அவற்றில் பால்காவடி, சலாகவடி, தேர்க்காவடி, அலகு காவடி, பறவைக்காவடி ஆகியவை முக்கியமானவைகளாகும். பெரும்பாலான காவடிகள் தெற்குத்தருவில் உள்ள சின்ன அரசமரத்தடியில் இருந்து புறப்பட்டு காவடி மேள ஓசைக்கு ஏற்ப, காவடி எடுத்துவருபவருடன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடிவர காவடி கோவிலை வந்தடையும். வரும்வழியெங்கும், கோடைவெயிலின் வெப்பத்தைத் தணிக்க, காவடி எடுத்துவரும் பத்தர்களின் கால்களில் பெண்கள் குளிர்ந்த நீரை ஊற்றுவார்கள்.

முடிக்காணிக்கை[தொகு]

பக்தர்கள் பலர் முடிக்காணிக்கைகளும் செலுத்துகின்றனர். இவ்வூரைச்சேர்ந்த பலர் தங்களின் குழந்தைகளுக்கு, முதல் முடிக்காணிக்கையை(முதல் மொட்டை) குழந்ததாயி மாரியம்மனுக்குச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள்[தொகு]

திருவிழாவின்போது, வெவ்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. மெல்லிசைப்பாடல்கள் (பாட்டுக்கச்சேரி), வழக்காடு மன்றங்கள்,பட்டிமன்றங்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அருள்மிகு சிவன் கோவில்[தொகு]

இக்கோவில் உள்ளிக்கோட்டையின் கீழத்தெருவில் உள்ளது . கோவிலின் தோற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றவில்லை. இக்கோவிலின் மதில் சுவர்களில் உள்ள கற்கள் மற்றும் கட்டிய முறை அருகில் உள்ள மகாதேவப்பட்டினம் என்னும் ஊரில் உள்ள பழைமையான (தற்போது சிதிலமடைந்துள்ள) கோட்டையின் மதில்சுவற்றை ஒத்துள்ளது. இக்கோவிலின் அமைப்பு மற்ற எல்லா சிவன் கோவில்களைப்போல முறையாகக் கட்டப்பட்டிருக்கின்றது.மூலவராக சிவபெருமான் கிழக்கு பார்த்து சிவலிங்கமாக வீற்றிருக்க எதிரே நந்திப்பெருமான் அமர்த்திருக்கின்றார்.

Ullikkottai Sivan Temple-Front view,அருள்மிகு சிவன் கோவில்,உள்ளிக்கோட்டை-முகப்புத்தோற்றம்
Ullikkottai Sivan Temple-Moolavar அருள்மிகு சிவன் கோவில்,உள்ளிக்கோட்டை-முலவர் சந்நிதி

சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், மூலவருக்கு வலப்புறத்திலும்(கோவிலின் தென்மேற்கு), முருகன் வள்ளி தெய்வானையுடன் தந்தைக்கு இடப்புறத்திலும்(கோவிலின் வடமேற்கு) தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், மூலவர் சந்நிதிக்கு வடக்கு திசையிலும், மூலவரின் சந்நிதியின் வாயிலில் மூலவருக்கு இடப்புறத்தில் தெற்கு நோக்கி தாயார் சந்நிதியும் உள்ளன. மூலவரின் சந்நிதியின் வெளிப்புறத்தில் விநாயகப்பெருமானின் சந்நிதிக்கு முன்பாக தட்சணாமூர்த்தி தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.தென்மேற்கு மூலையில் மடப்பள்ளி உள்ளது. கோவிலுக்கு கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் உள்ளன. கோவிலின் வடகிழக்கு மூலையில் சனீஸ்வரனும், சந்திரனும் தனித்தனியே எழுந்தருளியிருப்பது இக்கோவிலின் சிறப்பு.

தலவிருட்சம்[தொகு]

இக்கோவிலின் தலவிருட்சம் வில்வம். இம்மரங்கள் கோவிலின் தெற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இருதிசைகளில் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

குடமுழுக்கு[தொகு]

நெடுநாட்களாக தகுந்த பராமரிப்பின்றி இருந்த இக்கோவில் 1995-ம் ஆண்டு திருப்பணி தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் தாமதத்துடன் புனரமைக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள சந்நிதிகளுடன் சண்டிகேஸ்வரருக்கு அருகில் இராகுகால துர்க்கை சந்நிதியும், வடக்குவாயிலுக்கு அருகே ஆஞ்சநேயர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் , மணிக்கூண்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு 1999-ம் ஆண்டு சூன் மாதம் 25-ம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது.

குளம்(தீர்த்தம்)[தொகு]

கோவிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே சிவன் குளம் அமைந்துள்ளது. தற்போது பிரதோச வழிபாடுகளும், வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலதுர்கைக்கு சிறப்பு வழிபாடுகளும், மற்ற முக்கிய விசேட நாட்களில் சிறப்பு பூசைகளும் நடத்தப்படுகின்றன.

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்[தொகு]

இக்கோவில் அருள்மிகு பூமிநீளா பெருந்தேவித்தாயார் உடனுறை அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் உள்ளிக்கோட்டையின் வடக்குத்தெவில் உள்ளது. கோவிலின் தோற்றம் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றவில்லை.

Arulmigu Varatharajapperumal, Ullikkorttai-Kumbabishekamஅருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவில்,உள்ளிக்கோட்டை-திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அன்று இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டது

குடமுழுக்கு[தொகு]

இக்கோவிலுக்கு 1971-ம் ஆண்டு சூன் மாதம் ,24-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. பின் நெடுநாட்களாக தகுந்த பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த இக்கோவில் உள்ளிக்கோட்டை கிராமவாசிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை துணையுடன் 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் திகதி பூமி பூசை நடத்தட்டப்பட்டு சில ஆண்டுகள் தாமதத்துடன் இக்கோவில் முழுவதுமாக மீளமைக்கப்பட்டு பிரம்மாண்டமான முலவர் சந்நிதி, மகாமண்டபம், அர்த்த மண்டபம், தாயார் சந்நிதி, ஹயக்ரீவர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி,ஆஞ்சநேயர் சந்நிதி மற்றும் புதிய கொடிமரம்(36 அடி) ஆகியவை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, 2014-ம் ஆண்டு சூன் மாதம் ,9-ம் தேதி (வைகாசி மாதம் 26-ம் நாள்) குடமுழுக்கு நடைபெற்றது.

தற்போது சிறப்பு வழிபாடுகளும், மற்ற முக்கிய விசேட நாட்களில் சிறப்பு பூசைகளும் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]