உலகத் தமிழ்க் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.

கொள்கையும் செயற்பாடும்[தொகு]

  • பிற மொழி வல்லாண்மையிலிருந்து தமிழை மீட்டெடுப்பது கழகத்தின் முகாமையான கொள்கை ஆகும்.
  • உலகம் முழுக்கத் தமிழைப் பரப்புதல் வேண்டும்.
  • உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பெயரைச் சூட்டிக் கொள்ளல் வேண்டும்.
  • குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயரைச் சூட்டவேண்டும்.
  • தமிழர்கள் தம் இல்லங்களுக்கும் நிறுவனங்களுக்கும் தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும்.
  • இயன்றவரை அயல் சொற்களைக் கலவாது எழுதவும் பேசவும் வேண்டும்.
  • இல்லத்தில் நடைபெறும் எல்லாச் சடங்குகளையும் கோவில்களில் நடைபெறும் வழிபாடுகளையும் தமிழில் நிகழ்த்த வேண்டும்.
  • கல்வி அனைத்து நிலைகளிலும் தமிழில் அமைதல் வேண்டும்.

மாநாடுகள்[தொகு]

பறம்புக்குடி மாநாடு[தொகு]

கழகத்தின் முதலாண்டு நிறைவு விழாவும், திருவள்ளுவர் ஈராயிரமாண்டு நிறைவு விழாவும், பாவாணரின் திருக்குறள் தமிழ் மரபுரை வெளியீட்டு விழாவும் இணைந்த மாநாடு பறம்புக் குடியில் 1969ஆம் ஆண்டு திசம்பர் 28, 29 ஆகிய நாள்களில் நடந்தது.பெருஞ்சித்திரனார், குன்றக்குடி அடிகள், இலக்குவனார், வ. சுப. மாணிக்கம் புலவர் குழந்தை ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். தமிழ்க்குடிமகன் அம்மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்து செயல்பட்டார்.

மதுரை மாநாடு[தொகு]

உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாம் மாநாடு 1971 சனவரி 9, 10 ஆகிய நாள்களில் நடந்தது. அப்பாத்துரையார், குன்றக்குடி அடிகளார், மு.வில்லவத்தரையனார், க. ப. அறவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சை மாநாடு[தொகு]

தஞ்சாவூரில் பூக்காரத்தெருவில் ஓரு மாணவர் தங்கியிருந்த சிற்றறையில் உலகத்தமிழ்க் கழகத்தின் தஞ்சாவூர்க் கிளை 1967 அளவில் தொடங்கப் பெற்றது; பூண்டி திருமலர்க் கல்லூரி, தஞ்சை மன்னர் கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்கள் சிலர் சேர்ந்து இக்கிளையைத் தொடங்கினர்.தென்மொழி, மாணாக்கன் முதலிய இதழ்கள் வரவழைக்கப் பெற்று மாணவர்களிடையே பரப்பப் பெற்றன. மூன்றாம் மாநாடு தஞ்சையில் 1972 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31ஆம் நாளில் நடந்தது. தமிழன் பிறந்தகத் தீர்மானிப்புக் கருத்தரங்கம் நிகழ்ந்தது. இம்மாநாட்டில் நீ கந்தசாமி தலைமைத் தாங்கினார். கோ. துரைசாமி நாயுடு, வ. சுப. மாணிக்கம், கோ நிலவழகன், குடந்தை சுந்தரேசன், வீ ப.கா.சொல்லழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை மாநாடு[தொகு]

1978இல் சென்னையில் நான்காம் மாநாடு பாவாணர் முன்னிலையில் புலவர் அ. நக்கீரன் தலைமையில் நடைபெற்றது புலவர் இறைக்குருவனார் வரவேற்புரை ஆற்றினார். பெருஞ்சித்திரனார் நிறைவுரை ஆற்றினார். அறிஞர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

இதழ்கள்[தொகு]

உ.த.க.செய்திகள் தொடக்கத்தில் தென்மொழி இதழில் வெளிவந்தன. பின்னர் உ.த.க.வின் அதிகாரபூர்வ இதழாக முதன்மொழி தொடங்கப்பட்டு 1970 திசம்பர் 3 முதல் வெளி வந்தது. மீட்போலை என்னும் இதழும் சிறிது காலம் வெளி வந்தது.

பாவாணர் மறைவுக்குப் பின்னர் செயல்படாமல் இருந்த உலகத்தமிழ்க்கழகம் அரணமுறுவல், அன்புவாணன், நெடுஞ்சேரலாதன் போன்றோர் முயற்சியால் மீண்டும் செயல்பட்டு வருகிறது. முதன்மொழி இதழும் திங்கள்தோறும் வெளிவந்து கொண்டுள்ளது.

மேற்கோள் நூல்[தொகு]

"பாவாணர் நினைவலைகள்"--ஆசிரியர் தே.மணி (பாவாணர் பதிப்பகம்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகத்_தமிழ்க்_கழகம்&oldid=3590927" இலிருந்து மீள்விக்கப்பட்டது