உடப்பு
| உடப்பு | |
| மாகாணம் - மாவட்டம் |
வடமேல் மாகாணம் - புத்தளம் |
| அமைவிடம் | |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது சுற்றிவரச் சிங்கள ஊர்களால் சூழப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழியையும் தமிழ்க் கலைப் பண்பாடுகளையும் கட்டிக் காத்தபடி தனக்கே உரித்தான தனித்தன்மைகளுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இந்தியப் பெருங்கடலை அண்டிய நெய்தல் நிலத்திலே கடலையே தமது வாழ்முதலாய் (வாழ்வாதாரத்துக்காய்) நம்பியிருக்கின்ற இம்மக்களது வாழ்க்கைமுறை பல தனித்தன்மைகளைக் கொண்டது. இக்கிராம மக்கள் திரௌபதையைத் தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுகின்றார்கள்.
உடப்பு திரெளபதி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் 'பூமிதிப்பு' எனும் தீமிதிப்பு திருவிழா பெயர்பெற்றது. பெருமளவு வெளிநாட்டுக் குடிமக்களும் கலந்து கொண்டு இம்மக்களின் பக்தியை கண்டு ஆச்சரியப்பட்டு நிற்கின்றனர். தீமிதிப்பு நடைபெறுவதற்கு முன்பதாய் இளம் பெண்கள் குடங்களிலே கடல் நீரை மொண்டு கொண்டு வந்து ஆலயத்திலே விளக்கேற்றுவர்.
ஆராய்ச்சியாளர்களும் அதிசயப்படும் இந்தச் சம்பவத்தையும் மன்னார் கடலடிப் படுக்கைகளில் எரிபொருள் வளம் இருப்பதான செய்தியையும் இணைத்துப் பார்க்கலாம். இக்கிராமம் பெரும் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றது. எனினும் கடற்கரையிலிருந்து சொற்ப தூரத்திலே மண்ணைச் சிரட்டைகளால் கிண்டி சில அடிகள் ஆழத்திலேயே நன்னீரைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதும் அந்த நீர் நிரம்பிய 3 அல்லது 4 குடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக தலையிலே அடுக்கி பெண்கள் நடந்து செல்வதும் ஆச்சரியத்தைத் தரும் நிகழ்வுகள்.
தமிழர் செறிந்து வாழும் பகுதிகளிலேயே மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டுக் கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்களுக்கு உயிர் கொடுத்து ஆலயத்திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி வருகின்றனர்.
இக்கிராமத்தில் பிறந்த புகழ் பூத்தோர் [தொகு]
- உடப்பு பெரி. சோமாஸ்கந்தர்- வில்லுப்பாட்டுக்கலைஞர்
- உடப்பூர் வீரசொக்கன் - எழுத்தாளர்
- உடப்பூர் பரந்தாமன் - சோதிடர்
- வ.சிவலோகதாசன் - முதுநிலை விரிவுரையாளர்