இலக்கியவீதி இனியவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலக்கியவீதி இனியவன் (பிறப்பு: லட்சுமிபதி, 20 ஏப்ரல் 1942 - 2 சூலை, 2023 ) என்பவர் ஒரு தமிழக தமிழ் எழுத்தாளர் ஆவார். இலக்கியவீதி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் வழியாக இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகள் போன்றவற்றை செய்து இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இனியவனின் செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கலை அடுத்த விநாயகநல்லூரில் வீராசாமி பங்கஜமாள் இணையருக்கு மகனாக 20 ஏப்ரல் 1942 அன்று பிறந்தார். பள்ளி இறுதிவரை படித்துள்ளார். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சிறுவர் இதழ் நடத்திய போட்டிக்கு கதை எழுதி அனுப்பி முதற் பரிசு பெற்றார். அதைத் தொடர்ந்து நிறைய எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனின் முத்தி பல இதழ்களில் இவருடைய கதைகள் வெளிவரத் தொடங்கின. சிறுகதை புதினங்களுக்கான போட்டிகளில் பரிசுகளையும் பெற்றார். தன் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள பல தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்களை படிக்ககத் தொடங்கினார்.

இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகள் போன்றவற்றை செய்தை நோக்கமாக கொண்டு 1977, சூலை 10 ஆம் நாள் மதுராந்தகத்தில் இலக்கியவீதி என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் குறிக்கோளுரையாக வீடு தோறும் கலையின் விளக்கம்; வீதி தோறும் தமிழின் வெளிச்சம் என்பது இருந்தது. இந்த இலக்கிய அமைப்பின் சார்பில் மாதம் தோறும் இலக்கியச் சந்திப்புகள் நடத்தபட்டன. அதில் எழுத்தாளர்களை அழைத்து, அறிமுகப்படுத்தி கவிதை, கட்டுரை, சிறுகதை, திறனாய்வு, விவாதங்கள் என பலவகையான நிகழ்ச்சிகளை நடத்துயுள்ளார். சிறுகதை போட்டிகள் நடத்தபட்டு அதில் தேர்ந்தெடுக்கபடும் சிறுகதைகள் ஆண்டின் இறுதியில் நூல் வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டன. இவர் தனி இலக்கிய அமைப்பின் சார்பில் இலக்கியக் கூட்டங்களை மதுராந்தகத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் நடத்தியுள்ளார்.[1] மேலும் தமிழ்நாடு தாண்டி தில்லி, அந்தமான் தீவுகள் என தொடங்கி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளிலும் தன் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[2]

படைப்புகள்[தொகு]

இவர் 205 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 17 குறும்புதினங்களையும், 15 புதினங்களையும் எழுதியுள்ளார். வேடந்தாங்கல் என்ற பெயரில் பறவையியல் நூல் ஒன்றையும், இரண்டு பயண இலக்கிய நூல்களையும், உத்திரமேரூர் உலா என்ற பெயரில் செங்கல்பட்டு மாவட்டத்தின் அகநாட்டு வரலாற்று நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.[3]

விருதுகள்[தொகு]

  • அமெரிக்க தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் மாட்சிமை விருது
  • வேலூர் கம்பன் கழக விருது
  • கண்ணப்பன் அறக்கட்டளையின் இலக்கிய நாயனார் விருது

இறப்பு[தொகு]

இலக்கியவீதி இனியவன் மூப்பினால் தன் 81வது வயதில் 2, சூலை, 2023 அன்று இறந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. வல்லிக்கண்ணன், வாழ்க்கைச் சுவடுகள், நூல் பக்கம் 205, முதல் பதிப்பு ஆகஸ்டு 2001
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - வாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
  3. லக்ஷமி பாலசுப்பிரமணியன், கடுவெளி, முத்திரை பதித்த முன்னோடிகள்: இலக்கியவீதி இனியவன்! தினமணி 29, சூலை, 2018
  4. "இலக்கிய வீதியில் கரைந்து போன இனியவன்! - Dhinasari Tamil". dhinasari.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-07-04. பார்க்கப்பட்ட நாள் 2023-07-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கியவீதி_இனியவன்&oldid=3751818" இலிருந்து மீள்விக்கப்பட்டது