அச்சிடல்
அச்சிடல் என்பது, எழுத்துக்களையும், படிமங்களையும், அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி மையினால் காகிதங்களில் பதிவு செய்தலைக் குறிக்கும். இது பல இடங்களில் பெரிய அளவிலான தொழில் செயற்பாடாக இருக்கின்ற போதிலும், சிறிய அளவிலும் அச்சிடல் நடைபெற்று வருகின்றது. அச்சிடல், பதிப்புத் தொழிலின் ஒரு முக்கிய பகுதியாகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, உலகில் எல்லா மொழிகளிலுமாகச் சேர்ந்து மொத்தம் 45 டிரில்லியன் பக்கங்கள் அச்சாகின்றன[1]. 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மட்டுமே 30,700 அச்சடிப்பு நிறுவனங்கள் இருந்தன. இவை 112 பில்லியன் டாலர் வணிகமாக இருந்தது[2]. அச்சில் இருந்து இணையத்துக்கு நகர்ந்தவை அமெரிக்காவில் 12.5%.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
மர அச்சு முறை [தொகு]
இது எழுத்துக்கள், படிமங்கள், வடிவுருக்கள் ஆகியவற்றை அச்சிடுவதற்காக கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகப் பயன்பட்ட ஒரு முறையாகும். இது மிகப் பழங்காலத்திலேயே சீனாவில் தொடங்கியது. துணிகளில் அச்சிடுவதற்குப் பயன்பட்ட இம்முறை பின்னர் தாள்களில் அச்சிடுவதற்கும் பயன்பட்டது. துணிகளில் அச்சிடும் ஒரு முறையாக இது பயன்பட்டதற்கான மிகப்பழைய சான்று சீனாவில் கிபி 220க்கு முந்தியது. எகிப்தில் இது கிபி நான்காம் நூற்றாண்டுக்கு உரியது.
கிழக்காசியா [தொகு]
கிபி 593 ஆம் ஆண்டளவில் முதலாவது அச்சியந்திரம் சீனாவில் உருவாக்கப்பட்டது. முதல் செய்தித்தாள் பெய்ச்யிங்கில் கிபி 700 இல் கிடைக்கிறது. இது மர அச்சுகளைப் பயன்படுத்தியது. மர அச்சு முறையில் அச்சிடப்பட்டதும் படங்களுடன் கூடிய காலத்தால் முந்தியதுமான முழுமையான நூல் சீனாவில் அச்சிடப்பட்ட வைர சூத்திரம் எனப்படும் பௌத்த நூலாகும். இது கி.பி 868 இல் அச்சிடப்பட்டது. சீன அச்சாளரான பி ஷெங் என்பவர் தனித்தனியான அச்சுக்களை 1041 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இவர் கணிமண்ணால் அச்சுக்களைச் செய்ததால் அவை இலகுவாக உடையக்கூடியனவாக இருந்தன. வாங் சென் என்பவர் 1298 இல், இவ்வாறான அச்சுக்களை மரத்தினால் செய்தார்.
உசாத்துணை [தொகு]
- ↑ "When 2% Leads to a Major Industry Shift" Patrick Scaglia, August 30, 2007.
- ↑ பார்ன்சு அறிக்கைகள்