வேட்டையாடிய பிரான் கோயில்

ஆள்கூறுகள்: 12°30′58″N 77°47′55″E / 12.51611°N 77.79861°E / 12.51611; 77.79861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டையாடிய பிரான் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):பேட்ராய சாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவு:தேன்கனிக்கோட்டை
ஆள்கூறுகள்:12°30′58″N 77°47′55″E / 12.51611°N 77.79861°E / 12.51611; 77.79861
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:போசளக் கட்டிடக்கலை

வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இந்த கோவிலை பற்றிய சிறப்புகளை ஸ்கந்த புராணம் எனும் நூலில் 8-ஆம் அத்தியாத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தலவரலாறு[தொகு]

சுமார் 3000 வருடங்களுக்கு முன்பு கண்வ முனிவர் தவம் செய்தபோது தேவகண்டன் என்ற அரக்கன் புலியுருவில் வந்து அவர் தவத்துக்கு இடையூறு செய்தான். அப்போது கண்வ முனிவர் பெருமாளை வேண்டினார். பெருமாள் கண்வ முனிவர் முன் தோன்றி "டெங்கனி" என்ற கட்கத்தை கொண்டு தேவகண்டன் என்ற அரக்கனை வேட்டையாடி கொன்றதால் இங்குள்ள பெருமாளுக்கு 'வேட்டையாடிய பிரான்' எனப் பெயர் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

தேன்கனிக்கோட்டை என பெயர் வரக் காரணம் பெருமாள் 'டெங்கனி' என்ற கட்கத்தை கொண்டு வதம் செய்ததால் டெங்கனிபுரம் என்ற பெயர் வந்ததாகவும் பின் டெங்கனிபுரத்தில் இருந்த தரை கோட்டையால் டெங்கனிக்கோட்டை என்ற பெயர் பெற்றதாகவும் அதன் பின் அந்த பெயர் மருவி தேன்கனிக்கோட்டை என்று தற்போது அழைக்கப்படுகிறது.

மங்கலாசாசனம்[தொகு]

இத்திருப்பதிக்கு ஏற்றம் செய்து உபந்யாச ரத்னேயாதி அநேகபிருதாந்திகரான வித்வான் பூவராஹாச்சார்ய சுவாமிகள் மங்களாசாசனம் செய்திள்ளார்.[1]

கோயிலின் அமைப்பு[தொகு]

வேட்டையாடிய பிரான் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காணப்படுகிறார். இராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. ஆனுமாருக்கு தனிச் சன்னதியும் உள்ளது.

வேணுகோபாலன், ருக்மிணி, சத்யபாமா உடன்சந்நிதியில் காணப்படுகின்றார். ஆழ்வார்கள் சன்னதியும், இராமானுசருக்கு ஒரு தனி சன்னதியும் உள்து.[2]

திருவிழா[தொகு]

இக்கோயிலில் கன்னட பஞ்சாங்கத்தின்படி திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிர என பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் விழாவில் கூடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியன்று திருமஞ்சன உற்சவம் நடக்கிறது.மறுநாள் உறியடி உற்சவம் நடக்கிறது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி.1 ,தேன்கனிக்கோட்டை வேட்டராயன் கோயில்- பேராசிரியர் தி.கோவிந்தன்
  2. http://paropakaara.blogspot.in/2012/06/denkanikottai.html
  3. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 49-53.