புதூர்க் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதூர் குடைவரை என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் ”66 புத்தூர்” என்ற சிற்றூரில் ”அசரிர் மலை” என்ற குன்றின் அடிவாரத்தில் உள்ள ஒரு குடைவரையாகும். இக்குடைவரையானது ஒரு சிறிய பாறை ஒன்றைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்ற அமைப்பானது தமிழகத்தில் வேறெங்கும் காண இயலாதது. குடைவரைக்கான பாறை ஒற்றைக் கற்கோவில் அமைப்பது போன்று மேலிருந்து கீழாகச் செதுக்கப் பெற்றுள்ளது. ஆனால், ஏனைய ஒற்றைக் கற்கோவில்களில் உள்ள கருவறைக்கு மேலான விமான அமைப்பின்றி மேற்பகுதி முழுதும் சமமாக்கப்பட்டு அதனுட்பகுதி பெரும் தொட்டியைக் குடைவது போன்றே சதுரமாகக் குடையப் பெற்றுள்ளது. கருவறையின் பக்கங்கள் சுவரைப் போல செதுக்கத் தொடங்கப் பெற்றுள்ளது. குடைவரையின் உள்ளே செல்வதற்காக அதன் முன்பகுதி ஏறத்தாழ இரண்டடி விட்டத்தில் குடையப்பட்டுள்ளது. கருவறையின் உள்ளே ஆண்,பெண் உருவங்கள் இரண்டு மணிமுடிகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன. பல்லவர் கோவில்களில் பெரிதும் உள்ள சிவன், உமையுடன் கந்தன் இணைந்துள்ள சோமாஸ்கந்த வடிவத்தின் தொடக்க வடிவாக இதனை ஊகிக்கலாம்.

தற்காலத்தில் இக்குடைவரையின் உள்ளே ஒரு அம்மன் சிலை வைக்கப்பெற்று வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. கல்வெட்டுகள் ஏதும் காணப்பெறவில்லை.  பல்லவர், பாண்டியர் கலைப்பாணி போன்றில்லாமல் இது புதிய வடிவில் இருப்பதாலும், பல்லவர் மற்றும் சோழர்களின் சிற்றரசாக இருந்த பாண மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாணர்களின் தலைநகராக விளங்கிய திருவல்லம்’ மற்றும் அரிஞ்சய சோழன் பள்ளிப்படையுள்ள மேல்பாடிக்கும் அருகில் இருப்பதாலும் இது பாணர்களின் முயற்சியாக இருக்கலாம்.

உசாத்துணை[தொகு]

  • சு. இராசவேலு, அ. கி. சேஷாத்ரி - தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் - பக்கம் 92,93
  • ரா. பி. சேதுப்பிள்ளை - தமிழகம் ஊரும் பேரும் - பழனியப்பா பிரதர்ஸ் - பக்கம் -96
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்க்_குடைவரை&oldid=2620269" இலிருந்து மீள்விக்கப்பட்டது