வீ. ஏ. கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீ. ஏ. கபூர் என அழைக்கப்படும் வீ. அப்துல் கபூர் (இறப்பு: 1 ஏப்ரல் 2006) கிழக்கு மாகாணத்தில் தோப்பூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த வானொலி அறிவிப்பாளர். ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளர், நிகழ்ச்சித்தயாரிப்பாளர், கட்டுப்பாட்டாளர், பணிப்பாளர் என்ற பதவிகளை வகித்தவர். 1953ல் இலங்கை வானொலி அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவரே முதலாவது முஸ்லிம் வானொலி அறிவிப்பாளராவர். தமிழ் தேசிய சேவையிலும் பின்னர் முஸ்லீம் சேவையிலும் பணியாற்றிய இவர் முஸ்லீம் சேவையில் பல நாடகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

இவரது வாழ்க்கை பற்றி[தொகு]

கல்லடி உப்போடையிலுள்ள சிவானந்த வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1949ல் இடை நிலை, உயர் கல்வி பெறுவதற்காக கொழும்பு சாகிராக் கல்லூரியில் சேர்ந்தார். சிறந்த கல்விமான் ஆன ஏ. எம். ஏ. அஸீஸ் அப்போது ஷாகிராக் கல்லூரியில் அதிபராகவும், பேராசிரியர் கா. சிவத்தம்பி, தினகரன் பிரதம ஆசிரியராக இருந்த ஆர். சிவகுருநாதன் இவரது சக மாணவர்களாகவும் இருந்தார்கள்.

ஒலிபரப்புத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞனான வீ. ஏ. கபூர் தனது கல்லூரி அதிபர் அஸீஸ் அவர்களின் உதவியினால், வானொலியில் நடைபெற்ற 'எங்களூர்' என்ற நிகழ்ச்சியில் தனது ஊரான 'தோப்பூர்' பற்றிய தனது பிரதியை வாசித்து வானொலிக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து பெப்ரவரி 20, 1953ல் செய்திகள் வாசிப்பவராக, அறிவிப்பாளராக அறிமுகமானார்.

'20 கேள்விகள்', 'குறுக்கெழுத்துப் போட்டி', மலயகக் கலைஞர்கள் பங்பற்றிய 'குதூகலம்' போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழ்ங்கியவர். வானொலியில் நேர்முகவர்ணனை செய்வதில் புகழ்பெற்ற வி. ஏ. கபூர், அணிசேரா நாடுகளின் மகாநாடு, சுதந்திர தின விழாக்கள் என்பவனற்றில் நேர்முக வர்ணனையாளராக பணியாற்றினார்.

1967க்குப் பின்னர் முஸ்லீம் நிகழ்ச்சிப் பிரிவில் இணைந்து கொண்ட இவர் கட்டுப்பாட்டாளராகவும், பணிப்பாளராகவும் சேவையாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._ஏ._கபூர்&oldid=3671776" இலிருந்து மீள்விக்கப்பட்டது